உள்ளம் உருகுவதற்கே !!



எங்கும்  நிறைந்து  எம்முள்  மறைந்து  எல்லாம்  ஆன  எம்பெருமானே !! எம் நாயகனே   !!பிறப்பும்  இறப்பும்  இடையே  மாய  வலை விரித்து மதி மயக்கவைத்து ஏதேதோ  செய்யவைத்து,  அடித்து , துவைத்து , பிழிந்து, கசக்கி இறுகவைத்து,  உறையவைத்து  கூடவே   உள்ளத்தையும்  உருகவைத்து சொல்லஇயலா  விந்தைபுரியும்  சுடரொளி  நாயகனே ..!!! எம் அப்பனே  ..!! சர்வேஸ்வரனே  !! எம் பெம்மானே   !! விண்ணோர்  தொழும்  வேந்தனே  !! பிறப்பை  அறுக்கும்  பெருமானே  !! தூய  ஒளி  சூழ்ந்த  ஜோதியாய்  ஜொலிக்கும்  பேரின்ப  ஊற்றே  !! வருவாயா  எம்முள்ளும்  ? நினை எண்ணியே  இந்த ஸ்தூல  உடல் நாள்தோறும்  அதன் ஆயுள்  நோக்கி  நகர்ந்துகொண்டிருக்கின்றது .எத்தனை  எத்தனை  மகான்கள்  நீ படைத்த  இந்த புண்ணிய பூமியிலே ,அத்தனை  மகான்களும்  ,நின்னை  எண்ணி  எண்ணி  தம் சிந்தை  முழுவதும் மெய்சிலிர்த்து ,அனுபவித்து   ஆனந்தம்  நிரப்பி   எழுதிய  பாடல்கள்  ஆயிரம் ஆயிரம்  !!பேரன்பு  அலை கொண்டே  நின்னை  எம்மால்  துதிக்க  இயலும் ,இந்த அன்பு  அலை ஏற்று  வருவாய்  பெருமானே  ..!!  நின்  பொற்பாதம்  பணிகின்றோம்..!!   எம் பணிவான  வேண்டுகோள் செவிமடுத்து வந்தமர்வாய்  எம் சிந்தையுள் ..!! 






இந்த  சரீரம்  சுக போகத்திற்காக  மட்டும்  தானா  என்றால்  இல்லை  இல்லை .இல்லவே  இல்லை .ஒரு பிரம்மம்  ஆனவன்  அதாவது  பிரம்மத்தை  உணர்ந்தவன்  தம்  அறிவு கொண்டு  ,கற்ற கல்வி  கொண்டு அதனால்  ஈட்டிய பொருள் கொண்டு எந்தளவிற்கு  முடியுமோ  அந்த அளவிற்கு  மற்றவருக்கு  ஏனைய  உயிர்களுக்கு  உதவும்  குணம்  கொண்டவன் .அதாவது  தமது  கர்ம வினை இன்னல் தந்தாலும் அதை  பொருட்படுத்தாது மற்றொருவரின்  துயர்  துடைக்க  தம்மால் ஆன  எல்லா  முயற்சிகளையும்  செய்வான் .அவனே  பிரம்மம்  ஆனவன்  .பிரம்மத்தை  துளியாவது  நன்கு உணர்ந்தவன் .முயற்சி  செய்து  ஏனைய  உயிர்களின்  துயர் துடைப்பான் .பிறவியின்  உண்மை  புரிந்தவன் பிறவியின்  இரகசியம்  உணர்ந்தவன் .இவர்கள்  நாம் வாழும்  இந்த  உலகத்திலே  தான்  இருக்கின்றார்கள்  மனித வடிவில் .இவர்கள்  என்றும்  போற்றுதலுக்குறியவர்கள் .இப்படி  உள்ளம்  கொண்ட  ஒருசில  அன்பர்களின் செயல்  கண்டு  பிரம்மித்திருக்கின்றேன்.




தன்னை  எல்லா  வகையிலும்  வருத்தி  முன்னேற வேண்டும்  என்று சாஸ்திரம் சொல்கிறது .நொடிப்பொழுதும்  ஒவ்வொரு  செயலிலும் முன்னேறவேண்டும் .எந்த பாராயணம்  செய்தாலும் சரி   லலிதா  சகஸ்ரநாமமோ,  விஷ்ணு  சகஸ்ரநாமமோ,தேவாரமோ  திருவாசகமோ  அல்லது  குரு  சொல்லிய ஸ்லோகமோ  மந்திரமோ  அல்லது  வாழ்க வளமுடன்  என்ற  வாழ்த்தோ அல்லது  அன்பால்  மனம் உருகி  கருணையோடு  யாவருக்கும்  நன்மை பயக்கும் செயலோ  எதுவாகினும்  சொல்ல  சொல்ல  ஒவ்வொரு  நாளும்  முன்னேற்றமே .ஒவ்வொரு நொடியும்  அதி உத்தமமே  .ஒவ்வொரு நாளும்  தேவியின்  நாமங்களை   உரு ஏற்ற  உரு  ஏற்ற  ஆன்மா  பொலிவு  பெறுகிறது.
உரு ஏற  திரு ஏறும்  திரு ஏற  வினை  மாறும் வினை மாற நலம்  யாவும்  நல்கும் .

உரு ஏற்றி  ஏற்றி  இந்த  உடலில்  உள்ளத்தில்  ஆன்மாவில்  சேர்த்துவைத்த  குப்பைகளை  அழுக்குகளை  அகற்றவேண்டும் .உரு ஏற்ற  ஏற்ற ,  புடம்  போட்ட  தங்கம்  போல  ஆன்மா  ஜொலிக்கிறது .சுத்தத்தங்கமாக  ஜொலி ஜொலிக்கிறது  .இறை  மிளிர்கிறது  .தூய வெளி   உணர்வே  இறை .இம்மி  அளவும் குறை இல்லாதது .தூய  உணர்வே எங்கும்  எங்கெங்கும்  மறைந்திருக்கின்றது .இந்த  உடலும் தூய  வெளிஉணர்வே இந்த உள்ளமும்  தூய வெளி உணர்வே.இந்த மனமும்  தூய  வெளிஉணர்வே பார்க்கும்  கேட்கும்  தொடும் நம்மால்  கணிக்கும்    எல்லாவற்றின்  மூல காரணமும்  இந்த   தூயவெளி  உணர்வே..தூய  வெளிஉணர்வே மாறி மாறி  ஜடமாக  உயிராக  காட்சியளிக்கின்றது.சற்றே  கண்களை  மூடி  ஆழ்ந்து  செல்கிறோம்  ...எண்ணங்கள்  தூய  வெளிஉணர்வே...இன்னும்  ஆழ்ந்து  செல்கிறோம்.பரந்த  இந்த பிரபஞ்சமும்  தூய  வெளிஉணர்வே.இன்னும்  ஆழ்ந்து  செல்கிறோம்.கேட்பாரற்று  கிடக்கும்  இந்த  வெளி  ஆழ்ந்து அகன்ற வெளி  அதுவும்  தூய  வெளிஉணர்வே.இறைக்கு  வெளிக்கு  கருவிகள்  இல்லை  .இங்கே இறையின்  பரிணாம  மாற்றத்தில்  கருவிகள்  படைக்கப்பட்டு  உணர்தல்  கருவிகள்  பெற்று ,அதன்  மூலம்  உணர்கிறோம் .தூய வெளி உணர்வே எம்முள்  இருக்கின்றது .மறைந்திருக்கின்றது  மறை பொருளாக  இருக்கின்றது .இதை  உணர்ந்து கொண்டால்  வாழ்வு  மிக எளிதாகும் .சிக்கலெல்லாம்  சிதைந்து போகும் .






தேவியின்  நாமங்கள் மனதால்  உள்வாங்கி  சொல்ல  சொல்ல  இந்த  உடல்  பொலிவு பெறுகிறது .எம்முள்ளே  இறை , எம்முள்ளே  தேவியின்  நாமங்கள்  ரீங்காரம்  போல  சுழல்கிறது .அற்புதமான  அலை இயக்கம் அது தாமாகவே  உருவாகிறது .அதற்குறிய  அலைநீளத்தில்  இருக்கும்  அத்தனை  நுணுக்கங்களையும்  அற்புதங்களையும்  உணரவைக்கிறது . தேவியின்  நாமங்கள்   சொல்ல  சொல்ல  தேவியின்  அருள் அலைகள்  சூழ்கிறது .இந்த ஸ்தூல  உடம்பே  உள்ளத்தால்  உருகி  உருகி ,சுத்த  தங்கமாக  ஜொலிக்கிறது .மனம்  ஒடுங்கி ,அதிர்வின்றி  அமைதியில்  ஒருங்கே  நிலைக்க  ,ஆற்றல்  நிறைகிறது ,சூட்சும  சரீரம்  உப்பி  பெருக்கிறது .தூய  இறை  உணர்வு  மிளிர்கிறது .தூய வெண்பனி  நிறைந்தது  போல  பேரமைதி  சூழ்கிறது.இந்த  பதம்  வரவேண்டும் .அமைதியில்  திளைக்கும்  நிலைக்கு  வர பழகிக்கொள்ளவேண்டும் .ஒரு நாளில்  ஒரு நிமிடமாவது  தம்மை  மறந்து  ,அதி சூட்சுமமாகிய  தேவியின்  இறைஅலைகள்  சூழ்ந்த  அற்புத  அலைக்கூட்டத்திற்கு  நம்மில்  நம்மை  கரைந்து போக  பழகிக்கொள்ளவேண்டும் .அற்புத காந்தம்  போல  ஜிவ்வென ஈர்த்து,கவர்ந்து   பேரமைதியில் நம்மை  நிலைக்க  வைக்கும்  நிலையை  மெல்ல  மெல்ல  மெதுவாக  உருவாக்கி சுகமாக அனுபவிக்கவேண்டும்.இதில்  நேரம் போவதே தெரியாது  .இது தரும்  மிகப்பெரும்  வலிமை உயிர்  மனம்  ஆன்மா  யாவும்  பளிச்சென  மெருகேறுகிறது இறை அலையால் .ஆன்ம  லயம்  ,இதமான  அலைகள்  உடல் உயிர் மனம்  யாவும்  ஒன்றோடு  ஒன்று  பின்னி பிணைந்து  ,இறை அலைகளுக்கு  இயைந்து  ,தத் தம்  வெற்றிடங்களை  புதுப்பித்துக்கொள்கிறது .சோ..வென  இறை மழை  ...உள்ளத்தில்  அங்கே  அமைதி  சாரலாக  துள்ளி எழுகிறது .பேரமைதி  பெருக்கெடுக்கிறது .இந்த ஒத்திசைந்த  லயத்தில்  கணீர்  கணீர்  என  துடிப்பும்  துள்ளலும்  நிறைந்த  அலைகள்  உருண்டோடுகிறது  .இங்கே  தான்  சரஸ்வதி  தேவி  வருகிறாள் .அட்சர  சுத்தமாக  பேசும்  பேச்சு  நாவில்  அது தாமாகவே  உருவாகிறது . .மஹா லட்சுமி  வருகிறாள் .பொருள் தேவையை  ஏதோ ஒரு வழியில்  நமக்கு  உருவாக்கி  தருகிறாள் . சக்தியாக  அம்பாள்  வருகிறாள் ஞானம்  நோக்கி  வாழ்வை  பயணிக்க  வைக்கிறாள்  .இவர்கள்  வந்தாலே  வாழ்வு  சுபிக்ஷம்  பெருகிறது .பட்ட  கஷ்டமெல்லாம்  கரைந்துபோகிறது  ,பிறவிப்பெருங்கடல்  எளிதாக  நாள்தோறும்  நீந்த முடிகிறது .  இறை  மிளிர்கிறது  .வயிறு  நிறைய  உணவையும்  மனம்  நிறைய  தேவையில்லாத  குப்பைகளும்  சேர்த்த  அதே  உடல் தான் , அதே  மனம்  தான் ,வெட்டிக்கதைகளையும்  விளங்கா செயல்களையும்  செய்ய  வைத்த  அதே உடல் தான் ,அதே ஆன்மா  தான் ,தற்பொழுது  தேவியின்  நாமங்கள் சொல்லி  சொல்லி ,உள்ளொளி  பெருக்கி   தம்மை  தாமே  புடம் போட்டுக்கொண்டது  அதனால்  தேவியின்  அருள் அலை சேர்ந்த   அற்புத  அமுதம்  ,ஒளியாக  ஜொலிக்கிறது .எல்லாமும்  எம்முள்ளே  .தேவியும்  எம்முள்  வருவாள் ,எம்பெருமானும்  எம்முள்  வருவார்,அன்பும் கருணையும் எம்முள்  வரும் .யாம் பார்க்கும்  யாவுமே  தேவியின்  எம்பெருமானின்  தோற்றங்களே    எப்பொழுது  ?  எப்பொழுதெல்லாம் , யாம்  எம்மை  தகுதியாக்கி ,தேவியின்  நாமங்கள்  கொண்டு  புடம் போட்டு  ,எம்மை யாமே  எம்    உள்ளத்தில் உறைந்து  உருகி உருகி ,நெகிழ்ந்த தருணங்கள்  வருகிறதோ  அப்பொழுதெல்லாம்  யாம்  தேவியின்  அருள் தன்மைகளை  உணர்கிறோம் .






இந்த உடல் கொண்டே  இப்பிறவி நீந்த வேண்டும் இந்த உயிர்  கொண்டே  பிறப்பை  அறுக்க  வேண்டும் .இருக்கும்  இந்த  மனம்  கொண்டே  தேவியை  தொழவேண்டும்  .உணரவேண்டும் .ஒவ்வொரு  உயிரும்  மிக அற்புதமானதே  ஒவ்வொரு  அன்பர்களும்  இறையால்  படைக்கப்பட்டவர்களே .ஒவ்வொரு மனிதர்களும்  மதிக்கப் படவேண்டியவர்களே .இறை ஏதோ  ஒரு காரணத்திற்காக  படைத்திருக்கின்றது .ஒவ்வொரு மனமும்  அதி அற்புதமானது .இறை உணரும்  தகுதி  பெற்றிருக்கிறது ஆக முயற்சிகள்  செய்து  தேவியின்  நாமங்கள்  சொல்லி  உரு ஏற்றி  தகரத்தை  தங்கமாக  மாற்றுவது  நம்  கையிலே .மேலும்  தங்கத்தை  புடம் போட்டு  போட்டு  ஜொலிக்க வைப்பதும்  நமது கையிலே .பிறகு  தேவியே  வருவாள் . தம்மை  தொழும்  எந்த ஆன்மாவுள்ளும்  எழுந்தருளி  ஆசிகள்  வழங்கி  பிறவியை  அறுப்பாள்.அந்த  அளவிற்கு  அதி  அற்புதம்  நிறைந்த  நுணுக்கங்களை  இறை  இந்த  மானுடத்தில்  உள்ளே  மறைத்து வைத்திருக்கின்றது மனம்  இளகினால்  தான்  நுணுக்கமான  அலையை  உணரமுடிகிறது .இல்லை எனில்  ஏதோ  வந்தோம்  சென்றோம்  என பிறவி  சக்கரம்  சுழன்றுகொண்டேதான்  இருக்கின்றது .தகரமா  ..தங்கமா  முயற்சி  செய்வது  நம்  கையிலே 





புண்ணியங்கள்  செய்துகொண்டே  இருக்க வேண்டும் .தான  தர்மங்கள்  தொடர்ந்து  செய்துகொண்டேயிருக்க வேண்டும் .எல்லாம்  இறைக்கே  செய்கின்றோம்  என்று  உணர்ந்து  செய்துகொண்டேஇருக்கவேண்டும் கற்ற  அறிவால் ,ஈட்டிய பொருளால் ,மனதால்  எவ்வளவு  முடியுமா  அவ்வளவு  செய்துகொண்டே இருக்க வேண்டும் .செய்வதை  நிறுத்திவிட்டால்  பாவங்கள்  சட்டென  புகுந்து  கர்மவினை  ஆட்டத்தை  ஆரம்பித்துவிடும் .ஆக  கொஞ்சம் கூட  இடைவெளியின்றி  தொடந்து  புண்ணிய  காரியங்களை  செய்துகொண்டேயிருக்க வேண்டும். இதில்  தொய்வே  இருக்கக்கூடாது இறை  எம்மை  படைத்திருக்கின்றது .இறையின்  அதி  சூட்சும  இறுதி  பரிணாம படைப்பு  இந்த  மனிதன் .ஆக  இறையின்  திறமெல்லாம்  எம்முள்ளும்  இருக்கின்றது .இந்த உடல் கொண்டு  உயிர்  கொண்டு  மனம் கொண்டு  இயன்ற வரை  தொண்டுகள்  செய்வதே  அதி உத்தமம்.

ஏதேனும்  ஒரு  விதத்தில் ,நிறைய  தன்னலமற்ற  தொண்டு செய்யும்  அன்பு உள்ளங்கள் செய்யும்  செயல்களை  கடிதங்கள்  மூலம்  தெரிந்துகொள்வதில்  மிக பெருமை  அடைகிறோம் .உங்களை  போன்ற  உள்ளங்களாலேயே  இந்த உலகம் சுழல்கிறது .இந்த உலகமெனும்  வண்டி சுழல  நீங்கள் எல்லாம்  அந்த வண்டியின்  சக்கரமாக  சுழல்கிறீர்கள் .உங்கள் தொண்டு  மகத்தானது .அதி உன்னதம்  நிறைந்தது .பெருமை கொள்கிறது அகத்தியம் வலைத்தளம்.தொடர்ந்து தர்ம  அனுஷ்டானங்களை  செய்வோம் .தொடர்ந்து  தர்மம்  செய்வோம்  ..!! எல்லா  உயிர்களும்  இன்புற்று  அமைதி  திளைக்க  இறையை பிரார்த்திப்போம் .இந்த கார்த்திகை  திருநாளிலே  தீபம்  ஏற்றி  இருள் நீக்குவோம் .எங்கெங்கும்  ஜோதி  மயமாகட்டும்  அஞ்ஞானமெனும்  இருள் அகலட்டும் .அகத்தில் ஞானமெனும்  தீபம்  எப்பொழுதும்  சுடர்விட்டு  பிரகாசிக்கட்டும் .
 

வாழ்க  வளமுடன்  
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்