இறைபிம்பம் மனம்




தூயோனே !!  துவண்டமனதுள் துளிர் விடும்
மாயோனே !! மாசற்ற  மறையோனே !! எம் பெருமானே!!
வேயோனே!!  வெட்ட வெளி பெரியோனே!!
சேயோனே!!  சிரம்தாழ்கிறேன் நின்திருவடியில்.


ஒரே பிரம்மம் ,ஒரே வெளி, ஒரே ஒளிவெள்ளம், ஒரே பேரமைதி, எல்லாம் ஒன்றே.ஆயிரம்கோடி அண்டமிருந்தாலும் ஆளுவது  ஒரே இறை.ஒன்றாய் இருக்கும் இறையே. அழுக்காய் அகந்தையாய் யாம் ,பெருவெளியாய் பேரமைதியாய் இறை, அகந்தையை இறையில்  கரைக்க (கர்மாவால் பெற்ற அனுபவத்தை, ஒன்றிற்கும் ஆகாத கற்றறிந்த குப்பையை கரைக்க),ஒளியாய் அலையாய் இறையாய் மிளிர்கிறது மனமென்னும் மாயோனின் இந்த பொய்க்களம் .இறை அமர்ந்தலால்  இதமான அமைதி அலையாய் சூழ்கிறது ,மாசற்ற ஒளியே விரிகிறது ,விரிந்து விரிந்து எங்கெங்கும் வெளியில் கரைகிறது. இலவம் பஞ்சுபோல மனம் எடையற்று போகிறது .யாவற்றையும் ஈர்த்து அரவணைக்கும் நாயகன் இருப்பால் சர்வ வல்லமையும் பெற்றது போல யாவற்றையும் ஈர்க்கிறது .யாவற்றுள்ளும் சூழ்ந்திருக்கும் உணர்வும் பெறுகிறது .இறைக்கு, பேரண்டநாயகனுக்கு என்ன தேவை இங்கே ?! பணமா... ?பாசமா...? பந்தமா ...? எதுவும்இல்லையே எல்லாமே இறையே.ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து உருவானயாவும் ஒன்றுமில்லாமல்  போகிறபொழுது,ஒன்றுமில்லா ஒன்றுகட்டியணைத்துக்கொள்கிறது.மனம் நிறைகிறது,நிறைந்து அமைதி யில்,பேரமைதியில் திளைக்கிறது.ஒன்றே ஒன்றிற்கு  மட்டுமே இந்த மனம் வசப்படுகிறது ஆட்படுகிறது அமைதிப்படுகிறது.அது இறை ஒன்றிற்கு மட்டுமே .இறை ஒன்றை உணர்ந்தால் மட்டுமே இந்த மனம் அமைதிபெற்று துள்ளி பேரானந்தத்தில் மூழ்கிறது.அமைதி பெறுகிறது .இறை எனும் ஆற்றல்ஒன்றை  உணர்வதற்கே ,உணர்ந்து நிறைவடைவதற்கே இந்த மனம் இறை தவிர  இங்கே இந்த மனதில்  வேறு எதையும் வைத்து நிம்மதி பெற இயலாது  நிறைவு பெற இயலாது.



தூய கண்ணாடி போன்ற மனது .இறை எனும் பிரம்மத்தை மட்டுமே என்றென்றும் நினைத்துகொண்டு ,ஒளிப்பிரம்மத்தை மட்டுமே வைத்துக்கொண்டிருக்க தகுதியானது .பல ஆயிரம் ஆசைகுப்பைகளை மனதில் வைத்துக்கொண்டிருப்பது ,தெளிவான தூய ஒளிப்பிரம்மத்தை அழுக்கால் நம்மை நாமே இறையிடமிருந்து மறைப்பது போல தான்.தூய கண்ணாடி போன்று ,மழைக்காலத்தில் சிலநேரங்களில்  செடியின் ஒரு இலையில் ஒட்டிக்கொண்டிருக்கும்  ஒரு துளி நீரினை கவனித்தால் அதன் தன்மை புலப்படும்.எப்படி எனில்  ,crystal clearஆக transparentஆக இருக்கும்.இந்த நிலை போல எப்பொழுதும் மனதை வைத்திருத்தல் என்பது இறையை ஈர்க்கும் தன்மையை அதிகரிக்கும் என்பது சூட்சுமமானஉண்மை .இறை தன்மை வெளிப்படும் . இறை இதனை ஈர்க்கும்.




பகவான் பக்தனிடம் விரும்புவது மனம் ஒன்றைத்தான் என்கிறார் தம்மை முற்றிலும் உணர்ந்த ஞானி மகான் ஸ்ரீ ஆதிசங்கரர்.நீ யாராகவேனாலும் இருந்துவிட்டு போ ,புழையனாக இருந்தாலும் சரி ,புழுவாகஇருந்தாலும் சரி , புனிதனாக இருந்தாலும் சரி,மரமாக இருந்தாலும் சரி ,ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி , ஆனால் மனம் மட்டும் என்றும் இறைவனிடம் பிரம்மத்திடம் இருக்கட்டும் அது ஒன்று மட்டும் போதும் என்கிறார்கள்.இறைக்கு எதுவுமே  தேவைஇல்லை .எந்தவித பேதமும் இல்லை .காசா ? பணமா ? இல்லை கடின உழைப்பா  கேட்கிறது இறை .  மனம்...மனம் ..மனம் மட்டுமே ,இறையே மாபெரும் ஆற்றல் உடையது .அதனை உணர அதன் அதன் தன்மை பெற ,ஒரே களம் இந்த மனம் ...மனம் தாம் இறையின் பிம்பம் என உணர ,மாபெரும் ஆற்றலால் நிரம்பி வழியும் தன்மை பெறுகிறது தாம் இறையோடு இருக்கின்றபோது தாம் பிரம்மத்தோடு  இருக்கின்றபோது தாம் வெட்ட வெளியோடு இருக்கின்றபோது ஒரு நிலையான தொடர்பு பெறுகிறது .இந்த தொடர்பு எங்கோ எப்போதோ விட்டுப்போன தொடர்பு ,அது மீண்டும் கிடைக்கப்பெற்றால் அது எவ்வாறு மகிழ்ச்சி பெறுமோ அவ்வாறு பெருமகிழ்ச்சி பெறுகிறது,ஏங்கி இறையோடு முன்னிலும் வலுப்பெற்று  ,ஆற்றல் பெற்று இறையால் அரவணைக்கப்பெற்று  ,நீண்டநாள் தாயை விட்டுப்பிரிந்த குழந்தை ,மீண்டும் தாயை காணும் போது  எவ்வாறு ஒரு ஏக்கம் மகிழ்ச்சி அரவணைப்பு பெறுமோ அவ்வாறு , தாயின் மடியில் தவழ்ந்து, அன்பால், பேரன்பால் ஏங்கி  ஈர்க்கப்பட்டு இதமான சுகமான ஆறுதல் அலைகள் சூழப்பெற்றுஅன்பால் நெகிழ்கிறது.மனதை இறையோடு இருக்கப்பழகுதல் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.பயனுள்ளதாக்குகிறது  .ஒரு புறம் இறை அதன் மறுபுறம் மனம்.மாயையே இறையை மனதிடமிருந்து மறைக்கிறது.மாயை மனதுள் சூழ ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது .மாயை விளக்கி இறை சூழ தேஜஸ் பெறுகிறது ஒளிவெள்ளம் சூழ்கிறது.தாம் பிரம்மம் என்று நினைத்து தம்மை(அகந்தை) மறந்து இருந்தால் அங்கே இறை பிரம்மம் துளியாய் மிளிர்கிறது .எல்லாம் சுகமாய் நடந்தேறுகிறது.ஒரு நாளில் ஒரு  நிமிடமாவது ,மனம்  தம்மை மறந்து ,எமது மனம் மாபெரும் இறையின் பிம்பம் ,இறையே எம்முள்ளே மனமாய் இருக்கிறது என்ற உண்மையை உணர முற்பட பழக ,இறை அலையாய் மெல்ல மெல்ல மனதை கவ்விக்கொண்டு மாபெரும் பிரம்மத்தோடு மெல்லிய தொடர்புஏற்படுத்தி ,ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தி பேரமைதியை ஏற்படுத்தி வாழ்வை நிறைவை நோக்கி அழைத்துச்செல்கிறது




ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே
                                                                                             -சிவவாக்கியர்

ஓடம் எனும் இந்த  உடம்பு இருக்கின்றவரையில் எங்கெங்கும்உலாவலாம்.காயகற்ப பயிற்சியைசெய்து உடம்பை வலுவாக கல்பதேகமாக மாற்றிக்கொள்ளலாம்.இந்த ஓடம் உடைந்த பின்பு ,உயிர் பிரிந்து வெளியில் ஆகாயத்தில் மறைந்துவிடும்.உயிரின் மூலமாய் இருந்து இயக்கி கொண்டிருக்கும் இறைவன் பிரிந்துவிடுவான்.கூட இருந்த சொந்த பந்தம் உறவு உற்றார் மனைவி மக்கள் என யாருமே இருக்கமாட்டார்கள்.எனவே இந்த உடலில் உயிரை இயக்கி கொண்டிருக்கும் இறைவனை ,இந்த உடல் இருக்கும் போதே  கண்டுணர்ந்து பிறவிப்பெருங்கடலை நீந்துங்கள் என சிவவாக்கியர் சித்தர் வேதவாக்காக சொல்கிறார்கள்.

clock counting என்று சொல்வார்களே அது போலவே நாளும் பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது.Gas cylinderல் அடைத்த காற்று செலவாவது போல ,உடம்பெனும் cylinderல் உயிர்ஆற்றல் செலவாகிக்கொண்டிருக்கிறது .யாருக்கு எப்பொழுது முற்றிலும் செலவாகும் என்பது தெரியாது .இப்பிறவியில் இதுவரை கடந்துவந்தபாதைகள்,சந்தித்த நிகழ்வுகள்,வெற்றிகள்,விரக்திகள்,விவாதங்கள்,தோல்விகள் ,ஆனந்தம்,அமைதி,வெட்டிதனமாய் செலவழித்த நொடிப்பொழுதுகள்,யாவருக்கும் பயனுள்ளதாய் மாற்றியநொடிப்பொழுதுகள்,யாமே எம்மை உணர்ந்த தருணங்கள் என நீளும் நிகழ்வுகள் ,ஆற்றலை செலவழித்த தருணங்கள்  என யாவும் கனவு கண்டதுபோல பலவருடங்கள் உருண்டோடின,நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.இனிவரும் காலங்களிலாவது முடிந்த வரை இறையை உணர ,வாழ்வை இறைநோக்கி வாழும்வண்ணம் மாற்றிக்கொள்ளவதே  மிகச்சிறந்தது, அதி உன்னதமானது.


வாழும்போதே ,உடம்பை எப்படி கல்பமாக மாற்றுவது எனும் வினாவிற்கு விடையாக  சிவவாக்கியரே மிக அழகானபாடல் தந்திருக்கிறார்கள்

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே


உருத்தரித்த நாடிஎன்றால் என்ன ? அங்கே ஒடுங்குகின்ற வாயு என்றால் என்ன ?அதை எப்படி கருத்திலே இருத்தி தலைஉச்சி சகஸ்ராதாரத்தில் ஏற்றுவது ? அதை செய்தால் வயதாகியிருந்தாலும் அவர்இளமைதோற்றம் பெறுவாரா ? மேனியும் சிவக்குமா ?  என நிறைய கேள்விகள் எழுகிறதல்லவா ?
இதற்கு நிறைய விளக்கங்கள் வலையில் கொட்டிக்கிடக்கின்றது.ஒன்றை மட்டும் இங்கே சொல்லவிரும்புகிறேன்.வேதாத்திரிமகரிஷி அய்யா அவர்கள் இதை நன்கு ஆய்வு செய்து  காயகல்ப பயிற்சி என்ற ஒன்றை   உருவாக்கி இருக்கிறார்கள் செயல்முறை விளக்கத்துடன் .விருப்பம் உள்ளவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்.மிக அற்புதமான பயிற்சி.ஒருமுறை கற்றுக்கொண்டு பிறகு வீட்டிற்கு வந்து நீங்களே செய்துகொள்ளலாம்.மேலேகேட்ட எல்லா கேள்விகளுக்கும் ,இந்த காயகல்ப பயிற்சியை செய்துபாருங்கள் விடை கிடைக்கும்.






பஞ்ச பூதங்கள் இணைந்து இந்த உடல் உயிர் உருவாகும் போதே சிக்கல் வந்துவிட்டது .ஆக மனம் அடிக்கடி சிக்கிகொள்வதெல்லாம் பெரிய விசயமில்லை.பிறப்பே சிக்கலானதுதானே.உடலில் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐந்தும் சேர்ந்து இயங்குவதே ஒரு ஆச்சர்யம்.

மனிதனிடம்  இறை மனமெனும் மாபெரும் ஆற்றலாய் மறைமுகமாக இருக்கின்றது .இறை மிளிர மனம் மட்டுமே போதும் ..மனம் என்றுமே தூய ஒளி பிரம்மத்திடம் இருக்கட்டும்.அதற்கு என்றுமே அழுக்கற்று ,நீர்த்துளி போன்று transparentஆக  இருக்கட்டும்.பிரம்மமே நிலையானது ,அதுவே உண்மையானது .மனதை பிரம்மத்தில் இறையில் எப்பொழுதுமே வைத்து  வெற்றிகண்டவர்கள் மிகப்பெரும் மகான்கள் என்றழைக்கபடுகிறார்கள்.இவர்கள் எப்பொழுதுமே பிரம்மத்திலேயே இருப்பதால் இவர்களை சுற்றி எப்பொழுதும் ஒரு தேஜஸ் சூழ்ந்துகொள்கிறது.தூய ஒளி ஆட்கொள்கிறது .இறையில் மூழ்கி,இறை தன்மை உணர்ந்து, தம்மை மறந்து இறையிலேயே என்றும் என்றென்றும் மூழ்கியவர்கள் ஏராளம் ஏராளம்.தாம் வாழும் நாட்களில் சுத்தபரப்பிரம்மமாகவே வாழ்ந்த மகான்கள் ஆயிரம் ஆயிரம்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்