உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்....!!!



உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்

கள்ளப் படாத களிவந்த வான்கருணை

வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

 இறை அமிர்தம் பொங்குகிறது மாணிக்க வாசக பெருமானாரின் திருவாசகத்தில் .ஒரு வரியில் மறைபொருளாக மறைந்து அமிர்தத்துளி போல தெறித்து ஓடி அருள் மழை  பெய்யவைத்து  பேரானந்தம் கொள்ளவைக்கிறது.ஏதேனும் மனம் விரும்பும் ஒருவழியில் பாடலாகவோ  உணர்ந்து படித்தல், ஆழ்ந்து சிறிதே அதில் தம்மை  ஈடுபடுத்தி கலந்தால் பெருஒளியின் கருணை ததும்பும் பேரானந்தத்தை  உணரலாம் .மனதால்  எதை வேண்டுமானாலும்  நினைக்க  இயலும்.  ஆனால்   எதற்குமே  புலப்படாத ஒன்று ,உருவமா  அருவமா  சின்னஞ்சிறிய தோற்றமா இல்லை  மாபெரும் வடிவமா என்று  எதுவுமே  தெரியாதே எம் பெருமானை பற்றி  .. துளி அளவும் தெரியாதே  .உள்ளத்திலே நினைக்க இயலாத திருவுருவமாகிய எம்பெருமானை எப்படி  நினைக்க இயலும் ?

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் ---மனத்தால் நினைக்க இயலாத ஒரு மாபெரும் பேராற்றலை எப்படி நினைக்க முடியும் ,உருகி உருகி உன்னுள் ஆழ்ந்து ஆழ்ந்து பெருமானின் பாடல் வரிகளை பிடித்துக்கொண்டு  கொஞ்சம்  கொஞ்சமாக  உள்செல்லச்செல்ல ,முதலில் ஒரு ஈர்க்கும்  தன்மை  வருகிறது .மேலும் செல்லச்செல்ல   மனம்  அடங்கி  சற்றே  அமைதி  நிலையில்  திளைக்கிறது .  எப்படி  இந்த ஈர்ப்பு  வந்தது  என்பதை  உணர  உணர  .அதன் மூலமாக  பெருமானின்  சிறு துளி  உணர்வு  பெருக்கெடுக்கிறது  பேரொளியும்   பெருங்கருணையும்  பெருமகிழ்ச்சியும்  குடிகொண்ட  திருவுருவம் ,இது  இப்படித்தான் இருக்குமோ  என்று அதை எண்ணுவதால்,  அதை  அப்படியே  எம் உள்ளத்துள்  நிரப்புவதால், எமக்குள்ளும்  அந்த  ஆனந்தம்  நிறைகிறது .சிறு  பிம்பமாய்  கேட்பாரற்று  கிடந்த  எம்  உள்ளம்  தற்பொழுது   அன்பால்  நிறைந்து  வழிகிறது .நிறைந்து  வழிந்து எம் உள்ளம்  உப்பி  பெருக்கிறது  அன்பால்  நெகிழ்ச்சியால்  பேரானந்தத்தால்  மேலும்  எம் அருகில்  இருக்கும்  செடி கொடி   மரம்  என  பாரபட்சமின்றி பரவுகிறது . 




 உள்ளமே  படாத  திருவுருவம்  ..உள்ளம் பட்டால்  ஒருவேளை  அது இது தானே  என்று  ஒரு சலிப்பு  வந்துவிடுமோ   அல்லது அதன் தூய  தன்மை   மாசுபடுமோ உள்ளமே  அறியாத  மாசற்ற  தூய  இறை நிலை   பேரொளி .இந்த  பிரபஞ்சத்திலே  தூய்மை  யாதெனில்  இறை ஒன்றே .மற்றதெல்லாம்  மாசுடையது .தும்மைப்போன்ற பளிச்சிடும்  மின்னல் போன்ற  அதீத  தூய  உணர்வு  என்று  நமக்கு  தெரிந்த  ஒன்றை உவமை  கூறலாம்  ஆனால்  எதுவும்  இதற்கு  நிகரல்ல  ஆகையால்  எந்த உவமானமும்  கூற இயலாது  அதுவே உண்மை .ஓரிடத்திலே  இறை இருக்கிறதென்றால்  அது தூய  உணர்வாக  உள்ளே  இருக்கின்றது .பார்க்கும்  யாவற்றிலும் கேட்கும்  எந்த சத்தத்திலும்,தொடும் உணரும்   அனைத்து  உயிருள்ளும்    இருக்கின்றது .எந்த உயிரை  பார்த்தாலும்  அங்கே  இறை  தூய  உணர்வில்  அந்த உயிர்  அறியாமலே  வெண்பனி போன்ற  தூய  மழைத்துளி  போன்ற தூய்மை  உணர்வு  ஒன்று  அந்த உயிருள்ளே  பின்னி பிணைந்து  அவன்  அறியாத  உணராத  வகையில் மறைந்து  கொண்டே  அவனை ஆட்கொண்டுவருகிறது .இதை  எதிலும்  உணரும்  தகுதி  கொண்டோர்  மாபெரும்  மனிதர்  ஆகிறார் .மகான்  ஆகிறார் .ஏனெனில்  இவர்களே  நம் உள்ளத்தில்  எங்கோ மறைந்திருக்கும்  தூய  இறையை  கண்டு  இறையோடு இறையாக  பரிமாற்றங்களை  செய்கின்றார்கள் .  இறையை  மட்டுமே  நம்முள்  பார்க்கின்றார்கள்  வேறு எந்த வஸ்துவையும்  மகான்கள்  கண்டுகொள்வதேயில்லை .மற்றதெல்லாம்  இவர்களுக்கு  மாயதோற்றமே .! இப்படி  எம்முள்ளே  இருக்கும்  தூய  உணர்வே  ..எம் உள்ளம்  அறியாத  பெரும்  ஆற்றலே  ..!! 


 கள்ளப் படாத களிவந்த வான்...மறைமுகமே இல்லாதவன் இவனை  யாராலும்  மறைக்க  இயலாது .இவனை  உணர்வதால்  பெரும் மகிழ்ச்சி  தெரித்து ஓடுகிறது . காற்றாற்று  வெள்ளம்  போல  ஒரு மகிழ்ச்சி  .ஒரு அருவி  எப்படி இருக்கும்  என்றால்  துள்ளலும் துடிப்பும்  நிறைந்து  கரைபுரண்டு  ஆர்ப்பரிக்கும்  அதை பார்ப்பதால்  பார்ப்பவர்களுக்கு  ஒரு மகிழ்ச்சி  கிட்டுகிறது  .எதிலேயோ  உழன்ற  மனம்  இந்த ஆர்ப்பரிக்கும்  அருவியினை  பார்த்தவுடன்  அதன் போக்கு மாறி  ஏதோ ஒரு மகிழ்ச்சியினை  நோக்கி  திரும்புகிறது  .ஏனெனில்  அருவியின்  தன்மை  அது  .துள்ளி குதித்து  சாரல் பெருக்கி  இருக்கும்  இடத்தினை  மகிழ்ச்சியோடு  ஒரு துள்ளலோடு  வைக்கின்றது .அது போல  தூய  உணர்வாகிய  இறை  பெரும் மகிழ்ச்சி  உடையது .அதை  ஒரு துளி உணர்ந்தவன்  அதை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டான் .

கருணை ...வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட்கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.....இறைவன்  கருணை வடிவே  உருவானவன்  .ஒருவனிடம்  அன்பிருந்தால்  அங்கே  கருணை   நொடியிலே   வந்துவிடும் .அன்றாட  நாட்பொழுதில் நம்மோடு  தொடர்பு கொள்ளும்  நபர்களில்  எத்தனை  பேருக்கு    அன்பும்  கருணையும்  மிளிர்கிறது  என்பதை  என்றாவது  பிரித்து  உணர்ந்துகொண்டோமா  ? எதையோ   இழந்து போலவே  என்றும் மனதினை  வைத்துக்கொண்டு  , நடக்கும்  நிகழ்வுகளை  அனுபவிக்காமல்  மன ஆற்றலை  விரயம்  செய்வதிலே  வாழ்வின்  பெரும் பகுதியை  செலவழித்துவிட்டோம் .


ஆனால்  இங்கே பாருங்கள்   மாணிக்க வாசகப்பெருமான்   எப்படி உணர்ந்திருக்கின்றார்  இறையை  ..ஒவ்வொரு  வார்த்தையும்  ஒவ்வொரு வரியும்  இறையின் மிளிர்வுகளை  தெறிக்கவைக்கின்றது .கருணை  வடிவாகிய  இறைவன்  பெரும் அமைதி  கொண்டவன்  சிவபெருமான்  எம் உள்ளத்தில்  எம்மை  தனியே  ஆட்கொண்டுவிட்டான்  இறைவனே  எம்முள்  அமர்ந்துவிட்டான்  என்றால்  மற்ற யாவையுமே  ஒன்றுமல்ல. எம் நினைவும்  எண்ணமும்  யாம் செய்யும்  எதுவும்  ஒன்றுமல்ல ,எல்லாம்  எம்முள்ளே  குடிகொண்ட   சிவபெருமானை பற்றியே இருக்கின்றது  ஆகையால்  எமக்கு எதுவும்  பெரிதல்ல  எம்  இறைவனிடம்  யாம் ஒரு அடிமை .எம்முள்  குடிகொண்டுவிட்டான்   அந்த  இறையுள்  நான்  அமிழ்ந்து  ஆழ்ந்துகிடக்கின்றேன் .பெரும் மகிழ்ச்சியும்  பேரானந்தமும்  எம்முள் சூழ்ந்து  நிறைந்து கிடக்கின்றது  இதை விட வேறு என்ன வேண்டும்  எமக்கு  இங்கே.

பேரானந்தமும்  பெரும் கருணையும்  நிறைந்துவிட்டது  எம்முள்ளே .ஊனும் தேவையில்லை  உறக்கமும்  தேவையில்லை .வேற எந்த லட்சியமும்  தேவையில்லை .பெறுதற்கரிய   பேறாகிய  மாபெரும்  தூய  இறை  எம்முள்ளே.இறைவனே  வந்தமர்ந்துவிட்டான்  என்றால்  கோள்  என்ன செய்யும்  விதி என்ன செய்ய முடியும் ? உள்ளம் பீறிட்டு  உள்ளொளி  பெரும் ஜுவாலையுடன்  இறைஒளியாக   ததும்பி  வழிகிறது .ஆனந்தம்  ஆனந்தம்  பேரானந்தம்  என்று   உள்ளமெங்கும்  நீக்கமற  நிறைந்துவிட்டான் இறைவன்   ..என்னை  தனித்தடிமை  கொண்டுவிட்டான்  என்று  அந்த உபகாரியிடம்  சென்று  ஊதுவாயாக  ..தும்பி ..!! என்று  பாடல்  நீள்கிறது .மிக அற்புதமான  பாடல்  . பெருமானார்  உணர்ந்த விதம்  உணர்ந்து   தம்மை  அறிந்து  அதை பாடலாக  உருவாக்கி  அதை யாவரும்   உணரவைக்கும்  விதம்  என்றும்  என்றென்றும்  போற்றுதலுக்குரியது .ஒரு மாபெரும்   ஆன்மீக பொக்கிஷம் .ஒரே  ஒரு வரி  அதை எடுத்துக்கொண்டு   கொஞ்சநேரம்  அசைபோட்டு ,ஆழ்ந்து  அதை உணர முற்பட  மாணிக்கவாசக  பெருமானாரின்  அருள் ஆசிகள்  பெறலாம்  என்பது  யாம்  அனுபத்தில்  கண்ட உண்மை . உண்மையிலே  இறையை  ஒருவன் தேடுகின்றான்  என்றால்  அவனுக்கு  இறையே  மிக விரைவில்  வழிகளை  காட்டும்  என்பது  இன்றும்  என்றென்றும்  நம் முன்னோர்கள்  கூறிய  அசைக்கமுடியாத  உண்மை என்பது புலப்படுகிறது .

 



 

 கிட்டத்தட்ட  இருபது  ஆண்டுகளுக்கு முன்  திருவாசகம்  பாடல்களை  விரும்பி படித்த காலம் .சில பாடல்  வரிகளுக்கு  அர்த்தம் தெரியாது.இன்றைய    தொழிநுட்பம்  வளர்ந்தது  போல்  அன்றில்லை .ஒவ்வொரு  கேள்விக்கும்  ஏதேனும்  ஒரு புத்தகம்  படித்து  தெரிந்து கொள்ளவேண்டும் .இல்லையெனில் யாராவது  நன்கு புரியும் படி  விளக்கிச்சொல்லவேண்டும் .  இப்படித்தான்  இருக்குமோ  என்று  நினைத்து  எம்மை  மறந்து  பல நேரம்  உறங்குவது  தெரியாமலே உறங்கியிருக்கின்றேன்.அப்படி  ஒருநாள்  ஒரு பரந்த  வெளியில்  வானத்தினை பார்த்தவாறு   இந்த பாடல் வரிகளை  உள்வாங்கி  அர்த்தம் உள்வாங்கி  எமக்குள்  நானே  படித்துக்கொண்டிருந்தேன் படிக்கும்  போது ,இந்த களிவந்த என்ற சொல்லுக்கு  பொருள் தெரியவில்லை  .நானும் முயன்று முயன்று  பார்க்கிறேன்  முடியவில்லை .மாணிக்கவாசக  பெருமானார்  எப்படி எந்த  பொருளுடன்   இதை  சொல்லியிருப்பார்  அதற்க்கான அர்த்தம்   என்ன என்று  சிந்தித்துக்கொண்டிருந்தபோது ,சட்டென ஒரு ஆற்றல்    எனது தலை உச்சியில்  துரியம்  சக்கரத்தின்   புள்ளி  இயக்க  நிலைக்கு  வருகிறது .அதுவே  இயங்கி இயங்கி    தளி உச்சியில்  லேசான  ஒரு  துடிப்பு ஒரு அரிப்பு போன்ற உணர்வுடன்  சுழல்கிறது .

பிறகு  சட்டென  ஒரு  காந்த ஆற்றல்  எம்மோடு எம் துரியத்தோடு  இணைந்து   சுழன்று இந்த  வரிகளை  அதுவாகவே   பிரித்து ஒவ்வொரு வார்த்தையையும்  நன்கு   எம்முள்  நானே  உள்வாங்கி   அதன் பொருளை   உணரவைக்கிறது .எதை  தேடி  சென்றேனோ அதற்கான   விளக்கத்தை  அப்படியே உணரவைக்கிறது நொடிப்பொழுதில்  அத்தனையும்  சும்மா புரட்டிப் போடுகிறது .ஒரு பெருமகிழ்ச்சியில்  திளைக்க  வைக்கிறது .இந்த வான் காந்த ஆற்றலோடு  எமக்கு  உண்டான ஒரு பிணைப்பு     எம்மால்   எத்தனை வரிகள்  படித்தாலும்   நன்கு புரிந்து கொள்ளும் அதன்   தன்மையினை   அந்த  நிலையை   அந்த  திறமையை  எமக்கு  தருகிறது.அந்த  அளவிற்கு அந்த  அலைகள்  சக்திநிறைந்து  இருந்தது .வான்காந்தத்திலே    இன்றும் பெருமகனார்  கலந்துள்ளார்  என்பதை  இந்த நிகழ்வு நிரூபித்துவிட்டது .இதை எண்ணும்  போதே  எம்  கண்கள்  நீர் ததும்பி  ஆனந்தம் கொள்கிறது .உள்ளம் ஆழ்ந்து  எம் நன்றிகளை எம் ஆழ்ந்த அன்பு  வணங்கங்களை தெரிவித்து   இரு கரம்  கூப்பி  சிரம் தாழ்ந்தேன்  பெருமானாரின்  திருவடியில் .

 


விதியும்   கர்மாவும்  கோள்களும்  அதன் வேலையினை  மிக அற்புதமாக  நிகழ்த்திவருகிறது.இன்று இருக்கும்  எந்த  நிலைமையம்   அதுவே    இறைவனின்   விருப்பம்  என்றால்  அதுவும்  எமதல்ல  எல்லாம்  நானும் ஆகிய நீ ...  இறை தான்  காரணம் . இறை தான் நிகழ்த்துகிறது யாவற்றையும் .ஆக  யாவும்  இறையே  .இறைவன்  எனும்  பேராற்றலை  உணர்தலே  மிகச்சிறந்த  வழி  .வேறு யாவும்  மாய பிம்பமே  ..ஒன்றோடு ஒன்று  இணைந்து  மாறி  மாறி  அழிந்து  போகக்கூடியதே ..என்றுமே  அழியாதது  மாறாதது  இறையே .    இறையே  முழுமை  அதற்காகவே  இந்த ஈனப்பிறவி  இறையை  உணர்ந்து  இறையாகிய அதன்  சேய்களுக்கு  ஏதேனும்  ஒரு விதத்தில் உதவுதலே   இந்த பிறவியின்  நோக்கம் .  எம்முள்  இருக்கும் இறையை   தேட உணர  காசோ ,பொருளோ  என  எதுவும்  தேவையில்லை.  இறைதேடலை  தொடர எம்பெருமானார்  மாணிக்க வாசகர்  என்றென்றும்  வான்காந்தத்தில்  கலந்து  அருள் ஆசி  செய்கிறார்கள்  .!!யாம் உணர்ந்த  வழியிலே  பெருமானாரின்   பாடலுக்கு விளக்கம்  அளித்துள்ளேன்.இறை  உணர்தலே  இதில்  மிக  முக்கியம் என்ற  கருத்தோடு  மீண்டும்  ஒரு கட்டுரையில்  சந்திக்கின்றோம்

 

 

வாழ்க  வளமுடன்  

ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!

 ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!

ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா  !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்