ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !!




.இறையை  தேடி  உள்ளத்தில் உறைந்துகிடக்கும்  சிறு வெளியில்  மிதக்கின்றேன் . எம் பெருமானே ...வா!!..எம்முள்ளே வா ..!! எம் நாயகா  வா  !!.. எம் பெரும் நாயகா  வா !! ..நான் மறையே  வா ..!! எம்முள்  உயிர்  மூச்சாய் எழும் நாதமே  வா  !! எங்கிருந்து அழைத்தாலும்  க்ஷணப்பொழுதில்  துள்ளிவரும்  தெள்ளமுதமே வா !! திருமகனே...   வா  !! அலையாய்  பேரலையாய்  உள்ளத்தை  கவ்விக்கொள்ளப்போகும்  அரூப  ரூபமே   வா  !! நீ எவ்வாறு   இருப்பாய் யாம்  அறியோம்   ..நீ  எந்த வடிவம்  யாம் அறியோம்  ..நீ எப்படி இருப்பாய்  என யாம்  அறியோம்  .. ஆனால்  எம் உள்ளம்  நின்னை  மட்டுமே வாரிக்கொள்ள காத்துக்கிடக்கின்றது .ஆனந்தமாய்  கோடி கோடி பிரகாசமாய்  ஜோதி ஜோதி  பிரகாசமாய்  அலையாக  பேரலையாக ...அப்படியே  எம்முள்  எம் நெஞ்சத்துள்  வந்தமர்வாய்  எம்பிரானே ..நீ இருக்கும்  பொழுதெல்லாம்  யாம் எமை மறவோம் ..உடல் மறவோம்  உயிர்  மறவோம்  உணவு மறவோம் .நீ தரும்  சப்தமெல்லாம்  எமக்கு தேனினும்  தெவிட்டாத  அமுத  ஸ்வரமே .காரணமும்  நீயே  ..அதன்  மூல காரணமும்  நீயே .நீ ஆதியா  அந்தமா.. மூலமா...  காரணமா  ? தெரியாது பெருமானே !! ..நின்னை  எம்முள்  எம் உள்ளத்துள்  உள்வாங்க,  உள்வாங்க நெஞ்சகம்  விரிகின்றது ,ஈர்ப்பெனும் அலை  மெல்லிய மலராய் மலர்கின்றது  .எல்லாம்  நின்னுள்ளே  அமிழ்ந்து  கரைந்து  ஒன்றுமேயில்லாமல் போகின்றது .  ஒன்றுமில்லா  ஒன்றோனே !! எந்த தடையும்   உனக்கில்லை எந்தவித ஆற்றலும்  நின்னை  எதுவும் செய்ய இயலாது  பெருமானே   .உள்ளமே  அன்பால்  கசிந்து  செய்வதறியாது  திகைக்கின்றது .நின்  ஒரு துளி  தரிசனம்  அது தரும்  கோடி கோடி புண்ணியம் .ஏழேழு  ஜென்ம பாவமும்  தெறித்து ஓடும்  நின் தரிசனம்  கண்டு .சுடரொளி  நாயகனே எம் பெருமானே  .சிறியோனான எம்முள் இருப்பதோ  எம் நெஞ்சமெனும்  ஒன்றே  ஒன்று அதனுள்  அன்பால்  பேரன்பால் நிரப்பி,  நின்னை எண்ணி  எண்ணி  சிந்தையால்  நினைந்து  நினைந்து ,   நின் தரிசனம்  காண காத்துக்கிடக்கின்றேன்  பேராற்றலே  ..!! பெரும் நாயகனே  !! பிரம்மாண்ட  பிரபஞ்ச  நாயகனே  !! சுடரொளி  ஜோதியும்   ,குளிரும்  நிறைந்த  ஒன்றுமில்லா  ஒன்றோனே  !! வருவாய்  எம் தந்தையே  !! எம் சிந்தையெல்லாம்  நீயாக  வந்தமர்வாய் எம்பிரானே  !! நின்திருவடியில்   என்றும்  என்றென்றும்   சரணாகதி  !! சரணாகதி  !! சரணாகதி  !!



புதுக்கோட்டை  மாவட்டத்தில்  இருக்கும் ஒரு கோவில் ஆவுடையார்  கோவில். ஒரு அருமையான  கோவில் மற்றும்  அற்புதமான  கோவில் .இன்றைய  தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டிய  கோவில் ,நம் குழந்தைகளை எல்லாம்  கூட்டிக்கொண்டு  இங்கு நடந்த  வரலாறுகளை  அவர்களுக்கு  எடுத்துச்சொல்லும்  கடமை  நமக்கிருக்கின்றது .மற்ற  கோவில்களை  விட முற்றிலும்  வேறுபட்ட  கோவில்.இறையை  அரூபமாக  வழிபடும் கோவில் .மஹா மண்டபம்,அர்த்தமண்டபம், தாண்டி  கருவறை  சென்று  வழிபட , அங்கே  எந்த சிலையும்  இல்லை .இறைவன் அரூபமாக  இருக்கின்றான்  எனும்  உண்மையை  உணர்த்த ,கருவறையில்  வெறும்  வெளி  இருக்கின்றது.எந்தவித  மூலவிக்ரஹமும்  இல்லை  அங்கே .உள்ளே  எதுவும்  இல்லை  .ஆறுகால  பூஜையும்  இங்கே தான்  ,ஆவி பறக்கும்  சாதத்தை  வடித்து  கருவறையில்  இருக்கும்  ஒரு பட்டிய கல்லில் அப்படியே  கொட்டுகின்றனர் .கொஞ்சநேரம்  கதவினை  மூடிவிட்டு  திறக்கின்றனர் கொட்டிய  சாதத்திலிருந்து  ஆவியாக  பரவுகின்றது.இதுவே  இங்கே  பூஜையாக  நடந்துகொண்டிருக்கிறது .




சிற்ப வேலைப்பாடுகள்  மிக அற்புதமாக இருக்கின்றது .கல்மண்டபத்தில்  தொங்கும்  கல் சங்கிலிகல்  ,அக்கால  வீடுகளின்  மேற்கூரை  அமைத்திட  மரத்தினால் செய்யப்பட்ட  சட்டம்  போன்று கல்லினால்  செய்யப்பட்ட  மேற்கூரை  மண்டப விளிம்புகள் மிக தத்ரூபமாக  செதுக்கப்பட்டுள்ளது .இப்படியே  யாவற்றையும்  கவனித்து  ரசித்து  கோவிலை  வலம்   வர ,மெல்ல மெல்ல  மனம்  இங்கு நடந்த  இறை நிகழ்வுகளை  தெரிந்துகொள்ள  ஆவல்  கொள்கிறது .எப்படி   இருந்திருக்கும்  என  எண்ண  விளைகிறது .  இங்கு தான்  மாணிக்கவாசக  பெருமானுக்கு  சிவமெனும்  இறை  அற்புதமாக  காட்சியளித்திருக்கின்றது .கோவிலை  மேலும்  சுற்றி வலம்  வர  கோவிலில்  ஒரு மூலையில்  அருகே இருக்கின்றது  ஒரு குருந்த  மரம் .அந்த குருந்த  மரத்தின்  அடியிலே  எம்பெருமான்  அமர்ந்து ,மாணிக்கவாசக  பெருமானுக்கு  அருள் ஆசி வழங்குகிறார்கள்.கால சக்கரத்தை  கொஞ்சம்  பின்நோக்கி  சுழன்று  செலுத்த   ஒரு பரவசம்  வருகின்றது .இங்கு தான்  நடந்தது ,இதோ இந்த  மண்ணில்  தான்  மாணிக்க வாசக பெருமானார்  நடந்திருக்கின்றார்கள். இதோ இங்கு தான்  இறையே ,மனித வடிவில்  ,இந்த குருந்த மரத்தின்  அடியில்  அமர்ந்திருக்கின்றது  எனும்  உண்மையை  உணர்ந்து  சிந்தையை  இறை  நோக்கி  திருப்ப ,இறை  அலைகள்  இங்கே  தவழ்கின்றது.என்றோ நடந்த  நிகழ்வுகள் ,இப்படி  தான்  இருந்திருக்குமோ  என்ற  சிந்தனையே அற்புதமாய்  சுகம் தருகின்றது .இப்படி ஒரு காலம்  கிடைக்காதா .இது போன்ற  காலங்களில்  யாம்  யாராக  பிறந்திருந்தோம் .பெருமானோடு  ஏதேனும்  ஒரு வகையிலாவது உரையாடல்  செய்திருக்க கூடாதா என்று மனம்  ஏங்குகின்றது .இறை ஆட்கொண்ட  காலம் .இறை  தவழ்ந்து மிதந்து  உழன்ற  காலம். சத்தியம்  வாழ்ந்த  காலம் 


"...ஈர்த்தென்னை   ஆட்கொண்ட  

எந்தை  பெருமானே  ..."

........................என்ன  ஒரு வரி .அப்பப்பா !!!.....இந்த  ஒரு வரி போதும்  அப்படியே  எல்லாத்தையும்  மூடிவைத்துவிட்டு ,பேசாம  ஓரிடத்தில்  அமர்ந்து ஆழ்ந்துவிடலாம் ,சதா  சிவமாக  வெளியில் மிதக்கலாம். இந்த வரிகள்  தரும்  ஞானம் மெதுவாக   உள்வாங்க  ஒரு  மௌனம்  சூழ்ந்து  ,கண்களில்  நீர் சொரிந்து  ,அமைதியை  பேரமைதியை   நெஞ்சத்துள்  மெல்லிய  அலையாக  பரப்பும்  அதி நுட்பத்தை  உணரலாம் .ஒரே ஒரு வரி  ஒரு சாதாரண  மனித  மனதை  புரட்டிப்போட்டு  ,அமைதியாக்கும்  அற்புதம்  செய்கின்றது . நுனிப்புல்  மேய்பவருக்கு  அதன் ஆழம்  தெரியாது .திருவாசகத்தை  ஒரே மூச்சில்  படிப்பதை  விட  ,ஆழ்ந்து  அமர்ந்து ஒவ்வொரு  வார்த்தையுள்  புதைந்து கிடக்கும் ஞானத்தை  உணர முற்படுதல்  மிகப்பெரும்  மாற்றத்தை   மனதுள் உயிருள் உண்டுபண்ணுகிறது .



  இறை  இறையை  வாரி அணைக்கின்றது .உள்ளம்  இறையால்   மிளிர்கிறது  அன்பு  பெருக்கெடுக்கின்றது.ஒரு குழந்தையை  தாய்  அரவணைக்கின்றாள்  ஏன்  ? .எங்கோ  இருக்கும்  குழந்தையை  தாய்  எந்த காரணமும்  இன்றி  வாரியணைத்துக்கொள்கிறாள். குழந்தையுள்  இருக்கும் அதன் சொல்வதறியா  இறை ஆற்றல் ,  கவர்ந்திழுக்கும்  ஈர்ப்பெனும் அன்பு நிறைந்த  ஆற்றல் ,சொல்லாமல்  சொல்லி  ,கூப்பிடாமல்  கூப்பிட்டு ,ஈர்ப்பால்  தாயை கவர்ந்திழுத்து , எந்த காரணமும் இன்றி அரவணைக்க வைக்கின்றது .  இங்கே  பெருமகனார்க்கு  இறையோ  டன்  கணக்கில்   அன்பு  அலையாக ஆற்றல்  பெட்டகமாக   உள்ளத்தில்   கொட்டிக்கிடக்கின்றது ,கடல் போல ,வானம் போல  பரந்து  விரிந்து கிடக்கின்றது. ..உடம்பு  மறந்து, மனதை  மறந்து,உணவை  மறந்து,தூக்கம் மறந்து,சிரமேற்கொண்டுவந்த  வேலை மறந்து ,  எல்லாம்   மறந்து  ,சிவத்தை  மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்  பெருமகனார் . சிந்தையெல்லாம்  சிவமே  ..சதா சர்வ காலமும்  சிவமே ..சிவத்தை  தவிர வேறுஒன்றுமில்லை .இறை மட்டுமே தம்முள்   மிளிரவேண்டும்  எனும்  பேராவல் ,கட்டுக்கடங்கா தேடல் உள்ளத்தில்  .ஆதலால்    மாபெரும்  சிவமே  மாபெரும்  பேரொளியே,மாணிக்க வாசகபெருமானின்  அன்பிற்கு  இறங்கி  ஓடிவந்து  அரவணைத்துக்கொண்டது. மாபெரும் இறையையே  மாபெரும்  பிரபஞ்ச நாயகனையே  ஈர்த்து  இங்கே வரவைத்திருக்கின்றது  என்றால்  பெருமகனாரின்  அன்பு  நெஞ்சம்  எந்த அளவிற்கு  புனிதமானது,ஆழமானது   என்பதை உணர பரவசம்  எம்மை கவ்விக்கொள்கிறது .  இறை  ஈர்த்து  அரவணைக்கின்றது  .பெரும்    மாணிக்கவாசகரின் உள்ளம்  இறையால் மாபெரும்  ஞானம்  பெறுகின்றது .  .ஏக்கம்,  மெய் ஞான  புலம்பல் ,சதா  சர்வ காலமும்  இறைபற்றிய  எண்ணம் ,எத்தனையோ  பிறவியின்  தேடல் ,எல்லாம்  சேர்த்து  உள்ளத்தில்  பெரும்காந்தம்  போல  இருக்க ,இறை  கவ்வி  ஈர்த்து  அரவணைத்து  ஞானம்  தருகின்றது  பெருமகனார்.சொல்லும்  வார்த்தையெல்லாம்  திருவாசகமாக  மிளிர்கின்றது .மனிதமும்  தெய்வமும்  உரையாடிய  இடம் .இறையும்   இறையும் ஒன்றுகலந்த  தருணம் நிகழ்ந்த  இடம்   .ஜோதியும்  ஜோதியும்  ஒன்றாய்  கலந்த இடம் .வாய்ப்பு  கிட்டியவர்கள்  ஒரு முறை  சென்று  ஆழ்ந்து  மாணிக்க வாசகர் திருவடிபட்ட  மண்ணினை  தொட்டு வணங்குங்கள்,இறை தேடல்  எளிதாகும்  .



".........கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் 

            கொண்டுணர்வார் தங்கருத்தின்....."


சதா  இறையையே  நினைத்துக்கொண்டிருக்கும்  மாணிக்க வாசக பெருமான் .நின்றாலும்   நடந்தாலும் ,அமர்ந்தாலும் ,ஒரே இறை ...இறை  இறை ...இறைவன்  சிந்தனையே எப்பொழுதும்  .அப்படிப்பட்ட    ஸ்தூல  உடலால்  இங்கு  தான்  அமர்ந்திருக்கவேண்டும் .காலம்  சுழன்று  ஓடோடிவிட்டது .இருந்தாலும்  அதன்  அலைகள்  இதோ இந்த  காற்றில் தான் மிதந்துகொண்டிருக்கின்றது , உலா வந்துகொண்டிருக்கிறது  .மாணிக்கவாசக  பெருமானே  ஒரு மாபெரும்  மஹான் ,அற்புதமான சித்தர் . இறை ,சிவம்  என்பது கட்டுக்கடங்கா  ஆற்றல் கொண்ட  சர்வேஸ்வரன் .பிரபஞ்சத்தையே  தம்முள் படைத்தது  காத்து  எல்லாம்  செய்பவன்.ஒரு மாபெரும்  இறை  மற்றும்  தம் பிம்பமாகிய  சிறு இறை  .இரண்டும்  இறையே  .இறையும்  இறையும்  ஒன்றோடு  ஒன்று  கலந்த  இடம்  .ஜோதியும்  மனிதமும்  பேசிக்கொண்ட  காட்சிகள்  அரங்கேறிய  இடம் .மாபெரும்  பிரபஞ்ச  நாயகன்  ,சிவம்  தேடும்   உள்ளத்தை  கவர்ந்திலுக்கும் பேரொளி , தம்  மாணாக்கனை வாரியணைத்து  யாவற்றையும்  உணர்த்துகின்றது  ..சிவம்  ஞானத்தை  அளிக்கின்றது. அதை  அப்படியே  தம்  கூர்த்த  மெய்  ஞானத்தால்    கவனித்து உள்வாங்குகிறார்கள் பெருமானார் .கூர்த்த  ஞானம் என்பது  மனம்  எங்கும்  செல்லாமல்  ஒரு முகப்பட்ட  சிந்தனையோடு  இறை  உணர்த்துவதை அப்படியே  உள்வாங்குவது .ஒரு சிறு பிசிறு  கூட மனம்  எங்கும்  செல்லாது .சதா இறை உணர்த்துவதை  அப்படியே  நூற்றுக்கு  நூறு  சதவிகிதம்  உள்வாங்குவது அதி சிறந்த  மாணவனாகிறார்  பெருமகனார் .ஒரே கவனம்  இறையின்  மீதே . அந்த அளவிற்கு  இறை தேடல்  இறை  தாகம்  கொண்ட  ஒரு மாபெரும்  திருமகனார்  மாணிக்க வாசக பெருமானார் .எந்த அளவிற்கு தேடல்  இருந்திருந்தால்  இப்படி ஒரு  வரி  பிறந்திருக்க  வேண்டும்  என்பதை   எண்ணும்  போதே  உடம்பு  புல்லரிக்கின்றது.இப்படி  ஒரு கூர்த்த  மெய் ஞானம்  கிடைக்கபெற்றபின்  சொல்லும்  வரியெல்லாம்  தெவிட்டாத  தேன் வாசகமே . இறை தரும்  அமுத ஞானம்  உள்வாங்கிய  அடுத்த  நொடியே  ,காட்டாற்று  வெள்ளம்  போல  இறை  அவர் வாசகங்களில் துள்ளியெழுகிறது .காலம்  காலமாய்  யாவருக்கும் பயனளித்து  அதில்  பொதிந்து வைக்கப்பட்ட  அலைகளை  வாரி  வழங்குகின்றது  .


"...ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தையுள்

ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே...."


இறை தேடும்  உள்ளங்களுக்கு  திருவாசகம்  ஒரு அற்புதமான உயிர் துடிப்பு நிறைந்த மிகச்சசிறந்த  வழிகாட்டி நூல் .இறைவனை  எப்படி  உணரலாம் எனும்  ஆர்வம்  கொண்டவர்கள் ஒரு சிறு  முயற்சி  எடுத்து , பெருமகனார்  தந்த  இறைவாசக  வரிகளை  சற்றே  அமர்ந்து ஆழ்ந்து சிந்தனை  செய்ய ,  கரைபுரண்டோடும்  அளவிற்கு  இறை வெள்ளம்  மனதில் உற்சாகமாக  பொங்கி ஓடுகிறது .ஒரு சாதாரண  உள்ளத்தில்  இறை வந்தமர்ந்தால் ,எப்படி  இருக்கும்  ? .உணர்வு  மனம்  எல்லாம் ,வெண்பஞ்சு  மேகம்  போல  எடையற்று  களங்கமற்று  தூய்மையாக  வெண்மையாக  பளிச்சிடும்  தன்மைக்கு  மாறுகிறது  .தூய மழைத்துளி  போன்று  transparent ஆக மாறுகிறது.

 .    . .வெள்ளம்  என்றாலே  மிகுந்த  நீர்  பெருக்கெடுப்பு  ,ஆற்றின்ப வெள்ளம்  என்றால்  .இறை வந்த  உள்ளம்  பெரும்  இன்பம் நிறைந்து  கரைபுரண்டோடுகிறது.கட்டுக்கடங்காத  கரைபுரண்டோடும்  இறை எனும் ஆற்றின்ப   வெள்ளம்  பெரும்  ஊற்றாய்   பெருமகனாரின்  நெஞ்சத்துள்  வியாபிக்கின்றது .இப்படிப்பட்ட  உள்ளம்  இருக்கும் ஒருவர்   வெகு தூரத்தில்  இருந்தாலே  அதன்  ஆற்றல்  அருகில் இருப்போருக்கெல்லாம்  எந்த அளவிற்கு  நனமை  செய்யும் என்பதை  புரிந்துகொள்ளமுடிகிறது .தான் பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்  போல  திருவாசகமாக  இறைவாசகமாக  ஒவ்வொரு   வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும்  இறையின்  நுட்பத்தை  அதன் தன்மையை  அமுதமாக பொதிந்து வைத்து இன்றும்  நம்மோடு  வாழ்ந்துகொண்டிருக்கின்றார் பெருமகனார்.இறை உணர்வுகளை  தரும் வரி தந்த  மாணிக்க வாசகருக்கு  நன்றிகளை  எப்படி  யாம் சொல்வது , உணரும்போதே  செய்வதறியாது  சான்றாக  மலரும் கண்ணீர்   எம்மை  மீண்டும்  மீண்டும்  இறை அலையால்  மனதினை குளிக்கவைத்து  தூய்மை செய்கிறது .காலமெல்லாம்  நின்  திருவடி  சரணம்  எம் குருநாதனே   மாணிக்கவாசக பெருமானே !! 


தேற்றனே  என்றால்  தெளிவானவன்  தேற்றத் தெளிவே  என்றால்  தெளிவிலும்  தெளிவானவன் எல்லா வகையிலும்  தெளிவானவன்  களங்கமற்றவன் அவனை விட தூய்மை யானவன்   அறிவில் ஆற்றலில்  என  எதிலுமே யாருமே  இல்லை .இறை  உணர்ந்தால் தெளிவிலும்  தெளிவானவனின்  தன்மைகள்  கசிந்தோடுகிறது. ஆழ்ந்து  உள்ளன்போடு  திருவாசகத்தை  படிப்பதால்  ஒருவனின்  மனது  தூய்மையாகிறது .ஏனெனில்  இறை வந்தமர்கிறது .இறைவந்தமர்வதால்  கர்மவினையெல்லாம்  கரைகிறது இறைவனே  யாவற்றிற்கும்  முதலும்  முடிவும்  அவனைவிட பெரிதும்  இல்லை சிறிதும் இல்லை .அவனை விட பலம்  பொருந்தியவன்  எங்குமே இல்லை.எனவே  இறையின்  நிழலில்  இருப்பது என்றும்  சுகமே , நன்மையே .எப்படிபட்ட  வினை தாக்கம் கொண்டாலும் இறைவனிடம் சரணாகதியடைய ,எல்லாம்  இறையில்  கரைந்து  ஒன்றுமில்லாமல்  போகிறது .   ஏனெனில்  இறைவனை  எதிர்த்து   எதுவும் ஒன்றும்  செய்ய முடியாது   




பெருமகனாரின்  ஒவ்வொரு  வார்த்தையும் அது  எம்முள்  ஏற்படுத்திய  தாக்கம் அதிகம்.அதன்  ஆன்மீக  வேகம்   அதிகம்   அதன்  பலன்  அதிகம் .அந்த  தாக்கத்தின்  ஒரு சிறு  பதிவே  இக்கட்டுரை.இவை யாவும்  எமக்கு  ஏற்பட்ட அனுபவமே.ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு அனுபவம் கிட்டும் .கிட்டத் தட்ட  இறையே   ஒவ்வொரு  வரியிலும்  பொதிந்து கிடக்கின்றது .சொல்ல  இயலா  சுகத்தை  இறை பற்றிய  சிந்தனையையும்  அதன் தாத்பர்யத்தையும்  உணர்த்துகின்றது .யாவற்றையும்  எழுத இயலவில்லை  இங்கே  உணர்ந்தால்  மட்டுமே  ஒரு சில  பொதிந்து கிடக்கும்  இறை  ரகசியங்கள் புரிந்துகொள்ளமுடிகிறது .காலம்  கிட்டும்  போது மீண்டும்  அகத்தியத்தில்  எழுதுவோம் .ஒரு முறை  திருவாசக  பாடலுக்கு  அர்த்தம்  தெரியாமல் இருந்தபோது,  பல முறை வாசித்தும்  பொருள் புரிந்துகொள்ளமுடியவில்லை  எப்படி பெறுவது  என்ற சிந்தனையில்  இருக்க  ,வான் முலம் ஒரு அலை உணர்வாக  மாறி  அதன்  அர்த்தங்களை  யாம் உணரும்  அளவிற்கு  ஒன்று உதவியதை  என்றும்  எம்மால்  மறக்க  இயலாது .அந்த  அளவிற்கு  மாணிக்கவாசக பெருமானார்  இன்றும்  வான்காந்தத்தில்  கலந்திருக்கின்றார்கள் .இறை  தேடும் உள்ளங்களுக்கு என்றும்  உதவ என்றென்றும்  கலந்திருக்கின்றது திருவாசகம் எனும் தெவிட்டாத  தேன் வாசகம்.

இதழ் வாசிக்கும்  அகத்திய  உள்ளங்களுக்கும்  மாணிக்க  வாசக  பெருமானின்  அருள் கிடைக்க  இறையிடம் வேண்டுகின்றோம்   பிரார்த்தனை  செய்கின்றோம்.

இக்கட்டான  இக்கிருமி சூழலில் ,யாவரும்  உதவிகள் தேவைப்படும்  உள்ளங்களுக்கு  எவ்வகையிலேனும்  முடிந்தவரை  உதவி  செய்வோம் .மனம் குளிர  வாழ்த்துவோம்.  அமைதியான  சூழல்  விரைவில்  திரும்பிட  இறையிடம்  பிரார்த்தனை  செய்வோம் .உதவிய  உள்ளங்களுக்கு  இறை  ஆசீர்வாதங்கள் .இது போன்ற சூழலில்  உதவுதல்  மிகச்சசிறந்த  புண்ணியம் . உதவும்  உள்ளங்களாலே  இவ்வுலகம்  உருண்டோடுகிறது.அனைவருக்கும்  விநாயகர்  சதுர்த்தி  வாழ்த்துக்கள் .விக்னங்களையெல்லாம்  தீர்த்திடும்  விநாயகப்பெருமானின்  ஆசிபெறுவோம் .


வாழ்க  வளமுடன்  !!

ஓம் அகத்தீஸ்வராய நமஹா ..!!

ஓம் அகத்தீஸ்வராய நமஹா ..!!

ஓம் அகத்தீஸ்வராய நமஹா ..!!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்