ஷக்தி ஸ்வரூபிணி ..!!!



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
                        
                                                     -     அபிராமி அந்தாதி 

அழகெல்லாம் ஒருசேர  பூத்தவளே !! ஆயிரம் கோடி சூரிய ஜோதி பிரகாசம் உடையவளே !!  பிறவாமுக்தியளிக்கும் பிரபஞ்சநாயகனை  பின்னிய கொடிபோல சூழ்ந்தவளே   ..!! ஸர்வமங்களம் நிறைந்தவளே ..!! ஸாந்தஸ்வரூபியே ..!! அன்றுபூத்த மலர்போல என்றென்றும் உற்சாகம் கொண்டவளே ..!! ஒளிபிழம்பாம் ஓராயிரம் கோடி கோடி சூரியனின்தகதகவெனும் ஆற்றல் பெற்று  என்றென்றும் சிவத்திலிருந்து ஒளிர்பவளே ..!! சிவத்தின் சாராம்சமே ..!! சிவத்தின் இயக்ககலமே ..!! சிந்தையெல்லாம் சிவத்திடம் வைத்தவளே..!!அனுக்ஷணமும் அன்பால்  அகிலத்தை காத்தருள்பவளே..!! கருணா  ஸாகரமே ..!! பாசமும் அங்குசமும் கைகளில் ஏந்தியவளே !! அபயம் வரம் அருள்பவளே !! கலைகளெல்லாம் கரம்கூப்பும் காருண்யம் நிறைந்தவளே !! வித்யாலஷ்மியே !!  அன்னபூரணியே !! மகாலஷ்மியே !! நின் விழி அசைவால்  விதியையே மாற்றியமைத்து , ஸர்வபாக்கியங்களும் அருளும் ஸர்வேஸ்வரியே  ..!! 
வருக தாயே !! வருக !! என்றென்றும் நின் வரவு வளங்களையும்  செழுமையும் வாரிவழங்குகிறது ..!!  எம் உள்ளத்தில் நெஞ்சத்தில் அன்பை நிரப்பி,ஆயிரம் ஆயிரம் தாமரை இதழ்கொண்டு,இருகரம் கூப்பி  நின் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றேன் தாயே !! .வரவேண்டும் நின் வரம்வேண்டும்  தாயே !!  ஸர்வ கோடி ஜனங்களையும் காத்து ,கொடியகிருமியைஅழித்து, சுபிஷத்தை அருள்வாய் தாயே !! 


ஞானபலம்(ஆன்மா பற்றிய அறிவு)  ஒன்று போதும்  இந்த வாழ்வை மிக எளிதாக கடந்துவிடலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது  . ஞானமே  மனதிற்கு வலிமையை ஊட்டுகின்றது .வலிமை கொண்ட மனமே எதையும் வெல்கிறது .வலிமையற்ற மனம் ஏதோ கொஞ்சம் போராடி இறுதியில் வலிமை குன்றி ஆற்றல் இழந்து துவண்டுபோகிறது .துவண்டுபோன மனதினை வைத்து என்ன செய்யமுடியும் இல்லை அவர்கள் ஆற்றும் கர்மம்தான்  முழுமையில்  செய்யமுடியுமா ? கர்மவினையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்படும் மனதிற்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆன்மாவை பற்றிய தீனி போட வேண்டியது அவசியமாகிறது.எனவே தான் தாம் யார் ?தம்முள் இருக்கும் இந்த ஆன்மா யார் ? என்று அறிய முற்படும் நாளிலிருந்து மனதினை வெல்லும் வழி ,வாழ்வினை வென்று முக்தி நோக்கி செல்லும் வழி கிடைக்க வழிவகை செய்கிறது.
 
ஆன்மாவிற்கு ஜென்மாவும் கிடையாது மரணமும்  கிடையாது.ஆன்மா பிறப்பதுமில்லை  அது  இறப்பதுமில்லை .ஆன்மா அழிவற்றது இந்த உடல் அழியக்கூடியது இந்த உடல் கொண்டு பல்வேறு கர்மங்களை ஆற்ற வேண்டியிருக்கின்றது ஒவ்வொரு கர்மமும் அன்றைய நாளில் எவ்வாறு விதிக்கப்பட்டதோ, அதை அழகாக புரிந்துகொண்டு செய்வது என்பது மிகமிக அவசியமாகிறது இந்த உடல் கொண்டு பல்வேறு கர்மங்களை ஆற்ற வேண்டிய சூழலில் இருக்கின்றோம் .கர்மா ஆற்றுவது  ஈஸ்வரனுக்கு செய்யக்கூடிய மிகப் பெரிய  தொண்டு  போன்றது. ஈஸ்வர சமர்ப்பணம் ஆகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் சிவத்தை வணங்குவதும் ஒன்றுதான், இந்த உடல் கொண்டு பல்வேறு கர்மங்களை செய்து, அன்றாடம் நம்மை எதிர்கொள்ளும் ஆன்மாக்களுக்கு சரியான முறையில் அவர்கள் கேட்பதை புரிந்து கொண்டு, யாருக்கும் எந்தவிதத்திலும் இன்னலின்றி ,என்ன பணியாற்ற வேண்டுமோ அதை செய்வதும் ஒன்றுதான். ஒவ்வொரு செயலிலும் ஈஸ்வர பக்தி கொண்டு ,இது இறைக்கு செய்யும் தொண்டு என்று செய்ய ,செய்யும் ஆன்மாவிற்கு அது மோக்ஷதை அளிக்கின்றது . 




 கோடான கோடி மக்கள் இந்த பூமியிலே ,ஒவ்வொன்றும் ஒவ்வொரு அற்புதம் நிறைந்த ஆத்மாவே .ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்காக படைக் கப்பட்டிருக்கின்றது.யாரும் இழிவல்ல .எதுவும் தேவையில்லாமல் படைக்கப்படவில்லை .அற்புத இறை எனும்  ஆத்மா  உள்ளே ஈஸ்வரமாக ஒவ்வொரு உயிருள்ளும் இருக்கின்றது எனும் சூட்சும உண்மையை புரிந்துகொண்டு  கடமையை ஆற்ற ஒவ்வொரு நாளும் மோக்ஷம் செல்லும் பாதையை நன்கு பலப்படுத்துகிறது.ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு படுக்க போகும் வரை மனதை தூய்மையாக வைத்துக்கொண்டு தர்மவழியில், கிடைத்த வேலையினை செய்வது என்பது ஒரு மிகப்பெரிய ஆற்றல் மனதிற்கு  சேர்த்து மேலும் மேலும் மனதிற்கு  வலிமையை தருகிறது.ஒரு நாள் ஒரே ஒரு நாள் உங்களால் மனதினை அதன் எண்ணங்களை தூய்மையாக  ஒழுக்கத்தோடு வைத்திருக்க முடியுமா ? இவ்வாறு கொஞ்சம் கூட தீய வழி  சிந்தனை செய்யாமல் ,யாரையும் குறை சொல்லாமல் ,யாரையும் சபிக்காமல் , இறைகொடுத்த கர்மத்தினை ஆற்றி, தூய்மையோடு மனதினை வைத்திருக்க முடியுமா ? .....முயன்று பாருங்கள் அதன் பிறகு நீங்கள் படிக்கும் ஸ்லோகங்களும் ,தியானங்களும் எவ்வளவு  ஆழம் நிறைந்தது என்று புரியும் .நான் லலிதா சகஸ்ரநாம பாராயணம் தினந்தோறும் செய்கிறேன் ஆனால் அடுத்த நிலை இன்னும் கிடைக்கவில்லையே எனும் கேள்விக்கு பதில் கிடைக்கும் . ஏனெனில்  தூய்மையான மனம் ஒன்றே தாயவளின் அருள் அலைகளை உணரும் தன்மை நிறைந்தது . மனம் துய்மை இல்லையென்றால் அது அலை கிரகிக்கும் தன்மையினை இழந்துவிடுகிறது . பெரும் ஆற்றலெல்லாம் வீணாகிவிடுகிறது.இதை சரிசெய்யவில்லை எனில்   மீண்டும் மீண்டும் ஆற்றல் இழப்பே  தொடர்கிறது வாழ்வில் .விழிப்போடு மன விரயத்தை முதலில் தடுத்தலே மிக உன்னதமானது.


ஆடி மாதத்தில் தாயவளின் அருள் அலைகள் இந்த பூலோகத்தில்  ஒரு படி மேலே வந்து சூட்சுமமாக கொட்டிக்கிடக்கின்றது என்பது எம் குருநாதர் வாக்கு. இந்த ஆடி மாதத்தில் ,வாரத்தில் ஒரு நாள், ஒரு வேளையாவது உபவாசம் இருந்து ,தாயவளின் கருணை அலைகளை கிரகிக்க முயலுங்கள்.எம் குருநாதர் எமக்கு கூறியது .."வருஷத்தில் 365 நாளும் கிழித்தது போதும்,எல்லாத்தையும் மூட்டைகட்டிவைத்துவிட்டு ,ஆடிமாதத்தில் அந்திவேளையில் ,பூஜைஅறையில் ஒரு அகல்விளக்கேற்றி,அதில் ஒளிரும் சுடரை பார்த்து , மனம் உருகி அம்பாளை வழிபடு ..அன்பை நிறைந்து ..கண்கள் நீர் பெருக மனம் உருகி வழிபடு ..தாயவளிடம் அருள்வேண்டு ...அருள் தருவாள் சூட்சுமமாக.." என்றார்.இது சத்தியம் நிறைந்த வாக்கு. 

முடிந்தவர்கள் கொட்டிகிடக்கும் அருள்அலை  பிடித்து மேலேறுங்கள் என்பதற்காகவே இந்த ஆடி மாதம் இருக்கின்றது என்று தோன்றுகிறது தாயவளின் சக்தி அலைகள் எங்கெங்கும் வியாபித்திருக்கும் தன்மையினை உணர முற்பட ,நெஞ்சம் எங்கும்  மகிழ்ச்சி பொங்கும் அலைகள்  நிரம்புகிறது.உள்ளம்  விரிகிறது .நெஞ்சமெனும் புதினம் மலர்கிறது . உள்ளத்தில் மேலும் மேலும் ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் வாய்ப்புகிட்டுகிறது அங்கே  நெஞ்சம் அன்பால் நெகிழ்ந்து ,அன்பு அலைகள் சூழ்ந்து  உள்ளம் பொங்குகிறது உணர்வு மென்மையாகிறது ,மகிழ்ச்சி அலைகள்  கரைபுரண்டு ஓடுகிறது ,ஆனந்த அலைகள் மென்மை நிறைந்த மனதினை  கவ்விக் கொள்கிறது.எம் கண்ணெதிரே இருக்கும் அம்பாளின் வரைபடம் வேறு விதமாக தெரிகிறது .பசுமை நிறைந்த அலைகள் மருவுகிறது .அது உருவமா அல்லது அருபமா என சொல்ல இயலாத வாறு ஒன்றோடு ஒன்று கலக்கும் நிலையில்  மாறுகிறது  .ஒரு புறம் அலைகள் அது நொடிபொழுதில் மறுபுறம் ஒன்றுமில்லா ஒன்றாக மாறுகிறது .ஒன்றில் மற்றொன்று  கரைகிறது.அந்தி நேரத்தில் இரவு பகலினை  கவ்விகொள்வது போல ஒன்றில் மற்றொன்று கவ்விக்கொள்கிறது. 




இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. காணுமிடமெல்லாம் நிறைந்திருக்கின்றது இறை இல்லாத இடமே இல்லை
மாபெரும் பிரம்மத்தை யாரும் தூய்மை செய்ய முடியாது. மாபெரும் ஒளி பொருந்திய பிரம்மத்தை   மற்றொன்றாக மாற்ற இயலாது. எந்த மாறுதலுக்கும் உட்படாது .இறை எனும் பிரம்மத்திற்கு எதையும் கொடுக்க இயலாது.இறை வழி  வந்தவர்கள் குருநாதர்கள் . இறையை நமக்கு காண்பிப்பவர்கள் ,நம் புருவமத்தி தொட்டு  இதோ பார் இறை எனும் சக்தி  இருக்கின்றது என்பதை  நம்முள் உணர்த்துபவர்கள் .இறை நிலையை உணர்ந்த குருநாதர்களுக்கு ஈடாக என்ன கொடுக்க முடியும்.மாபெரும்   இறையை உணர்ந்தவர்களுக்கு எதைக் கொடுத்து ஈடு செய்ய முடியும் .இவர்கள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை அல்லது இவர்களுக்கு எதை கொடுத்தும் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாது . ஒப்புயர்வற்ற உன்னதமான  போற்றுதலுக்குரியவர்கள். என்றென்றும் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில்  இருப்பவர்கள்   குருநாதர்கள். மாறாக அவர்களே உங்களுக்கு நிறைய கொடுக்க முடியும்.அதை நாமே பெற்று பயனடையமுடியும்..எவ்வளவு பொருள் கொடுத்தாலும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் எவ்வளவு  சொத்துக்கள் கொடுத்தாலும் அது எதையுமே அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் ஏனெனில் உள்ளம் பிரம்மத்தில் லயித்தது ,இறை அன்பைவிட பெரிதாக யாரும் அவர்களுக்கு எதுவும் கொடுத்துவிடமுடியாது. .....இந்த புண்ணிய பூமியில் இறையின் கருணையால் ஆயிரம் ஆயிரம் அற்புத மகான்கள் குருநாதர்களாக  வந்துகொண்டேயிருக்கிறார்கள்.மந்திரஜபம் செய்பவர்கள் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளை முதலில் மானசீகமாக வணங்கி அருளாசி பெறுங்கள் .அற்புத மகான் .இன்றும் திருவண்ணாமலை  ஸ்ரீ  சேஷாத்ரி சுவாமிகள்  ஆசிரமத்தில் அருள் அலைகளை உணரலாம் .மந்திரங்களை சொல்லி சொல்லி இடைவிடாது  ,உரு ஏற்றி ,ஏற்றி இறை ஆசிகள்  பெற்றவர்.லலிதா சகஸ்ரநாமமோ அல்லது வேறு ஸ்லோகமோ எதுவாயினும் பாராயணம் செய்தல் மிகுந்த புண்ணியம் சேர்க்கவல்லது.குருவின் அருள் பெற்று சொல்வது மேலும் வலிமையை சேர்க்கவல்லது.உரு ஏற ,திரு ஏறும் ,திரு ஏற வினை மாறும் .



ஒருமுறை ஒருபெரும் குழப்பத்தில்  ஊரெல்லாம் சுற்றி என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தபொழுது ,கடைசியில் சேஷாத்ரி மகானின் சன்னதி சென்று சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கியபொழுது , சுரீரென்று ...எம் உள்ளத்தில் மனதில் ஒரு அறை அறைந்தது போல ஒரு குரல்   "......அட... ச் ..ச்சீசீ ... போடா ...."  என்று ஒலித்தது .உள்ளத்தில், மனதில் சுரீரென்று வலித்தது ...காதில் ரீங்காரம் போல ஒலித்தது ..அந்த நொடி முதல் என்னை ஆட்டுவித்த   மன குழப்பம் இருந்த இடம் தெரியாமல் ஒடிவிட்டது .பெரும் பாரம் இறங்கியவுடன் மனம்  துள்ளிகுதித்தது.இன்றும் என்றென்றும் அருள்புரியும் அற்புதமகான்.


ஷக்தி அலைகள் வாழ்வின் உன்னத ஜீவ அலைகள்.சிவ அலைகள் நேரடியாக முக்தியை நோக்கி.சக்தி அலைகள் வாழ்வில் எல்லாவளங்களையும்  கிடைக்கச்செய்து முக்தியை அளிக்கின்றது. பிரம்மத்தின் தன்மையே சக்திவடிவில் ஹ்ரீம்காராமாக மின்னுகின்றது.ஹ்ரீம்ஹாரி ....அற்புதம் அருள்பவள் ஸகல பாக்கியங்களும் அருள்பவள் ..ஸகல செல்வங்களும் அருள்பவள்....தாயவள் பாதம் போற்றுவோம்.

வாழ்க வளமுடன்
ஓம் அகத்தீஸ்ஸ்வராய நமஹா ..!!
ஓம் அகத்தீஸ்ஸ்வராய நமஹா ..!!
ஓம் அகத்தீஸ்ஸ்வராய நமஹா ..!!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்