உள்ளம் உருகட்டும் ...!!!





எல்லையில்லா பெருங்கருணையுடைய பெரியோனே ..!! தூய பரப்பிரம்மமே ..!! மாசற்ற ஒளியே ..!! எண்ணத்தால் உள்ளத்தால்  உருகி உருகி  நின்னை, நின் அருள்தாண்டவ அலைகளை உணர வியல்கிறோம்,விளைவாக  உள்ளம் மாபெரும் நினது பேரன்பு அலைகளால் கசிந்து தெள்ளிய நீருற்று போல அருள்அலைகளை சுரக்கின்றது,கண்கள் குளமாகி கருணை அலைகளாக வழிந்தோடுகிறது,நெற்றியில் நினது அருள் ஜூவாலை சுடர்விட்டு பிரகாசம் கொள்கிறது. ஒவ்வொரு உயிருள்ளும் நீ அருள்சுடராய் இருக்கும் அற்புதம் அருள் ஒளியாய் வீசுகிறது என்பதை உணரமுடிகிறது.
உள்ளம் உருகினால் மட்டுமே நீ அகப்படுகிறாய்.... மாசற்ற தூய அன்பாய் ..அன்பின் அலைகளாய் வெளிவருகிறாய் நின்னை வேறு எதுவும் கொண்டு உணர இயலாது, அடைய இயலாது அய்யனே ..!! ஈசனே !!
மாபெரும்  இறைவா ...நெஞ்சம் நிறைந்தோனே ..!! .கேட்பாரற்று சோ....வென பரந்து,விரிந்து கிடக்கும் பிரபஞ்சவெளி நாயகனே ..!! பேறாற்றல் பெருங்கருணையுடையோனே ..!! நின்னை ஆழ்ந்து  ஆழ்ந்து நினைந்து,நினைந்து, உள்ளம் உருகி உருகி , உணர உணர ... உள்ளத்தில் சூழ்ந்த  இருள் விலகி ,உள்ளம் முன்னைவிட இன்னும் அதீத நம்பிக்கை பெற்று,நின் அருள் அலைகள் சூழ்ந்ததால் ஒரு வலுபெற்று ,நிறைவு பெறுகிறது எம்பெருமானே ..!!!நின் அருட்பாதங்களில் என்றும் என்றென்றும் சரணாகதி ..!!!

இறையின் அருளை உணரவேண்டுமாயின் மன அலைச்சுழலை குறைத்தாக வேண்டும்.மன அலைச்சுழல் குறைய குறைய ,நம்மை சுற்றி , நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்துகொள்ளும் சூட்சும சரீரம் பற்றி உணர்ந்துகொள்ளமுடியும்.மன அலைச்சுழலை எப்படி குறைப்பது எனில் விரும்பி விரும்பி ,இறையை மனத்தால் ஏற்று ,உள்ளம் உருக உருக மட்டுமே
மன அலைச்சுழல் குறையும்.சூட்சும சரீரம் ஒரு அலை வடிவ காந்தஅலைகள் போன்று நம்மை எப்பொழுதும் சூழ்ந்துகொண்டிருக்கும் அலை உடல்.  மன அலை சுழல் குறைத்து, சற்று அமைதியான நேரத்தில் கண்களை மூடிக்கொண்டு ,நம்மை கவனிக்க ,ஒரு அலைகூட்டம் நம்மை மிக அழகாக சுற்றுவதை உணரலாம்.அது நம்முடைய சூட்சும தேகம்.இப்படி உணர ஆரம்பித்துவிட்டாலே இது மனதை மெல்லிய அலை இயக்கத்திற்கு அழைத்துச்செல்லும் .இது ஒரு முதல் படி.இப்பொழுது இருக்கும் மன நிலை ஒரு சற்றே குறைந்த அதிர்வு உடையது .இது சாதாரண மன அலை சுழலைவிட சற்று அதிர்வு குறைவானது என்பதை நீங்களே உணரந்துகொள்ளலாம்.சரி இதனால் என்ன ஆகபோகிறது என்றால் ,மனம் மெல்லிய நிலைக்கு வரும் ,இறையை நோக்கி செல்லும்.நம் மனம் முற்றிலும் நம்முள்ளே செல்லும் ..நம் உயிருள்ளே செல்லும்..நம் இறையை நோக்கி ஒளியை நோக்கி செல்லும் அப்பொழுது,இருள் அலைகள் அது தானாகவே வெளியேறிவிடும்..மாயை அகன்றுவிடும்..மாயை அகன்றுவிட்டால் வீண் குழப்பம் ஓடிவிடும்.கண்களால் பார்க்கும் செய்திகள் காதுகள் கேட்கும் செய்திகள் ..இப்படி ஆகுமோ .அப்படி ஆகுமோ எனும் எண்ணமெல்லாம் ஓடிவிடும்.இறையின் துளி , ஒரு சிறு ஒளி கீற்று..இறையின் ஒரு சிறு பிம்பம், அது தம்மை தாமே அறியும் பயணத்தில் ,கர்மவினையால் வழியை மறந்து ஆங்காங்கே சுற்றி ,திரிந்து உழன்று ,செயல் விளைவால் அடிபட்டு மிதிபட்டு,யாவற்றையும் இழந்து ,தம் ஆற்றல் இழந்து', பிறகு மீண்டும் அது தம் பயணத்தை ,இறை ஒன்றுதான் கதி என்பதை உணர்ந்து ,,அதாதவது இறையை நோக்கி செல்லும் போது ,இழந்த ஆற்றலை எல்லாம் மீண்டும் பெற்று ,எல்லா பிரச்சனையும் அது தாமாகவே சரிசெய்து ,நிறைவை நோக்கி செல்லவைக்கிறது இறை.ஆக உள்ளம் உருக உருக , அது இறையை நோக்கி பயணிக்க வைக்கிறது.இறையை நோக்கி பயணிக்க எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கிறது,எதையும் எதிர்கொள்ளும் திறம் பெற்றுவிடுகிறது. .தமக்குள்ளே இருப்பது இறை எனும் நிலை உணர ,Selfconfidence  பெறுகிறது ,பேறாற்றல் (Totality ) இந்த சிறு ஒளி கீற்றுக்கு (fraction )என்ன தேவையோ அதனை கிடைக்கச்செய்கிறது.


உள்ளம் உருகுதல் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு வழி.ஆனால் இது எவ்வளவு வலிமையானது எவ்வளவு சூட்சுமம் அதில் அடங்கிஇருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.வாசியோகம் பண்ணவேண்டாம் ,யாகம் செய்யவேண்டாம் ,எந்தவித மந்திமும் சொல்லவேண்டாம் ,உள்ளம் உருகினால் மட்டும் போதும் இறை ஓடோடி வந்துவிடும்.தூய அன்பு அலைகள் பெருகி இறைவனை இருக்கபிடிக்க  வழிகிடைக்கச்செய்துவிடும்.அன்பின் மறு ரூபம் தானே இறை.தன்னலமற்றது விருப்பு வெறுப்பு இல்லாதது.யாவையும் சமநேர்நோக்கான தன்மையுடன் பார்க்கும் திறன் வாய்ந்தது.உள்ளம் என்பது உருகுவதற்கே . நாள் தோறும் உள்ளத்தால் உருகி உருகி, இறைதேட தேட, தேஜஸ் சூழ்ந்து, முகத்தை உடலை ,மெல்ல மெல்ல மெருகேற்றும்.சூட்சும தேகமும் நன்கு வலுபெறும். வாழ்வை முழுமையை நோக்கி அழைத்துச்செல்லும்.




உள்ளம் உருகி நாம் தேடும் மகானை வழிபட சூட்சுமாய் அருபமாய் அருள் ஆசி தருவார்கள் மகான்கள்.அவர்கள் இறையில் என்றும் தம்மை இணைத்தவர்கள். மகான்கள்  தூய அருள் ஒளிப்பிழம்பாய் ஜொலிஜொலிக்கும் சுத்த பரப்பிரம்மம்..அவர்கள் ஒரு பெரிய பேரொளியில் இணைந்த ஒளிவடிவ சூட்சும சரீரம் நிறைந்தவர்கள்.தாம் இறைஒளியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலும் , ஸ்தூல தேகத்தோடு வாழ்ந்த காலத்திலும் ,என்றுமே தம்மை ஒளி வெள்ளத்தில் இணைத்தவர்கள்.இரவா ,பகலா,பசியா,தூக்கமா என எதுவும் இன்றி  என்றுமே தம்முள் தம் நெற்றியுள் ஒளிரும் அருள் ஒளி ஜுவாலையில் மூழ்கி இருப்பவர்கள்.எதை பற்றியும் சிந்தனை இல்லாதவர்கள் எல்லாம் பரப்பிரம்மமே...பரப்பிரம்மம் என்ன நினைக்கின்றதோ அதை செய்பவர்கள்.இவர்களை சுற்றி இருக்கும் சூட்சும சரீரம் தூய ஒளிக்கு நிகரானது.மகான்களுக்கு அருகில் செல்லும் போதே ஒரு குறிப்பிட்ட தூரத்திலே வரும் பொழுதே ,வருபவரின் தன்மையினை முழுமையாக உணர்பவர்கள்.சூட்சும தேகம் எங்கிருந்தாலும் மகான்கள் அங்கிருந்தே ஆசிகள் வழங்குகிறார்கள்.வீட்டில் இருந்துகொண்டே மனதை கொஞ்சம் கொஞ்சமாக உள்நோக்கி ,உள்ளத்தால் உருகி வணங்க , தம் சூட்சும சரீரம் வழியாக அருள் ஆசிசெய்வார்கள்.




சுருக்கமாக இரண்டு விசயங்கள் இந்த கட்டுரைவழியாக சொல்லவிளைகின்றோம்


1.உள்ளம் உருகி இறையை உணர ,தூய ஒளியை உணர ,உணர முயற்சி செய்ய இருள் அது தானாகவே அகலும் .மரண பயம் விலகும் .நம்பிக்கை பிறக்கும்.உள்ளம் வலுபெறும்.எதையும் எதிர்கொள்ளும் திறம் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சத்துள் சூழ்ந்து ,எதிர்ப்பு ஆற்றல் பெருகும்.


2. விருப்பம் உள்ளவர்கள் மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் சொல்லவேண்டும்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


ஒலி நாடா (Click below to download )
மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்


இக்கட்டான இந்த கிருமி சூழலில் அரசு சொல்லும் விதிமுறையை கடைபிடிப்போம் . விரைவில் இன்னல் அகன்று அமைதி திரும்பி, யாவரையும்  காத்தருள எம் பெருமானின் பொற்பாதங்களில் வீழ்ந்துபணிகின்றோம் . எம் தந்தையின் பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கி விரைவில் அமைதி திரும்ப வேண்டுகின்றோம்.

வாழ்க வளமுடன் !!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்