யாம் எனும் இறை ..!!!



எம்முள்ளே  எங்கும் நிறைந்த  பரம்பொருள்  இறை எனும் அற்புதம் தம் பயணத்தினை தொடர்கிறது.ஒரு மிக பெரிய அற்புதமான எங்குமே நிறைந்த பரம் பொருள்,  சர்வ வல்லமை நிறைந்த ஆற்றல் அது எம்மோடு ஏற்படுத்திய ஒரு  பிணைப்பு,அதனால்  எம் உள்ளத்தில்  ஏற்படுத்திய தாக்கம் அதன் விளைவாக கிடைத்த ஒரு மிகப்பெரும் நம்பிக்கை  இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி மிக அழகாக பயணிக்கவைக்கிறது . எம் தந்தை போல் எமக்கு பின்னால் இருந்துகொண்டு இயக்குவதால் இந்த உயிர் துள்ளிக்குதிக்கின்றது.எங்கும் எங்கெங்கும் வியாபித்து அற்புதமாய் செயல் ஆற்றுகிறது .எவன் ஒருவனுக்கு உயிர் பற்றிய ஞானம் .உயிர் பற்றிய ஒரு தெளிவு இருக்கிறதோ,உயிர்  பற்றிய ஒரு பரந்த அனுபவம் இருக்கிறதோ  அவனுக்கு மரண பயம்  என்றுமே ஏற்படுவதில்லை.மன அழுத்தம் வீண் குழப்பம் எல்லாம் இந்த  பாழாய்போன மனம் வழி, இந்திரியங்கள் வழி செல்வதாலே,கூனி குறுகிய நான் எனும்  அகந்தை , எனது  உடம்பு மட்டுமே ,அழகான இந்த கண்கள் கைகள் எனும் ஸ்தூலம்  மட்டுமே ,யாம் செய்யும் செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்பட்டன ,என்னாலே இவ்வளவு பொருட்கள் ஈட்டப்பட்டன ,என்னாலே இவ்வளவு அறிவு பெறப்பட்டது என்று அகந்தை முன்னின்று  ,அழியபோகும் இந்த மாய பிம்பங்களில் உழல்வதால் ,மாபெரும் மதிப்புகொண்ட  ஆற்றலை உள்ளடக்கிய உள்ளம்,உயிர் ,  கூனி குறுகிக்கொண்டது தம்மை தம் ஆற்றலை . இப்படி கூனி குறுகுவதற்கா இந்த பிறப்பு ....இல்லை இல்லை .  உடம்பினுள் குடிகொண்ட உத்தமன் இந்த ஆத்மா , அவன்  சர்வ வல்லமை  படைத்தோனின்  சிறிய  பிம்பம் அவன்.  ஞானம் அதை அறிய முற்பட வேண்டும் எனும் எண்ணம் உதிக்கும் போதே , அங்கே சூரியன் பட்ட பனித்  துளி விலகுவது போல சட்டென மறைகிறது இந்த  மாயை . உயிர் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி மனதினை ஆழ்ந்து உள்நோக்கி சென்று  ஆழ்ந்து அகண்ட எங்கும்  வியாபித்திருக்கும்  எல்லையற்ற  கருணையுடையோனின்  சிறப்பை  உணர முற்பட  அன்பு  கரைபுரண்டோடுகிறது .மேலும் மேலும் அமைதியில்  ஆழ்ந்து ,உயிரின்  மூலத்தோடு  கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நிற்க  முற்பட ,ஒரு முழுமையான அடர்வு நிறைந்த தன்மையை எற்படுத்துகிறது.அவ்வாறு மேலும் மேலும் ஆழ்ந்து உயிர் பற்றிய சிந்தனை செய்ய ,மன அலைச்சுழல் குறைந்து  ,அடர்வு அதிகம் நிறைந்த ஜீவகாந்தத்தை எற்படுத்தி ,சூட்சும தேகம் பற்றிய விழிப்பை உருவாக்கி ,உள்ளே ஒரு மாபெரும் நம்பிக்கை ஏற்படுத்தி ,யாம் இந்த மாபெரும் இறையின் ஒரு பிம்பம் என்பதை நினைவுபடுத்தி பேரமைதியில் ஆழ்த்திவிடுகிறது .

சர்வ வல்லமை படைத்த ஒன்று எம்முள் உயிராய் இருக்கின்றது .உயிருக்கு அழிவில்லை , உயிரை நிலத்திலே புதைக்க முடியாது ,உயிரை எதைக்கொண்டும்  வெட்ட இயலாது ,நெருப்பினாலும் பொசுக்க இயலாது ,நீரினாலும் மூழ்கடிக்க இயலாது .எவ்வளவு பெரிய வலிமையான ஆயுதம் .கொண்டும் எதுவுமே செய்ய  இயலாது.உடம்பை வேணுமானால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.ஆனால் யாம் ,எம்முள்ளே  குடிகொண்ட உத்தமன், உடம்பல்லவே எனில் எமக்கு  அழிவில்லையே.யாம் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் ஒரு  அற்புத பிம்பம் தானே .பிறவி அது தொடர்கிறது .தூங்கி எழுவது போல இவ்வுடம்பு போன பின்பு வேறு ஒரு உடம்பு என எம் கர்மவினை தொடர தொடர ஈனபிறவி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. உடம்பாய் இருந்தால் தானே இந்த மனம் எம்மை பாடாய் படுத்தும் . இந்த எல்லைக்குட்பட்ட இந்த ஸ்தூல தேகம் மட்டும் தான் நான் , என்று இருந்தால் தானே எமக்கு பழுது, தேய்மானம் துன்பம் ஏற்படும்..




நான் என்பது யார் ? யாம் என்பது யார் ? .இந்த இதழ் வாசிக்கும் அனைத்து உள்ளங்களும் யாமே ,அந்த யாமே எங்கும் நிறைந்திருக்கின்ற பரம் பொருளின் ஒரு அற்புதமான அங்கம் .எந்த யாமும் வலிமை குன்றியதில்லை .மிக அதிக உன்னதமானது .ஒரு முறை முயன்று யாம் இந்த உடலல்ல ,இது அழியும் உடல் கண் காது மூக்கு வாய் செவி எனும் ஐந்து புலன்களும் அதனால் உருவான நிகழ்வுகளும் அழிந்துபோகும் அற்பமானவை.அது மட்டுமா ..இந்த மனமும் தான் அழிவை தரக்கூடியது .இருக்கும் நேரத்தில் 99.99% ஐ மனம் மென்னும் மாய உலகம் நம்  ஆற்றலை  மென்று தின்று விழுங்கிக்கொண்டிருக்கின்றது.இந்த மனமும்  அதன் போக்கிலே   செல்வதால்  யாவும்  அழிவை  நோக்கியே  பயணிக்கின்றன .இவைகளை கொண்டு எதுவும் செய்ய இயலாது.உதவாக்கறையான பயத்தையும் கவலையும் வீண் குழப்பங்களையும் தரவல்லது எல்லாம் அழிவை நோக்கியே இழுத்துச்செல்லும் ஒரு illusion .மதியையே மயக்கும் ஜிகினா காகிதம் போல கவர்ச்சியால்  இழுத்து ஆற்றலை துவம்சம் செய்யும் ராட்சஸ உலகத்தில்  மூழ்க வைக்கிறது .மாயை ,உடலே ஒரு மாயை ,மனம் ஒரு மாயை ,பார்க்கும் கேட்கும் சுவைக்கும் நுகரும் எதுவும் ஒரு மாயை.இந்த உலகமே மாயை .மாயையில் சிக்கி அடிபட்டு உதைபட்டு சிக்கி தவிப்பது இந்த ஸ்தூலம் ,மனம் ,பஞ்ச இந்திரியங்கள்  மட்டுமே.ஆனால் ஆத்மா அல்ல. இறை அல்ல.இறை என்றும்  மாறுவதில்லை எந்த சுழற்சிக்கும் ஆட்படுவதுமில்லை.வெயில் காலம் மிகுந்த வெப்பமாய் சுட்டெரிக்கின்றது .குளிர் காலம் நடுங்க வைக்கின்றது .இரவும் பகலும்  வந்து வந்து செல்கின்றது.கிருமிகள்  வருகின்றது சர்வநாசம்   செய்கிறது .வெட்டுக்கிளிகள்  வருகின்றது  துவம்சம்  செய்கின்றது .இவை யாவுமே ஒரு சுழற்சிக்கு உட்பட்டு வருவதும் செல்வதுமாய் இருக்கின்றது .சளி வருகிறது காய்ச்சல் வருகிறது ,உடம்பில் மாறுதல் வருகிறது .இன்று உள்ள சூழலும் இது போலவே விரைவில் மாறபோகிறது .மாறாதது எது ?




சற்றே ஆழ்ந்து சிந்தித்து
" யாம் இந்த உடம்பல்ல மனமல்ல ,எம்முள் இருக்கும் உயிர் ,இந்த ஆத்மா பரிபூரணமானது .ஆத்மா என்றும் அழிவதில்லை எங்கும் வியாபித்திருக்கும் ஒரு சர்வ நாயகனின் ஒரு சிறு பிம்பம் "
எனும் நிலை உணரும் போது கொஞ்சம் கொஞ்சமாக மாயை விலகி, இருள் அகன்று ,பயம் அகன்று,நிம்மதி கிடைக்கபெற்று ,இந்த கூட்டில் வாழும் ஆத்மாவுக்கு இறை தம்முடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தி பலப்படுத்தி,நிறைவை நோக்கி, ஆனந்தத்தை நோக்கி,அமைதியை நோக்கி  பயணிக்கவைக்கிறது .

உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் அதுவால் எதுவுமே செய்ய இயலாது .இந்த கூட்டினுள் உயிர் இருக்கும் போதே  முடிந்த வரை நல்ல செயல்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.நல்ல செயல்கள் செய்துகொண்டேஇருத்தல் அதுவும் பிறர் பயன்படும் வண்ணம் அதை செய்தல் விரைவில் இறைநோக்கி அழைத்துச்செல்லும். "....எவன் ஒருவன் தமது செயல்கள் அதன் பலன்கள் யாவற்றையும்  பிறர் நலம் கருதி இந்த சமுதாயத்திற்கு அற்பனிக்கின்றானோ அவனுக்கு தேவையான யாவும் இறையே வாரி வழங்கும் ...என்று கீதை சொல்கிறது. இது அசைக்கமுடியாத உண்மை .அது மட்டுமல்ல  ஒருவனுக்கு  பொருள் நிலைக்கவேண்டுமாயின் ,அவன் தாம் ஈட்டிய  பொருளை  பொருள் இல்லாதவன்  பயன்படும்  வண்ணம்  உதவவேண்டும் .அப்படி  உதவினால்  மட்டுமே  ஈட்டுபவனின் பொருள்  காலம்  காலமாய்  நிலைத்து நிற்கும் ,மேலும்  அது  சரியான  முறையில்  பயனை  அளித்திடும் என்று  வள்ளுவம்   சொல்கிறது .பொருள்  இருப்பவனுக்கு  கொடுப்பதால்  எந்த  புண்ணியமும்  கிட்டுவதில்லை .தேடிச்சென்று  இன்மை நிலை  அறிந்து  அவன்  வாழும் காலம்  பயன்பட   உதவி  செய்தால் ,உதவி செய்பவனின்  ,நிலை  உயரும் அவனின்  செல்வங்கள்  யாவும்  சரியான  முறையில்  அவனிடம்  நிலைத்து  நிற்கும் .

எவ்வகையிலாவது,  எவ்விதமேனும் ,கிடைக்கும்  நேரமெல்லாம்  இவ்வுடல்  கொண்டு , மனம்  கொண்டு  சேவை செய்தல்  என்பது  அதி உத்தமமாகிறது  .லலிதா  சகஸ்ர நாமம் பாராயணம் ஒரு அதி அற்புதமான  தர்ம  செயல் .இந்த  ஸ்தூல  உடல்  கொண்டு  தாயவளின்  நாமங்களை  சொல்வதால் இறை சக்தி  மிளிர்கிறது .மாயை  அகன்று  தூய  இறை  அலைகள் நிறைந்து   ஜபிப்பவரின்  இடம் முழுவதும்  அமைதி  நிரம்பி  நல்ல  அலை  இயக்கம்  ஏற்படுத்தப்படுகிறது .பிறருக்கு  துன்பம்  இல்லாமல், நன்மை  பயக்கும் ,நம் மனம்  மகிழ்ந்து  ,ஆர்வம்  மிகுந்து   செய்யும்  செயல்கள் எதுவாகினும்  அது மந்திரமோ  ,தியாநமோ ,இறைபனியோ  அல்லது  எவ்விதமெனும்  உதவுதலோ  இவை யாவுமே   தர்ம செயல்களே .இவை  யாவுமே  புண்ணியம்  ஈட்டும்  அற்புத  செயல்களே பொருளானும்  சரி  ,உள்ளத்தில்  அன்பு  அலை கொண்டு  வாழ்த்து  சொன்னாலும்  சரி,  யாவுமே  ,இருக்கும்  இந்த  பிறவி  கடலை  மிக  எளிதாக  பயணிக்க  வைக்கும் அதி  அற்புதம்  நிறைந்த  நுணுக்கங்கள் .



Contribute more ,Consume less .Lets all be contributor.Because contributor is God .
முடிந்தவரை  யாவருக்கும் பயனளிக்கும் வண்ணம் திறம்பட நமக்கு கிடைத்த அன்றாட வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வோம்.குறைவான அளவிற்கு உணவினை அல்லது மற்றவர்கள் நமக்கு செய்த பலன்களை  நாம் கிரகிப்போம்.ஆனால் நிறைய உதவிகள் செய்வோம்,நிறைய மற்றவர் பயன்பெறும் வண்ணம் உதவிகள் செய்வோம்.இந்த காலம் ஒரு அற்புதமான opportunity காலம் இறை தந்திருக்கின்றது நாம் பிறருக்கு உதவ .உதவுதல் என்றால் அளவு பெரிதல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுதல் அதி உன்னதமானது.எதுவுமே செய்ய முடியலையா பரவாயில்லை மனதின் மூலம் நல்ல அலைகளை வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வாழ்த்தி  ஊக்கப்படுத்தலாம். இறை உணர்த்தும் அற்புத வாய்ப்பு இங்கே கொடுக்கபட்டிருக்கின்றது.ஏனெனில் எம்முள் இறை. இறையின் பிம்பம் யாம். என்றோ அழியத்தான் போகிறது இந்த உடம்பு.இந்த மனம் கூட வரப்போவதுமில்லை.உடலோடு இருக்கும் போதே குடும்பத்திற்கோ உறவுகளுக்கோ ,மக்களுக்கோ எவ்விதமேனும் நல்ல தர்ம செயல்கள் செய்து அவர்களை அதன் பலன்களை கிரகிக்கச்செய்யவேண்டும் .அது போதும் அங்கே இறை மிளிரும்.இறை எனும் பேரண்ட நாயகனின் அற்புத பேறாற்றல் அது தாமே வந்து அரவணைத்துக்கொள்ளும் இது  போன்ற  அன்பு  உள்ளங்களை. 



 இறை வந்தால் அங்கே ஆனந்தம் வருகிறது .அன்பு மிளிர்கிறது .அமைதி சூழ்கிறது.இருக்கும் வரும் செயல்கள், நிகழ்வுகள் யாவுமே எந்தவித சிக்கலின்றி மிக அருமையாய் நடக்கப்போகிறது.எதற்காக இந்த மானுட பிறவி பெற்றோமோ அதன் தாத்பர்யங்கள் உணரவைக்கப்படுகிறது .வாழ்வு  பயனுள்ளதாகிறது.எந்த வித நோய் சூழலும் எந்தவித இயற்க்கை சீற்றமும் இதை விட கொடிய சூழல் வந்தாலும் அதையும் எதிர்கொள்ளும் திறம் அதுதாமாகவே கிடைக்கப்பெறும் .எதுவும் ஒன்றும்  செய்ய இயலாது. ஏனெனில் எல்லாம் இறை... இறை ...இறையே....இறை எனும் தன்மை உணர அதன் சர்வ வல்லமையை அதன் பிம்பங்களுக்கு வாரி வழங்குகின்றது.

பரந்து விரிந்த இந்த ஆகாயத்தினை சற்றே அமைதியாக ,சற்றே  தளர்வுபடுத்தி  பார்க்க ,இரவில் அங்கே ஒளிரும் நட்சத்திரங்களை அமைதியாக கவனிக்க , எவ்வளவு  கொடிய  மனதினை  துவம்சம்  செய்யும்  ஒரு இறுக்கம்  , ஒரு மன குழப்பம் ,அலைபாயும்  நிலை ,அன்றாட  நிகழ்வுகளினால்  ஏற்பட்ட  மனக்கசப்பு ,நிம்மதியின்மை போன்ற  யாவும்  ஒரு பத்து நிமிடங்களில்  இருந்த  இடம்  தெரியாமல்  ஓடிவிடுகிறது .அந்த  அளவிற்கு  இந்த  மனம்  ,பரந்த  வெளி  பார்த்தவுடன்  ,தம்  இறுக்கத்தினை  தாமே  சரிசெய்து , இழந்த ஆற்றலை  வெகு  விரைவில்  பெற்றுக்கொள்கிறது.தம்மை  தாமே  புதுப்பித்துக்கொள்கிறது .கூனி  குறிகிய  மனம் ,பேரண்ட  நாயகனின்  இருப்பிடத்தினை  காண  வியலும்  போதே  தம்மை  மறந்து  ,தாம்  இறையின்  ஒரு அங்கம்  என  நினைவு  மீண்டும்  பெற்று  ,மிகப்பெரும்  வலிமையுடையவனின் திருக்கரத்தால்  அரவணைக்கப்படுகிறது .

அது ஒரு அமாவாசை இரவு .வானில் எங்கெங்கும் முத்துக்கள் சிதறியது போல நட்சத்திரங்கள் .ஆங்காங்கே மிக அற்புதமாய் ஒளிர்கிறது,நன்கு கவனிக்க வண்ணமயமாய் ஜொலிக்கிறது.கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது போல ,இயற்கையின் அழகினை ரசிக்க ஆட்கள் இல்லை அங்கே ,பல அற்புதங்கள் சொல்லாமல் சொல்லி  உணர்த்திக்கொண்டேயிருக்கிறது .அழகினை ரசித்து ரசித்து ஒரு கட்டத்தில் கொஞ்சம் படுத்துவிட்டேன்.எம் கண்களுக்கு நேர் மேலே பல ஆயிரம் ஆயிரம் மைல்கள் தூரத்திற்கு அப்பால் ஒரு மின்னிடும் நட்சத்திரம் .இருக்கும் நட்சத்திரத்தில் இது ஒன்றே கவர்ந்திலுக்கிறது .ஆழ்ந்து கவனிக்க கவனிக்க  பல வண்ணமாய் ஒளிர்கிறது.சிறிது நேரம் செல்ல செல்ல அப்படியே மறைகிறது.யாமும் சற்றே கண்அயர ,நேரே நெரூர் சதாசிவ பிரமேந்திறாள் ஜீவசமாதி நோக்கி செல்கிறது.அற்புதமான கரிசல் மண் நிறைந்த பூமி ,செந்நெல்லும் ,வாய்க்காலில் ஓடும் நீரும், பசுமையும் கொட்டிக்கிடக்கின்றது .அமைதி சூழ்ந்த அந்த இடத்தில் ஒரு அழகான  சிவலிங்கம் பிரதிஸ்டைசெய்யப்பட்டு .அபிஷேக ஆராதனைக்காக அங்கே தூய பசும் பால் வைதிருக்கின்றார்கள் .யாமும் அதன் அருகே சென்று காத்திருக்க ஒரு ஸ்வாமிகள் வருகிறார்கள் அந்த பிரதிஸ்டை செய்யப்பட்ட லிங்கம் இருக்கும் இடத்திலிருந்து..காவி வேஷ்டி ,ஒளி பொருந்திய முகம் ,நெற்றியில் திருநீறும் இருக்கின்றது.ஒரளவிற்கு பெரிய நீள்வட்டவடிவில் குங்குமமும் சூடியிருக்கின்றார்கள்.சகல வேதங்களையும் கற்று தேர்ந்த ஞானி போல் தோற்றம்.எளிமையே வடிவம் .சாந்தம் மிளிர்கிறது .நெஞ்சமெங்கும் ஈஸ்வர பக்தி குடிகொண்டுள்ளது.அவர் பூஜை ஆயத்தமாக செல்கிறார்.அவர் அருகில் நிற்பதாலே ஒரு ஆற்றல் கவ்விக்கொள்கிறது .இறை எனும் பேரமைதியை தம்முள் பல கோடி டன் கணக்கில் வைத்திருக்கிறார்கள்.அவரை பார்ப்பதே ஒரு பேரானந்தமாக இருக்கின்றது.இறை எனும் அமுத அலையை வீசிசெல்கிறார்.அமைதியும் ,எளிமையும்,அன்பும்,சாந்தமும் நிறைந்தவராய் எந்த எதிர்பார்ப்பும்மின்றி செல்கிறார்கள். இவரின்  சாந்த  தன்மை  உடம்பினை  புல்லரிக்க வைக்கிறது .எல்லாம்  நிறைந்தோனின்  பேராற்றலை  உணர்ந்ததால் அமைதி  கரைபுரண்டோடுகிறது ,எதிரிலே  எவர் நிற்பினும்  ,எதையும்  சட்டை செய்யாது  ,தமது  தன்மை  என்றுமே  ஆழ்ந்த  ஞானம் ,இறையிலேயே  மூழ்கிக்கிடக்கும்  ஞானம் ,வாரி  வாரி  வழங்கி கொண்டேயிருக்கும்  அதி அற்புதம்  நிறைந்தோனின்  எளிமை  வடிவம்  என அவர் செல்லும்  நாலா புறமும்  அன்பும்  சாந்த  அலைகளும் நிரம்பி  வழிந்தோடுகிறது.துளிகூட  எண்ணம்  இறைவிட்டு  வேறெங்கும்  செல்லவில்லை ,இவரின் எளிமையும்  அமைதியும்  கவர்ந்திழுக்கும்  இவர் உள்ளே  இருக்கும்  இறையும் அப்படியே  இவரை பார்த்துக்கொண்டிருத்தல் பேரானந்தம் எனும்  அமிர்தத்தை  ஊட்டுகின்றது .சட்டென விழித்து எழுந்து இயல்பு  நிலைக்கு  மெல்ல மெல்ல திரும்பினேன் .கிடைத்த காட்சியினையும் அந்த நட்சத்திரத்தையும் அதன்   ஒளிரும் தன்மையும் அதற்கும்  சதாசிவ பிரமேந்திரருக்கும்  இருக்கும்  தொடர்பினையும்  மெல்ல மெல்ல  எம்  எண்ணத் தோடு  அசைபோடுகிறேன்....  அமைதியை அள்ளிவீசுகிறது இன்றுவரை.

 இறையோடு யாம் என்றுமே இணைந்துள்ளோம்  எனும்  ஞானம்  கொண்டு ,யாமாகிய நீங்கள் யாவரும் ,எங்கும் உள்ள பரம்பொருளின் அதிஅற்புத ஞானம் நிறைந்த பிம்பங்கள் ,Fraction  demands  Totality supplies என்பது  போல  பிம்பத்திற்கு  தேவையான  அனைத்து  உதவிகளையும்  இறை  காலம்  காலமாக  செய்துகொண்டேயிருக்கின்றது .ஒரு சிறு  நொடி  பொழுது  கூட  அது தம்  கொடுக்கும்  தன்மையினை  நிறுத்தியதில்லை .கோடிக்கணக்கான  மகான்களையும்  ,வேதங்களையும்  ,இன்றைய  நடைமுறையில்  இலவசமாக  நல்ல பல உள்ளங்களின் ஒளி ஓலி வடிவில்  இறை சொற்பொழிவுகளாகவும் ,இதுபோன்ற  எண்ணற்ற  வலைத்தளங்களில்  இறை  கட்டுரைகளாகவும்  இலவச  மின்னஞ்சல்  புத்தகங்களாகவும் வாரி  வாரி வழங்கிக்கொண்டியிருக்கின்றது . வாழ்க  இறை பிம்பங்கள்அதில் எங்கும் எங்கெங்கும் இறைதன்மை  என்றென்றும்  மிளிரட்டும், இறை ஜோதியாய் ஒளிரட்டும்.வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் மிளிரட்டும்.

வாழ்கவளமுடன்

ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்