இறை ஜோதி




ஆழ்ந்தும் அமர்ந்தும்  நீண்டும் விரிந்தும் கூர்ந்தும் குறுகியும் எங்கும் எங்கெங்கும் வெளியாய் பேரொளியாய் இருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமானே ! மிகபெரும் பெருவெளியே !! ஓர் நீண்ட நெடிய மூச்சில் விரிந்து நினை அன்பால் கட்டியணைக்க வியல்கிறேன்  ,வீழ்கிறேன் ..பின்பு மீண்டும் எழுகிறேன் ...எம் முயற்சி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது ..என்றோ நின் பொற்பாதத்தை அடையும் முயற்சியை தொடர்ந்தவண்ணம் இருக்கிறேன். ஆற்றலாய் அலையாய் ஒளியாய் இருக்கும் அருட்பெரும் ஜோதியே !! வெட்ட வெளி ஜோதியே ! ஜோதியில் ஜோதியே ! எம் தந்தையாகிய சத்குருவே ! பரப்பிரம்மமே ! சுத்த பேரொளி சூழ்ந்து  ஒளியாய் ஜொலிக்கும் ஆனந்த பேரின்பமே ! நின் பிரகாசமூட்டும் அற்புத ஒளியை நாள்தோறும் காண எம் செயல்களையும் ,கர்மவினைதாக்கங்களையும் சரிசெய்து, என்றும் நின் அருள் தாண்டவமாடும் அலைகளை எம்முள் உணர  ,வழிவகுப்பாய் ..பேரொளியே ..!! பெரும் பெரும் வற்றாத கருணைஉடைய பேரொளிப்பெருமானே !!!  நின் திருவடியில் என்றும் என்றென்றும் சரணாகதி !!

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!....

 எத்தனை கோடி பிறவிகள் ! அப்பப்பா புல்,பூடு,புழு,மரம்,பறவை,பாம்பு,கல்,மனிதர்,பேய்,அசுரர்,முனிவர்,தேவர் அசையும் பிறவி அசையா பிறவி ,என எல்லா பிறவியையும் பிறந்து இளைத்துவிட்டேன்.மெய்யான திருவடி கண்டு உன் வீடு பெற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர் பெருமான்.







இந்த பாடல்ளை உணமையாக ஒருவன்  விரும்பி படிக்கும் மன நிலை வருகிறது என்றால் அவன் விரைவில் இறை அருகே செல்லும் தன்மை பெறுகிறான் என்று தான் பொருள்.இறை தாகம் ஏற்பட்டு பெருமானின் பாடல்களை படியுங்கள் அர்த்தங்கள் நீங்கள் உணரும் வண்ணம் ,நீங்கள்  புரிந்து கொள்ளும் விதமாய் அது தாமாகவே வந்து விழும் . ஒருவனுக்கு என்று இறை தாகம் வரும் என்பதெல்லாம் கர்மவினையை பொறுத்துதான். ஒருவனுக்கு இறை தாகம் வருகிறது என்றால் அவனுக்கு பிறவிகள் சுருங்குகிறது என்றே அர்த்தம்.இறை தாகம் எடுத்து இறைநோக்கி பயணித்து தம்மை முழுவதும் அர்ப்பணித்து இறை ஒன்றே கதி என்று சுற்றி திரிந்து அலைந்து கடைசியில் இறையை அடைந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் ....





குருநாதர் யோகிராம் சூரத்குமார் மகானின் வாழ்க்கை வரலாற்றினை படிக்கும் பொழுது எம்மை மறந்து வியந்து விம்மி மூச்சற்று நின்றேன் பலமுறை.மகானுக்கு இறைதாகம் ஏற்பட்டு பித்துபிடித்தது போல இங்கும் அங்கும் சுற்றி ,இறுதியில் மகானின் குருநாதர் அவருக்கு மந்திரஉபதேசம் செய்து ,பிறகு மகான் அந்த இறையிலேயே மூழ்கி ,செய்வதறியாது திகைத்திருக்கிறார்.எங்கு செல்வேன் குருநாதா ? என்று பிச்சை எடுக்காத குறையாக தம் குருநாதர் ஆசிரமத்தின் நுழைவாயிலில் அனுமதிக்காக காத்திருந்து பிறகு அனுமதி  மறுக்கபெற்று இங்கும் அங்கும் சுழன்று சூறாவளிபோல சுழற்றியடிக்கபட்டார்.எமக்கு படிக்க படிக்க மகானின் மனைவி குழந்தைகள் என்ன ஆனார்கள் ,அவர்களை எப்படி பார்க்கபோகிறார் ..அவர்களை யார் கவனிப்பது ..அவர்கள் நிலை என்ன ? என்றே பல முறை எம் மனம்  நினைத்தது .மனித பிறவியின் இறுதி நிலை யோகிராம் சூரத்குமார்.இறை சும்மா தம்முள் சேர்த்துவிடுமா ? மகானும் எவ்வளவு இடர்... எவ்வளவு இன்னல் .சந்தித்திருக்கிறார் அவர் வாழ்கையில் .இத்தனைக்கும் தமக்கு குடும்பம் குழந்தை என்று வாழ்ந்தவர்.இறுதியில் எல்லா சோதனைகளையும் வென்று ..இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் ...ஜோதியாய் ..ஒரு ஒப்பற்ற மகானாக..அன்றும் இன்றும் என்றும் ஜொளித்துக்கொண்டிருக்கிறார்.உண்மையை உணர்ந்த உத்தம மகான் திருயோகிராம் சூரத்குமார்.மகானின் வாழ்க்கை வரலாற்றினை படியுங்கள் ,உங்களுக்கு அனுபவங்கள் கிடைக்கும் நிறைய.






இரு கண்களுக்கு மத்தியிலே ஆஞ்ஞை உள்ளே இறை ஜோதியாய் மிளிர்கிறது ஒவ்வொரு மானிட உயிருள்ளும் இதை நீ உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஜோதி ஒன்று ஒளிர்கிறதப்பா உன்னில்.இறை ஒவ்வொரு உள்ளத்துள்ளும் அமைதியாய் அது வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.கண்களை மூடினால் நமக்கு வெளியில் உள்ள ஸ்தூல பொருட்கள் தெரியாது.ஆனால் கண்களை மூடினாலும் மூடாவிட்டாலும் இறை எனும் ஜோதி நெற்றிக்கண் வழியே பார்துக்கொன்டிருக்கிறது.அற்புதமான தகத்தகவெனும் நெருப்பு பிழம்பு போல பொன்னிறமான ஒளி ..எங்கும் எங்கெங்கும் அதுவே ஒன்றாய் இருக்கிறது .ஒவ்வொரு அன்பர் உள்ளத்துள்ளும் ஒவ்வொரு அன்பர் நெற்றிக்கண் வழியேயும் மிக நிதர்சனமாக அற்புதாமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.இறை நோக்கி செல்ல செல்ல அதாவது கர்மவினை குறைய குறைய இறை ஜோதி ஒளிரும் தன்மை நமக்கு மேலும் மேலும் அதிகமாக உணர்ந்துகொள்ளமுடியும்.ஒவ்வொரு உயிரும் போற்றுதலுக்கு உரியது ஒவ்வொரு உயிருள்ளும் கர்ம பாவ புண்ணியத்கேற்ப இறை உணரும் தன்மை அவரவர்களுக்கு வேறுபடுகிறது. எம்முள் உள்ள அதே ஜோதி உம்முள்ளும் யாவருள்ளும் எங்கும் எங்கெங்கும் விரிகிறது .இறையின் ஒரு சிறு துளி இந்த உயிர் உடல் உள்ளம் ..இதன் மூலம் இங்கே யாவருள்ளும் தொடர்கிறது .மாயையால் எங்கோ எங்கெங்கோ சென்று பிறவி பலபெற்று அனுபவம் பெற்று மீண்டும் செல்வதறியாது மாயையில் சிக்கி இன்னல் பெற்று துவண்டு தூள்தூளாகி தாங்கொணா துயரத்தில் அலைந்து திரிகிறது. 

இறை ..உம்முள் இறை ..இறை ஜோதி ..எனும் தன்மையை உணரவேண்டும் என்கிற ஆவல் தூண்டபெற்றுவிட்டால் போதும் ..அங்கே இறை அவனுக்கு இந்த பிறவியில் உண்டான கர்மவினை கலயவைத்து ,அவனை தம்மை நோக்கி இறையை நோக்கி ..பயணிக்க தேவையான எல்லாவகையான உதவிகளையும் செய்கிறது ..





எவன் ஒருவனுக்கு இறை தாகம் ஏற்படுகிறதோ ...அங்கே அவனுக்கு அந்த நொடியிலேயே குருவினை இறையே அனுப்புகிறது..குருவின் துணையின்றி பிறவிக்கடல் நீந்துதல் அரிது .குருவினை சிக்கென பிடித்தால் போதும் ..குரு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ..எந்த வடிவத்தில் வேண்டுமானாலும், உருவத்தில், தோற்றத்தில் கரடுமுரடாக கூட இருக்கலாம் ...தோற்றம் பெரிதல்ல அது பொய்...அவரின் ஆன்மா...குருவின் உள்ளம் இருக்கிறதே ..அது இறைவன் வாழும் இடம் ..குருவின் குரு ..அவரின் குரு ..இப்படி அது தொடங்கிய இடம் முதல் சேரும் இடம் வரை ..எங்கும் எங்கெங்கும் சுத்த பரப்பிரமத்தின் பெருங்கருணையே சூழ்ந்து கருணையை வாரி வழங்குகிறது. ....ஆக குருவினை பிடித்தால் குருவும் கருணையை வாரி வழங்குவார். .குரு ஒருவனுக்கு கிடைத்தல் என்பது அவனின் பூர்வஜென்ம புண்ணியம் ... ஏனெனில் குரு ஒருவரே ..அவனுக்கு இறையை ..அவனது பெற்ற தாயும் தந்தையாகிய வீடு பேற்றினை காண்பித்து ,அவனுக்கு  சர்வ சரணாகதியை அடையும் வழியை காண்பிப்பார்..

இறை தேடு ..உன்னுள்   ஒளிரும் ஜோதியை தேடு ...இறை விரைவில் எல்லா உதவிகளையும் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது...!!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்