இறைவழி நல்வழி





 எல்லாம்  வல்ல பரம்பொருளே !! உலகமெல்லாம்  காத்தருளும்  உமையவள்  நாயகனே  !! உன்னத அருள் கொண்ட பேராற்றலே !! பெரும்  வலிமைகொண்ட  கட்டுக்கடங்கா  ஷக்தியுடைய  பேரானந்தமே !!   எம் பெருமானே!! பேரின்ப வெள்ளமே !!  கோடான  கோடி ஜீவராசிகளுக்கு  க்ஷணப்பொழுதில்  தீர்வு தரும்  பெரியோனே !! தூயோனே !!மாயோனே !! உன் பொற்பாதம் சரணம்  !

தேவியின்   அற்புதங்கள்   ஆயிரம் ஆயிரம் ஒவ்வொரு ஜீவனுள்ளும் அவள்  உணர்த்திக்கொண்டிருக்கும்  தத்துவங்கள்  ஆயிரம் ஆயிரம் .ஆழ்ந்து  ஆழ்ந்து  பல லட்சங்கள்  தேவியின்  நாமங்களை  உச்சரித்து  ,அவளின்  திருப்பாதம்  பணிய  ,அலையாய்  பேரலையாய்  எழுவாள்.அதன் பிறகு தேவி  என்று  ஆழ்ந்து  நினைத்தாலே  ஒரு அற்புதம்  நிறைந்த  உலகிற்கு அழைத்துசெல்கிறாள் .என்றுமே  மகிழ்ச்சியும்  உற்சாகமும்  துள்ளலும்  ஆனந்தமும்  அருவி  போல  ஆர்ப்பரித்து  ஓடுகிறது அவள்  அருகில் .இன்னும்  கடந்து  செல்லவேண்டிய  தூரம்  அதிகம்  இருக்கின்றது .ஆனால்  தொலை தூரத்தில்  இருந்துகொண்டே  அவளிடம்  சரணாகதியடைய ,ஒரு அற்புதமான  செழுமை நிறைந்த  மென்மை  அலைகளை  வாரி வழங்குகிறாள் .எப்படிப்பட்ட  ஒரு அலை  இயக்கம்  இவள் அருகிலே .கவலையா ,நிம்மதியின்மையா ,குறுகிய சூழலில்  தம்மை தாமே  இறுக்கி சிக்கலில்  மாட்டிக்கொண்ட மனமா ,இவை  யாவும் தூள்  தூளாகி விடுகிறது  இவள் அலை இயக்கத்தில்.


மெல்லிய  அலைகள்  துள்ளிக்குதித்து   என்றுமே  உற்சாகம்  கரைபுரண்டோடுகிறது .உற்சாகம்  தரும் அலைகள்  மட்டுமே  ஆனந்தம்  தரும் அலைகள் மட்டுமே  துள்ளி எழுகிறது தேவியின்  அருகில் .இவள் இருக்கும்  இடமெங்கும்  மென்மையான  அலைகள் துள்ளி  ஓடுகிறது .எங்கும் எங்கெங்கும் கவர்ந்திழுக்கும்  அன்பு  நிறைந்த  அலைகள் ,சர்வ  மங்களம்  தரும்  அலைகள் .தாயின்  பரவசம்  நிறைந்த அலைகள்  எங்கெங்கும்  வியாபித்திருக்கின்றது . .படைப்பின்  ரகசியங்கள்  உணர்த்தும்  அலைகள் .மெல்ல  மெல்ல  ஆழ்ந்து  ஆழ்ந்து  மொத்தமாக  சரணாகதி  அடைந்தாள்  மட்டுமே  இவளின்  அலை  எங்கோ  தூரத்தில்  இருக்கும்  தன்மை  புலப்படுகிறது .தேவியின்  நாமங்களை  தொடர்ந்து  சொல்லி  அவளின்  ஆசிகளை  பெறுவது  என்பது  வெகு எளிதில்  சாத்தியமில்லை ..அவள் ஆசிகள்  வேண்டுமாயின்  அவள்  பாதம்  சரணாகதி  அடைதல்  வேண்டும்  .தேவியின்  அருள்  எப்பொழுது  கிடைக்கும்  எந்தப்பிறவியில்  கிடைக்கும்  என்பதெல்லாம் தேவியின்  விருப்பமே .







ஒருமுறை  புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி  பீடம்  ஸ்ரீ  சாந்தானந்த  ஸ்வாமிகளை  சந்திக்கும்  வாய்ப்பு  கிடைத்தது.அற்புதமான  மஹான் .மிகுந்த  சாந்த  குணம்  கொண்டவர் .கருணை வடிவம்  நிறைந்தவர் .காருண்யம்  நிறைந்தவர்.நீண்ட  ஜடாமுடி  தரித்தவர் .மெல்லிய புன்னகை .நல்ல தேஜஸ்  நிறைந்த  உடல் .காந்த  ஆற்றல்  கவர்ந்திழுக்கின்றது .அந்த அளவிற்கு  தம்மை  ஸ்ரீ புவனேஸ்வரி  பீடத்தில்  ஈடுபடுத்தி  மந்திர  உச்சாடனம் ,பூஜை ,யாகம்  செய்த பலன்களெல்லாம்  அவர்  அருகில்  வீசும்  காந்த ஆற்றல்  சொல்கிறது .எம்மையும்  தலையில்  கைவைத்து  ஆசீர்வாதம்  செய்தார்கள் .சாஷ்டாங்கமாக  நமஸ்காரம்  செய்தேன் ,யாம் சந்தித்த  மகான்களின்  பட்டியலில்  ஸ்ரீ சாந்தானந்த   ஸ்வாமிகளும்  ஒருவர் .ஒரு சாத்வீக  குணமுள்ள  அற்புதமான  மஹான் .இந்த மகானோடு  இருந்த தருணங்கள்   எம் வாழ்வின்  உன்னத தருணங்கள் .அவர் ஜீவசமாதியடைந்தாலும் ,அவரோடு  எமக்கு  கிடைத்த  உரையாடல்  ,அந்த பொற்கால  நினைவுகள் , நிகழ்வுகள்  எல்லாம் எம் கண்ணில்  காட்சியாக நிறைவேறி  அமைதியை  வாரிவழங்குகிறது இன்றும்  ஸ்ரீ புவனேஸ்வரி  அம்பாளை  தரிசித்தாலே  இந்த மகானின்  நீங்கா  நினைவுகள்  சட்டென  வந்துவிடுகிறது .ஒரு மந்திரம்  அல்லது தீட்சை   எடுத்துக்கொள்ளவேண்டுமாயின்  இவர் போன்ற  மகானிடம் , குருவிடம்  எடுத்துக்கொள்ளுதல்  அதி உத்தமம் .உச்சாடனம்  செய்யும் அம்பாளின்  ஸ்லோகங்களும் மந்திரங்களும்  மேலும்  மேலும்  நம்மை  நன்கு  மெருகேற்ற  உதவும்  அன்பு நிறைந்த  கருணை  நிறைந்த  மகான்கள் இவர்கள். வாழ்வில்  என்றென்றும்  போற்றப்படவேண்டியவர்கள் .





தற்பொழுது  நாம்  செய்யும்  தர்ம  அனுஷ்டானங்களை  தொடர்ந்து  செய்துகொண்டே இருத்தல்  மிக மிக  அவசியம் .அதி உன்னதமான  செயல் .தொடர்ந்து  தேவியின்  நாமங்களை  பாராயணம்  செய்தல் அல்லது  எம்பெருமானை  தொழுதல்  அல்லது  ஏதேனும்  தர்ம  காரியங்கள்  செய்தல்  எல்லாம்  தொடர்ந்து  செய்யுங்கள் .எடுத்த பிறவிகள்  கோடி  கோடி  செய்த பாவங்கள்  எவ்வளவோ மூட்டைகள்  , தெரிந்தோ  தெரியாமலோ  அறிந்தோ  அறியாமலோ  செய்த பாவங்கள்  ,இப்பிறவி  ,சென்ற பிறவி  என  தொடர்ந்து  செய்த  பாவங்கள் அதனால்  கிடைத்த  இந்த உடல் ,உயிர்  ,மனம் ,பிள்ளைகள் ,சொந்தபந்தங்கள்,நண்பர்கள்  என  அனைத்திலும்  பின்னி  பிணைந்துள்ளது நாம்  ஆற்றிய  கர்மா  மற்றும் அதன்  பாவ புண்ணியங்கள் நம்மை  சுற்றிலும்  செய்யும்  ஒவ்வொரு  செயலிலும் ,ஒவ்வொரு  நொடிப்பொழுதிலும்  ஊடுருவி  இருக்கின்றது .எந்த செயலுக்கும்  அதன் விளைவு  என்பது  இறையின்  ஆசீர்வாதமே .செயல் மட்டுமே நம்முடையது .விளைவு  இறைவனின்  கையில் .


ஒன்றா  இரண்டா செய்த பாவங்கள்  ..எத்தனையோ   பிறவிகள் அத்தனை  பிறவிகளிலும் செய்த பாவங்கள்  குவிந்துகிடக்கின்றது .இன்றைய  நாளில்  ஒருவருக்கு என்ன  பிரச்சனை   வாட்டி  வதைக்கின்றதோ  அதுவே அவர்கள்   செய்த வினையின்  ஒரு சாராம்சம் .ஒரு பானை  சோற்றுக்கு  ஒரு சோறு  பதம் என்பது போல  வினையின்  சாராம்சத்தை  இன்று அவர்கள்  படும்  அவஸ்தை  சொல்லாமல்  சொல்லிவிடுகிறது .தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  .நாமே  நமக்கு  மூலகாரணம்  .எவ்வளவோ  பாவ மூட்டைகள்  அவ்வளவையும்  வைத்துக்கொண்டு  அதை ஒரே பிறவியில்  அதுவும்  வெகு விரைவில்  தீர்க்க  உபாயம்  தேடும்  மனிதர்களே  அதிகம் இங்கே .படும்  கஷ்டமெல்லாம்  இறை கொடுத்ததுடா .முடிந்த  வரை அனுபவித்தே  இந்த வாட்டிவதைக்கும்  பாவங்களை  கழிப்பேன்  என்று    ஏற்றுக்கொள்ளும்  மனநிலையில்  எவன் இருக்கின்றானோ அவன்  ஒரு மகான்.இவருக்கு    எந்த   பரிகாரமும் தேவையில்லை.இவர்  வாழ்வு  வெகு விரைவில்  இறையால்  இறை அலைகளால்  மெருகேறும்.இறை இவர்களை வாரியணைத்துக்கொள்ளும்  வெகு விரைவில். 

அப்படியே  ஏற்றுக்கொண்டு  அனுபவித்தல்  என்பது  எல்லோராலும்  இயலாத  ஒன்று.தலைவலியும்  காய்ச்சலும்  தனக்கு  வந்தால்  மட்டுமே  தெரியும் அதன்  வலியை  உணர்ந்துகொள்ளமுடியும் .இவை  எளிதாக்கவே  தொடர்ந்து  நாம்  செய்யும் நல்ல கர்மாக்கள்  , ஆற்றும்  நல்ல  காரியங்கள்,  செய்யும் தர்ம  செயல்கள்,  பிறர் உயிர்  துன்ப படாவண்ணம் அவர்களுக்கு  நன்மை  செய்தல் .முடிந்தவரை  உதவுதல் .தொடந்து  லலிதா சகஸ்ர நாமம்  பாராயணம்  செய்தல் .தேவாரம்  ஓதுதல்  திருவாசகம்  ஓதுதல் ,ஆலய  திருப்பணி  செய்தல் .காலையில்  எழுந்ததிலிருந்து  அன்று இரவு  வரை  குறைந்த வரை மனதளவிலாவது  இவ்வுலகில்  உள்ள  கோடான  கோடி  உயிர்களை கொஞ்சநேரமாவது   உள்ளம்  நிறைந்த அன்புடன்  வாழ்க  வளமுடன்  என்று  வாழ்த்துதல் அல்லது  உள்ளம்  நிறைந்த  அன்பு அலைகள்  கொண்டு தாங்கொனா  துயரத்தில்  இருப்பவர்களுக்கு  ,துயரங்கள்  தீர  வழிவகை செய்  இறைவா  என்று  இறையிடம்  மன்றாடி  வேண்டுதல் ,இறை அவர்களுக்கு  எல்லா  நலன்களையும்  வழங்க வேண்டும்  என்று  வேண்டுதல் .இவை  யாவும்  மனிதனை  அடுத்த நிலைக்கு  எடுத்துச்செல்லும்  அதி அற்புத கருவிகள் .இங்கே  முயற்சி  தொடர்ந்து  தேவைப்படுகிறது .தொடர்ந்து  முயற்சியை  செய்ய  இறையின் பார்வை  கண்டிப்பாக  வந்தே  விழும் .அதன் பிறகு  எல்லாம் பேரின்பமே .  எந்த நொடியில்  விழும் என்பது  அவரவரின்  முயற்சி மற்றும்  புண்ணியங்களை பொறுத்து இருக்கின்றது.ஆனால்  இறையின்  பார்வை  கண்டிப்பாக  விழுந்தே  தீரும் . ஆகவே  முயற்சிகள்  தொடரட்டும் .


ஒவ்வொரு  நாளும்  இந்த மனதிற்கு  தீனி போடுதல்  மிக அவசியமாகிறது .முயற்சி செய்து  நல்ல ஆன்மீக  விசயங்களை  வேண்டுமென்றே  படித்து  அதன் விளக்கங்களை  உணர்ந்துகொள்ளவேண்டும் .நல்ல  பண்புள்ள  ஆன்மீக  அன்பர்களுடன்  ,மேன்மக்களுடன்,  இறை உணர்ந்த  அன்பர்களுடன்  தொடர்ந்து  ,ஆன்மீக  விஷயங்களை  சத்சங்கம்  போல  பகிர்ந்துகொள்ளவேண்டும் .இது  ஒரு மிகப்பெரிய  மன வலிமை மருந்து  போல  வேலைசெய்யும் .



இவற்றிற்கெல்லாம்  மேலாக  ஒன்று  என்னவெனில்  எவ்விதப்பலன்களையும் எதிர்பார்க்காமல் எம்மால்  முடிந்தவரை  நற்செயல்களை  செய்வேன்  தொடர்ந்து  செய்துகொண்டேயிருப்பேன் ,அதன்  பலன்களில்  விருப்பமில்லை.பலன்களை  எதிர்பார்த்து  செயல்கள்  செய்யமாட்டேன் ,அப்படியே இந்த செயல்களால்  நல்ல  பலன்கள்  வந்தாலும்  அதையும்  இறைபடைத்த  அதன் சேய்களுக்கே  சமர்ப்பணம்  செய்வேன்  எனும்  நிலையில்  எவர்  ஒருவர்  இருக்கின்றாரோ  அவருக்கு  இனிமேல்  பிறவிகளே  கிடையாது எனும் சூழலை,  இறையே அவர்களுக்கு  உருவாக்கி ,அவர்களை  இறை விரைவில் அழைத்துக்கொள்கிறது .இவர்கள்  மஹான்கள் அந்தஸ்து பெறுகிறார்கள்  .இவர்களுடனாட  உரையாடல் அவர்களுக்கு  உதவுதல் போன்ற காரியங்கள்  மிகுந்த நன்மைகளை  தரவல்லது .

 

மனம் அமைதியாக  நிறைய  வழிகள்  இருக்கின்றது .அதில் நமது  கர்ம பலனால்  நமக்கு  கிடைத்த  இந்த உடம்பு     அதனுள்ளே இருக்கும் இந்த   உயிர் இவை  யாவும்  இறை கொடுத்தது  ..எத்தனையோ  கோடான  கோடி ஜீவராசிகளுக்கு  கிடைக்காத  ஒரு பெரும் புண்ணியம்  இந்த  மானுட   பிறவிக்கு  கிடைத்திருக்கின்றது அதை   கொண்டு    முடிந்தவரை  நல்ல பல காரியங்கள் செய்துவிடவேண்டும்  எனும்  மனநிலைக்கு  வந்தாலே  ,மனம்   அலைபாய்வது  எல்லாம்  கொஞ்சம்  கொஞ்சமாக  குறைந்துவிடும் ,அற்புதமான  இந்த உடல் உயிர்  தந்த இறைவா  உமக்கு  கோடான  நன்றிகள்  என்று   மனதுள்  மகிழ்ச்சியோடு இறைக்கு  நன்றி சொல்லும்  பாவனை  வந்தாலே மனம்  கொஞ்சம் கொஞ்சமாக  ,தம்மை   படைத்த இறையின்  மூலம் நோக்கி  ,இறைவழி  நோக்கி  உள்நோக்க  ஆரம்பிக்கும்  அப்படி உள்நோக்க  ஆரம்பித்தாலே மனம்  அலை பாயும்  வேகம்   குறைந்து மெல்ல  மெல்ல  அமைதிநிலைக்கு  திரும்பும். 


 மனம் அழகிய நந்தவனம் போல பூத்து குலுங்கவேண்டும்.யாவரும்  மகிழ்ச்சியோடு  இருக்கவேண்டும்  என்ற  எண்ணம்  தானே  இறையின்  எண்ணம் .கர்மவினையின்  காரணமாக ஓரிரு செயலால் ஓரிரு அன்பர்களை சந்திப்பதால் நம் மனதினை துவம்சம் செய்துவிடுகிறார்கள் .யாரையும் இங்கே குறைசொல்ல இயலாது.அவன் வந்த வழி அது,அங்கே குறுக்க இருப்பதால் ,நமக்கு உண்டான மன கசப்பு .எல்லா நேரங்களிலும் இடர் செய்ய அவன் வருவதில்லை.கர்மா முடிந்தவுடன்  அவன் யாரோ நாம்  யாரோ என்று ஓடிவிடுவான் .இதில் சூட்சுமம் என்னவெனில் என்ன நிகழ்ந்தாலும் அதை நம் மனம் சமநிலையில் வைத்துகொள்ள பலகிவிட எவ்வளவு   பெரிய கர்ம விளைவும் மனதை எந்த விதத்திலும்  பாதிக்காது.

எவ்வளவு  பெரிய  மனஇறுக்கமானாலும் (depression )  வெகுவிரைவில்  அதன்  தாக்கத்திலிருந்து  வெளிவர தெரிந்துகொள்ளவேண்டும்.அடுத்ததடுத்து  ஆகவேண்டிய காரியங்களை  பார்க்க  ஆயத்தமாகவேண்டும் .மனஇறுக்கத்திலியே  இருத்தல்  அதன் ஆற்றலை  தின்றுவிடும்  பிறகு அதுவே  நிறைய  பிரச்சனைகளை  உருவாக்கிவிடும்  உடம்பில் மனதில் . 

மன  இறுக்கத்திலிருந்து  விடுபட  ஆயிரம் வழிகள்  இருக்கினறன.





அழகிய  முழு நிலவு  .வானில்  வட்டமிடும்  அதன் இயல்பு  .பால் போன்ற நிறம்  அதன் குளுமை  இவற்றை  உணர  பார்த்து  ரசிக்க  ..மனம்  மென்மையாகிவிடும்  .கடலோடு  நிலவையும்  அதன் குளுமை  கதிர்கள்  கடலில்  விழுவதையும்  ஒருசேர  பார்த்தல்  மெல்லிய  நிலைக்கு  மனதினை  திருப்பிவிடும்  .இதை பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  .அந்த அளவிற்கு  யாவரையும்  கவர்ந்திழுத்திருக்கின்றது .


பறந்து விரிந்த ஆகாயத்தினை ரசித்து  பார்க்கவேண்டும் .எவ்வளவு  பெரிய  நீண்ட அகன்ற  ஆழ்ந்த  விரிந்த  வானம்  மற்றும்  அதன் அற்புத நீல  நிறம்  என்று  கொஞ்சம்  கொஞ்சமாக  உள்வாங்கி  அதனை  ரசிக்க    மனம்  கொஞ்சம்  அதன் இறுக்கத்திலிருந்து  சற்றே  தளர்வு  ஏற்படுத்தி  பிறகு  படிப்படியாக  அமைதியாகி விடும்.



ஆர்ப்பரிக்கும்  கடல் அலைகள்  கரையில்  அலைகள்  இன்னும் கொஞ்சம்  தூரம்  செல்ல  செல்ல  அங்கே  அமைதியான  கடல்  அலையின்றி  நிசப்தமாக  இருக்கின்றது  என்பதை  உள்வாங்க  மனம்  மென்மையாகிவிடும்  


செங்கதிர்  உதிக்கும்  இளம் சூரியனின்  சிவந்த நிறம் .பொன்னிறம்  போல  மாறும்  அதன் கதிர்களும்  ,எங்கெங்கோ  சென்றிடும்  அதன்  வீரியம்  ஆற்றல்  உள்நோக்க  மனம்  ஒரு பூரிப்பு  நிலைக்கு  வந்துவிடும் .

ச்சோ ..வென  கொட்டி ஆர்ப்பரிக்கும்  அழகிய அருவிகள் ,துள்ளி  எழுந்து  ஓடும்  அதன்  பூரிப்பு சாரல்கள் , சற்றே  உன்னித்து கவனிக்க  மெல்ல மெல்ல மனதில்  ஒரு சிறிய  சாரல்களை  உருவாக்கி  அதன்  மன இறுக்கத்தை  முற்றிலும்  குறைத்துவிடும் .


வீணை  எனும்  இசைக்கருவி  இசைக்க  அல்லது  அதன்  சப்தங்களை  காதுகுளிர  கேட்க  சட்டென  மனம்  இருக்கும்  நிலையிலிருந்து  வேறு நல்ல நிலைக்கு  மாறிவிடும் .மனதோடு  ஒட்டி உறவாடும்  ஒரு அற்புதமான  கருவி  இந்த வீணை .வீணையின்  இசை மட்டும்  தனியாக  பிரித்து  கேட்டுப்பாருங்கள்  மனம்  ஒரு துள்ளல்  பெரும் .நலம்  பெரும் .

நிறைய  அற்புதமான  ஸ்லோகங்கள்  சங்கீதங்கள்  இருக்கின்றது .எது எது  விருப்பமோ  அதனை  கேட்க  மனம்  அமைதியில்  திளைத்திடும்  என இன்னும்  இன்னும்  நிறைய  மன இறுக்கத்தினை  குறைக்கும்  மென்மையாக்கும்  வழிகள்  நிறைய  இருக்கின்றது .


நற்செயல்கள்  செய்ய வேண்டும்  தர்ம செயல்கள்  செய்யவேண்டும்  ,மந்திர  ஜபங்கள் பண்ணவேண்டும் ,நிறைய  ஸ்லோகங்கள்  பாராயணம்  செய்யவேண்டும் .ஆழ்ந்த  த்யானம்  செய்யவேண்டும்  மனம்  மேலும்  மேலும்  ஆழ்ந்து  இறைநோக்கி  செல்லவேண்டும் . செய்யும்  பூஜைகள்  தொடர்ந்து  செய்யவேண்டும் .ஏதேனும்  ஒரு விதத்திலாவது  இறையை  உணரவேண்டும் .இவை யாவும்  யாவரும்  செய்து  பயன்பெறவேண்டும்   ஏற்கனவே  இவை செய்யும்  அன்பு உள்ளங்கள்  தொடர்ந்து  செய்யவேண்டும்  அவர்கள் அனைவருக்கும்  ஒரு  ஊக்கப்படுத்தும்  ஒரு கட்டுரையாக  இதனை  சமர்ப்பிக்கின்றேன்.

வாழ்க  வளமுடன் 

ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்