தந்தை அகத்தியர் திருவடிகள் சரணம் !!!






தனுர் மாதம் மார்கழி மாதம்  அதிகாலை பிரம்மமுகூர்த்தம் அதி உன்னதமானது .ஓசோன் படலம் பூமிக்கு இக அருகில் வரும் மாதம் என்கிறார்கள். அதி காலை எழுவது அதி உன்னதம்.உடலில் பிராண சக்தியை  அதிகரிக்கும் முயற்சியினை  தொடர்ந்து செய்யவேண்டியது அவசியமாகிறது. நாடி சுத்தி ,பிரணாயமம் செய்து  கொஞ்சம் கொஞ்சமாக பிராண சக்தியினை அதிகபடுத்த வேண்டும்.இந்த மாதத்தில் பிராண சக்தியினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல் அது  வரும் ஒரு வருடகாலத்திற்கு இந்த உடலை பாதுகாத்து, பல நோய்களிலிருந்து விடுவித்து ,உடலினை ஆரோக்யத்தோடு வைக்க உதவும் ஒரு அற்புத மாதம் இது.  அடிக்கும் குளிருக்கு ஏதாவது ஸ்வட்டர் போட்டுக்கொண்டாவது நம்மை நாமே பாதுகாத்து கொண்டு ,எளிய யோகாசனம் ,பிரணாயமம் செய்வது மிக அவசியமாகிறது.இயற்கையே மிக அதிக அளவில் இறை சக்தியை கொடுக்கும் அதி அற்புத மாதம் .ஏதேனும் ஒரு வழியில் இறை தேடுதல் மிகநன்மை பயக்கும்.இறையை உணர அதி அற்புத மாதம்.இறை மானுடர்களுக்கு உதவும் அதி அற்புத மாதம்.அந்த அளவிற்கு மிக உன்னதமான மாதம் இது.


தந்தையின்  அருள் ஆசிகள் பெறுவது எவ்வாறு ..? யாம் உணர்ந்த அனுபவம் இங்கே . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் இருக்கலாம் எம்மை பொறுத்த வரை யாம் உணர்ந்து  அனுபவித்த நிகழ்வுகளை  இங்கே எழுதுகிறோம்.





எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உலகை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவது,உள்ளம் நிறைந்த அன்புடன் ,உள்ளம் நிறைந்த அன்பு என்றால் அதற்கு ஈடு இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை ,அன்பு எனும் ஆற்றல் மென்மையான பக்தி கலந்த ஒரு ஆற்றல்.ஒரு  குளுமையான ஒரு ஆற்றல் ,ஒரு ஜீவ காந்த அலை ,அதை விரும்பி நாமே உள் நிரப்பி  அது உள்ளே நிரம்பும் போதே நம்மை சுற்றிலும் மெல்ல மெல்ல அலையாக பரவுகிறது முதலில் உள்ளம் நிறைகிறது பிறகு நம்மை சுற்றிலும் நாம் இருக்கும் இடம் சுற்றிலும் வெண்பனி போல படர்ந்து அமைதியை நிரப்புகிறது .ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி கவர்ந்து இழுக்கிறது.இந்த அலை  உள்ளம் நிறைகிற போதே கண்கள்  நீர் சுரக்கும் தன்மை பெறுகிறது பிறகு குளமாகி நீர் ஊற்று போல பெருக்கெடுக்கிறது .கண்கள் அதில் கருணை தாமாகவே வருகிறது அது அன்பால் ஆனந்தத்தால் நிறைகிற போது, நீர் தாரை தாரையாக வழிகிறது .இப்படி ஒரு தன்மைக்கு ஒரு நிலைக்கு வருகிற போது அன்பால் ஈர்க்கிறது சர்வ சகல ஜீவராசிகளையும் .இங்கே தந்தையை வணங்க வேண்டும் அருள் ஆசிகள் பெற வேண்டும் எனும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக  வலுபெற்று, அது அய்யாவின் ஆளுமைபுலத்திற்கு  எடுத்துச்செல்லப்படுகிறது .அய்யாவின் அருள் ஆசிகள் பெற வழிவகுக்கிறது.இது போன்ற நிலைக்கு யாம் பல முறை சென்றிருக்கிறோம் .எம்முடைய பூஜை அறையில் ஒவ்வொரு நாளும் அன்பை நிரப்ப முயல்வேன் .பல முறை அன்றாட நிகழ்வுகள் காரணமாக ஒரு கடமை போல பூஜை முடியும் .ஒரு சில நாள் மிக அற்புதமான நாளாக அமைகிறது. எப்பொழுதெல்லாம் யாம் எமை மறந்து அன்பால் நிறைந்து இறை தேடுகிறோமோ அப்பொழுதெல்லாம் ஒரு மகான் சூட்சும அலையில் கலந்து எமது நெற்றியிலே ஒரு விபூதிகொண்டு ஒரு சிறிய அழகான நாமம் போல இட்டுவிட்டு செல்கிறார்.இன்று வரை இது தொடர்கிறது .இது வரை இது எவ்வாறு நிகழ்கிறது என்று தெரியவில்லை .யார் இந்த  மகான் ? எவ்வாறு வருகிறார்கள் ?  எப்படி இது  நிகழ்கிறது என்று இன்று  வரை துளி அளவு கூட யூகிக்க முடியவில்லை  ,அது எப்படியென்றும்  தெரியவில்லை.எதையும் எம்மால் உணரமுடியவில்லை .ஆனால் பூஜை முடித்து முக கண்ணாடியை பார்க்கும் பொழுது மட்டுமே  யாம் இதை உணர்கிறோம் . இந்த அழகிய திருநீறு நாமம்   யாம் பெற்ற நாளெல்லாம் ஒரு அற்புத நாள் .எப்பொழுதெல்லாம்  எமை மறந்து அன்பால் நெகிழ்ந்து இறை உணர்கிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த காட்சி இந்த நிகழ்வுகள் நடந்தேறுகிறது.இந்த பூஜையில் மகான் மகிழ்ந்து இந்த திரு நாமம் இடுகிறார்.இன்று இந்த மகான் வர வேண்டும் அவர் எமக்கு மீண்டும் இந்த திருநீறு  நாமம் இட வேண்டும் என்று யாம் நினைத்து  பூஜை செய்யும் போதெல்லாம் அவர் வருவதில்லை .இந்த நிகழ்வுகள் நடப்பதில்லை. எதிர்பார்ப்போடு யாம் செல்லும் போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லை.அவர்கள் மகான்கள், அவர்கள் எப்பொழுது நினைக்கிறார்களோ அப்/பொழுது தான் வருகிறார்கள்.ஆக நம்மை மறந்து மனதின் அலை சுழல் குறைந்து ,எந்த எதிர்பார்ப்பும் இன்றி , இறையில் மூழ்க மகான்கள் வருகிறார்கள்.வந்து அருள் ஆசிகள் செய்கிறார்கள்.என்பது யாம் அனுபவத்தில் கண்ட உண்மை.






யாம் சதுரகிரியில் சந்தித்த மகான்  தந்தை அகத்தியர் அய்யாவின் ஒரு அற்புத  சீடர்.அகத்தியர்  அய்யாவின் அன்பு சீடர்.யாம் பார்த்தது ஒரு மனித வடிவில் இன்றும் அந்த நிகழ்வுகள், காட்சிகள் எம்முள் இப்பொழுது நினைத்தாலும் மனதிற்கு சுகமாக விரிகிறது அற்புத மறக்க முடியா வாழ்வின் தருனமாக கருதுகிறோம்.யாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே யாம் சொல்வோம்.அகத்தியர் அய்யா சொன்னால் மட்டுமே வருகிறார்.அய்யா என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே செய்கிறார். ஒரு சீடன்  என்பவர்  எந்த அளவிற்கு குருவிடம் சரணாகதி அடைய வேண்டும் என்பதிற்கு ஒரு அற்புத உதாரணம் இந்த மகான் . செகுட்டு சித்தர் என்று அழைக்கப்பட்ட வெண்மை பைஜாமா உடையணிந்த மகான்.தம்மை முற்றிலும்  தன குருவுக்கு  அர்பணித்த உன்னத மாபெரும் சீடர்.இந்த மகானின் அர்பணிப்புக்கு முன்னாள் யாமெல்லாம் ஒரு கால் தூசிகூட கிடையாது .அந்த அளவிற்கு ,குருவின் திருவடிபணிதல் ,சதா சர்வ காலமும் குருவின் திருவடியில் சரணாகதி என்று தம் வாழ்வெல்லாம் சுவாச மூச்சாக அர்பணித்த ஒரு மாபெரும்  சத்திய உண்மை சீடர்  இந்த மகான். எமது என்ன ஓட்டங்களை எல்லாம் தூள் தூளாக்கியவர்.இங்குமங்கும் ஓடி ஓடி  உணவினை பறிமாறி,ஓடினார் என்று சொல்வதை விட எடைகுறைவாக இருப்பதால் பறந்தார் என்றே சொல்லவேண்டும்,எமக்கும் எம்முடன் வந்தவர்களுக்கும் 
 அந்த அவ்வளவு  உச்சி மலையில்  உணவு பறிமாறி ,ஐயா தாங்கள் சாப்பிடவில்லையா என்று கேட்டதற்கு ,ஏதோ எங்கள் விருப்பத்திற்கு  இணங்க அவரும் உணவினை எடுத்துக்கொண்டார் ,என்ன உணவு தெரியுமா ...ஒரே ஒரு அப்பளத்தை நாளில் ஒரு பங்காக பிரித்து அதில் கொஞ்சம் எடுத்து எங்கள் முன்னரே அவர் உண்டார் ,அதோடு நான்  உணவருந்திவிட்டேன் , என்று சொல்லிவிட்டு சும்மா  பறக்கிறார்  இங்குமங்கும் . தம்மை முழுவதும் ஒரு மொத்த சரணாகதியாக அர்ப்பணித்த ஒரு மாபெரும் மகான்.இந்த மகானை யாம் மீண்டும் காண வேண்டும்  அவரோடு பேசவேண்டும்  என்று  ஆவலுடன் பல முறை சதுரகிரிக்கு சென்றிருக்கின்றோம்.ஆனால் மகானை பார்க்க இயவில்லை.மனித தேடுதலுக்கு அப்பார்ப்பட்டவர்கள்.அவர்கள் எப்பொழுது அனுக்கிரகம் செய்ய நினைகின்றார்களோ அப்பொழுது  சரியாக வந்து ஆசிகள் தருகிறார்கள்.





சமீபத்தில் அகத்தியரின் சீடர் ,மகான் கனவில் வருகிறார்.செகுட்டு சித்தர் என்று அழைக்கப்பட்ட சதுரகிரி சித்தர் வருகிறார் .இந்த மகானை பார்த்து கிட்டத்தட்ட பனிரெண்டு   வருடங்கள் ஆகிவிட்டது. பார்த்ததுமே அழுகை வந்து விடுகிறது ,ஏங்கி ஏங்கி அழுகிறேன் , விம்மி விம்மி  அழுகிறேன் "...அய்யா உங்களை பார்க்கவே முடியவில்லையே , எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது .."என்கிறேன் அதற்கு மகான் "... நீங்கள் பூஜைசெய்யும்  போது அய்யாவிடம்  சொல்வதை பார்த்துக்கொண்டு  தானே வருகிறோம்..." என்கிறார்.

உன்னத சித்தர் மாபெரும் மகான்.அதே பைஜாமா உடை .அகத்தியர் அய்யாவை வேண்டினால் போதும்   இந்த அகத்தியர் சீடர்  வந்துவிடுகிறார் .எந்த அளவிற்கு அய்யாவின் உன்னத சீடர் என்பது புரிகிறது.இவர்கள் மகான்கள்.மாபெரும் உன்னத இன்றும் என்றென்றும் வாழும் ஆத்மாக்கள். மனித எண்ணங்கள் நிகழ்வுகள் இவர்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கிறது.இவர்களுக்கு இறை இட்ட கட்டளையை இம்மி கூட மாறாமல் அப்படியே வந்து செய்கிறார்கள்.காலமும் நம் கர்ம வினை பூர்வஜென்ம புண்ணியமும், விடாமுயற்சியும் இருந்தால் இது  போன்ற மகான்களை தரிசனம் செய்வது சாத்தியமாகிறது .உடலுக்கு  போதிய அளவு தாங்கும் சக்தியில்லை எனில் ,அவர்கள் தரும் சூட்சும சக்திகளை கிரகிக்கும் தன்மை பெறவில்லை எனில், கனவில் வந்து அருளாசி செய்கிறார்கள்.இம்மி அளவு கொடுத்தாலும் அதை திருப்பிகொடுத்துவிடுகிறார்கள்.அற்புத மகான்கள் உன்னத மகான்கள். தந்தை அகத்தியர் அய்யாவை  விடா முயற்சியுடன் வணங்கினால் ,அதற்கு  பதில் தரும் விதமாக வந்து விடுகிறார்கள் இந்த மகான்.




எமது அனுபவத்தில் அய்யாவின் ஒரு அருமையான நிகழ்வு எம் வாழ்வில் நடந்தேறியது  என்றே சொல்வேன்.ஈர்ப்போடு முழு நம்பிக்கையோடு இருந்த முயற்சிக்கு அய்யாவின் அருள்ஆசிகள் என்றே கூறுவேன். ஒரு முறை  தந்தையை தரிசிக்க  எண்ணி பல  முயற்சிகள் செய்தேன்.ஒம் அகத்தீஸ்வராய நமஹா என்று முடிந்த வரை எழுதுவது.சதா  நினைவு எட்டிய வரை ,அன்றைய நாள் நிகழ்வுகள் எமக்கு இது போன்ற இறை எண்ணங்களை  எண்ணுவதில்  இடையூறு செய்யாமால் நன்மை பயக்கும் விதமாக இருந்த நேரமெல்லாம் நாட்களெல்லாம், தந்தையை பற்றியே நினைத்தல் ,எண்ணுதல் ,தந்தையின் பெருமைகள் எண்ணி  பூரித்து பெருமிதம்  கொள்ளல்  என , இது போன்ற சிந்தனையுடன் இருந்த காலம் .அவ்வாறு இருந்த ஒரு நாள் ,அதில் தந்தையை  நினைத்துக்கொண்டே படுத்துவிட்டேன் எம்மை அறியாமல் .கனவிலே தந்தை அகத்திய மகரிஷிகள் வருகிறார்கள் .வந்து தலையிலே ஒரு குட்டு குட்டிவிட்டு செல்கிறார்கள்.கனவுகள் தான் ஆனால்  அன்றே அப்பொழுது  நடப்பது போல எந்த வித மாறுபாடுமின்றி இருக்கின்றது .பழம் பெரும் தமிழ், நீண்டு நெடிய வாரத்தைகள் இன்றைய தமிழுக்கு  முற்றிலும்  மாறுபட்டு ,எம்முள் அது தாமாகவே பாடல்களாக அருவி போல பிறக்கின்றது அதை முனுமுனுத்தவாறு பாடல்கள் பாடிக்கொண்டேஇருக்கின்றேன் .தமிழின் செம்மை ,அழகிய வரிகள் ,அய்யாவின் அற்புத உன்னத கருத்துக்கள் கொண்ட பொக்கிஷமாக ஒரு பூ பூப்பது போல மலர்கிறது ,தமிழாக, தமிழ் வார்த்தைகளாக, தமிழ் பாடல்களாக .நெடு நேரம் தொடர்ந்தது இந்த நிகழ்வு.இந்த செம்மை தமிழ் பிறந்த காலம் ,இயற்கையோடு ஈர்ப்பாக இருக்கிறது.அங்கே எண்ண ஓட்டமெல்லாம் இல்லை ,திடமான இயற்கையோடு இயந்து அருமையாக இருக்கிறது.தமிழ் வருடி தரும் காலமும் அதன் ஆற்றலும் சுகமாக இருக்கின்றது.



சிவத்தை என்றும் வணங்க  , சிவத்தில் தன்னலமற்ற ஈடுபாடு செய்ய,சிவ  வழிபாடு செய்ய , அங்கே அய்யாவை தரிசிக்கும் வாய்ப்பும் ,அய்யாவின் அருளாசிகளும் கிடைக்கிறது.

தந்தையை வணங்குவது ,தந்தையின் அருள் ஆசிகள் பெறுவது என்பதெல்லாம் மிக எளிது அல்ல. சோதனைகள் வருகிறது.அதில் எல்லாம் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடிகிறது.நன்கு சோதனைகள் செய்து ,அதன் பின்னரே  அய்யாவின் அருள் ஆசிகள் கிடைக்கிறது


முடிந்த வரை மனதாலோ அல்லது உடலாலோ அல்லது பொருளாலோ  பிற உயிர் வாழ உதவி செய்வது அய்யாவின் ஆசி அலைகளை ஈர்க்கிறது.

சதா சர்வ காலமும் தந்தையை நினைத்தல் ,தந்தையின் பாடல்களை படித்தல்,
அய்யாவின் அருள் அலைகளை ஈர்க்கின்றது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்