சித்தனின் ஆசியில் ஒரு துளி ..!!!





கருநீல வண்ணனோ காரிருள் கண்ணனோ
பெருஒளி பெருக்கிடும் பேரண்ட நாயகனோ
கரும்கும்மிருட்டு சூழ்ந்தீர்த் தணைக்கும்
பெருவெளி பிரம்மாண்ட நாயகனே ..!!  என்றும் நின் புகழ் ஓங்குக !

வேதமோ  வேதத்தின் சாரமோ யாமறியோம்
நாதமோ நாதத்தின் மூலமோ  யாமறியோம்
பாதமோ பனிமலர்  சூழ்ந்திடும் மேரோ  யாமறியோம் அன்பெனும்
தேகத்தில்  கசிந்த தெள்ளியநீரே! எம் பெம்மானே!!   என்றும் நின் புகழ் ஓங்குக !

அலையாய் ஆதியாய் ஜோதியாய் வெளியாய்
கலையாய் காருண்ய வேதமாய் என்றும்
நிலையாய்   பெரும் அருள்ஒளிநிறைந்த  பால்வெளி
அலையாய் இருக்கும் பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக !

மெல்லிய அலையினும் மெல்லியது நின் திருவருள்
வல்லிய அலையினும் வல்லியது நின்பேராற்றல்
வல்லிய ஆணவம் நீக்க  சட்டென நின்திருவருள்
மெல்லிய தாண்டவமாடிடும்  பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக!


சித்தனின் அருள் பெறுவதெல்லாம் மிக சாதாரண விஷயம்இல்லை.சித்தர்களின் மார்க்கமே மிக கடினமானது தானே.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது.மீன் வடிவில் இருக்கும் மச்சமுனி சித்தரை பார்க்க செல்லவேண்டும் என்றால் ,திருப்பரங்குன்ற மலை மீது கிட்டத்தட்ட்ட  600-700 படிகளை கடந்தால் தான் ,மலையின் உச்சி மீதே ஏற முடியும்.இதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை படி ஏறி பார்த்தால் தான் புரியும்..எத்தனையோ முறை கஷ்டப்பட்டு மலை ஏறி இருக்கிறேன் ஆனால் அய்யாவின் அருள் ஆசிகளை படிகள் ஏறிய எல்லா முறையும் பெற முடியவில்லை.எல்லாம் சித்தனின் ஆசிர்வாதம் தான். கஷ்டப்பட்டு மேலே சென்று வெள்ளை நிற மீனை பார்த்துவிட்டால் சித்தனின் அருள் கிடைத்துவிடுமா ?

எமக்கு தெரிந்த ஒரு அய்யா ,கிட்டதட்ட மூன்று வருடங்களாய் தினமும் மாலையில் தம்மால் முடிந்த வரை குரங்களுக்கு தேவையான உணவுகளை ,காரட் ,முள்ளங்கி,பீட்ருட்,சௌ சௌ ,மாங்காய்,மரவள்ளி கிழங்கு,பழங்கள் என  அன்றைய நாளில் எது கிடைக்கிறதோ அதை தமது சொந்த செலவில் வாங்கி , அதை சிறிது சிறிதாக நறுக்கி ,ஒரு மூட்டையாய் கட்டி, தம் தலை மேல் சுமந்து கொண்டு ,மேலும் ஒரு சில பைகளை கைகளில் பிடித்துக்கொண்டு மலை ஏறுகிறார்.ஏறி ஆங்காங்கே குடும்பம் சகிதமாக இருக்கும் அனைத்து குரங்குகளுக்கும் தாம் கொண்டுவந்த உணவினை வழங்குகிறார்கள். சும்மா வெறுமனே ஏறுவதே சிரமம் .இதில் இந்த மூட்டையும் பைகளையும் தூக்கி ஏறுவது எல்லாராலும் முடியாது.முதலில் இது போன்ற பரந்த மனப்பான்மை எளிதில் வராது.நாகரீக மனிதர்களுக்கு இதெல்லாம் தேவையா? என்ற கேள்வி மட்டுமே எழும். இந்த அய்யாவுக்காக மலையில் இருக்கும்  குரங்குகள் காத்துக்கொண்டிருக்கும்.இதை யாமே ஒவ்வொரு  முறை செல்லும்போதும் பார்த்திருக்கிறோம். இந்த அய்யாவிடம் யாம் பேசியதில் சித்தனின் ஆசீர்வாதம் பல முறை அவருக்கு கிடைத்திருக்கிறதை தெரிந்துகொண்டோம்.உயர்ந்த உள்ளம்.இந்த அய்யா உதவியினால் எமக்கும் ஒரு முறை சூட்சுமமாக சித்தனின் அருள் ஆசி கிடைத்திருக்கிறது.

அளவற்ற அன்பு கரைபுரண்டு ஓடவேண்டும் என்றே தோன்றுகிறது.மனம் எளிதாக எந்தவித குழப்பமும் இன்றி இருத்தல் நலம்.குரங்குகளுக்கு உணவு குடுப்பதால் பாடாய் படுத்தும் கர்ம வினை தாக்கம் குறைகிறது.குரங்குகளுக்கு மட்டும் அல்ல .எவை எவைகளை இறைவன் நமக்கு அருகிலே வைத்திருக்கிறானோ ,எவை எவைகளை  இறைவன் அன்றாடம் நம்மை அதில் ஈடுபடுத்தி உறவாட செய்து ,நமது கர்மவினை நாட்களை கடக்க வைக்கிறானோ ,அவைகள் உதவி செய் என்று ஒரு பொழுதும்  வேண்டுவதில்லை,ஆனாலும் அங்கே உதவும் எண்ணம் யாருக்கு வருகிறதே ,அவர்களே ஆயிரம் மக்கள் இருக்கும் கூட்டத்தில்  தனியாய் வேறுபட்டு இறை நிறைந்து இருப்பார்கள்,அங்கே அந்த நல்ல உள்ளத்தில் இறை மிளிரும் வாய்ப்பு கிட்டுகிறது.இறை மிளிர்கிறது.சித்தனின் அருள் ஆசிகள் அவர்கள் எங்கு சென்றாலும்தொடர்கிறது.



ஸ்ரீ மகாபைரவர் அருள்பாலிக்கும் இடம்


 வழக்கம் போல ஏறிய எமக்கு ,கொண்டு சென்ற பிஸ்கட் உணவுகளை ஏறிய ஐம்பது படிகளில் ஒரு குரங்கு வந்து மிக அழகாக வாங்கி சென்று விட்டது.மேலும் ஏற ஏற ஆங்காகே இருக்கிற குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வாங்கிகொண்டது,கடைசியில் உச்சியில் இருக்கின்ற குரங்குகளுக்கு ஏதுமில்லை கொடுக்க.வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில்களையும் பிடுங்குகிறது .அது மட்டுமல்ல ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் கையை வைத்து ஏதேனும் மறைத்து உணவினை வைத்திருக்கிறானா ? என்று பார்த்து பிறகு தான் ஆளையே உள்ளே செல்ல விடுகிறது ஒரு சில குரங்குகள்.நீண்ட கல்படிகளை  ஒரே மூச்சில் ஏற முடியாத நிலை தான் எமக்கும்.பொறுமை தேவை .சித்தனின் ஆசிர்வாதம் என்றால் சும்மாவா? ஒரு துளி ஆசி அலையின் ஒரு சிறு தாக்கம் மனதை அப்படியே புரட்டி போட்டுவிடும்,முன்னிலும் மேம்பட்ட நிலைக்கு எடுத்துச்செல்லும். மச்சமுனியின் ஆசி அலைகள் மலையெங்கும் வீசுகிறது.





ஒரு வழியாக ஏறி காசிவிஸ்வநாதரை தரிசித்து,தாகத்திற்கு சுனைநீர் பருகி (பச்சை பசேலென இருந்தாலும்,நீரின் சுவையோ அற்புதம் ,நிறைய அன்பர்கள் இதையெல்லாம் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை) வெள்ளை மீனை பார்த்து பொறியும் தயிரும் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக படி இறங்கிகொண்டிருக்கிறோம். மாலை விடைபெற்று இருள் சூழப்போகும் நேரம் காத்துக்கொண்டிருகிறது.  இறங்கும் போது குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் அய்யா மேலே மூட்டையுடன் வருகிறார்.அவரும் இறங்கும் போது பார்த்துசெல்லுங்கள் படிகளின் ஓரத்தில் நடக்காதீர்கள் ,தற்பொழுது  அடிக்கடி மழை பெய்வதால் ,பூச்சிகள் (பாம்புகள் ) வந்து படுத்துக்கொள்கிறது.ஆகவே கவனமாக செல்லுங்கள் என்று எம்மிடம் சொல்லிவிட்டு அவரும் மேலே சென்று விட்டார்கள்.எமக்கு ஏனோ இவை பற்றி கவலை இல்லை மனதில்.

படிகள் இறங்க இறங்க மனம் லேசாகிறது . மெல்லிய காற்று சூழ்ந்துஈர்த்து வாரி நெஞ்சத்தை அணைத்துக்கொள்கிறது .மனது துள்ளிக்குதித்து குதூகளம் அடைகிறது.வெறுமனே இருந்த மனதில், உள்ளத்தில் புதிதாக ஒன்று சூழ்ந்துகொண்டது.தற்பொழுது உள்ளத்தில் இருக்கும் அலையை விட்டு எம்மால் வெளிவரமுடியவில்லை அவ்வளவு சீக்கிரம்.அந்த அளவிற்கு அமைதியும் கருணையும் இறையும் சூழ்ந்து மிகுந்த ஆனந்தமாக வைத்திருக்கிறது.யாம் எந்த சித்தரையும் பார்க்கவில்லை.ஆனாலும் ஒரு வித அலை எம்முள் உள்ளே ஒட்டி உறவாடியது.அந்த அலையின் சொந்தகாரர் யார் ?அது ஒரு வெறும் அலை மட்டுமா ? இல்லை இல்லை .மிக அற்புதம் நிறைந்தது அதி உன்னதமானது.எந்த ஒரு மூடனின் மலிங்கிய அறிவையும் கூர் சேர்த்து தலை நிமிர்த்திவிடும்.ஒரு ஜீவ அலை வருடியதால்  மனம் ,அறிவு,மூளை யாவும்  புடம் போட்டு பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்க வைக்கிறது.சும்மா இருந்த ஒரு சாதாரண ஆன்மாவிற்கு , ஏதோ ஒரு அலை வருடியதால் ,உடலை உயிரை உள்ளத்தை விழிப்பு நிலையில் வைக்கிறது.விழிப்பு நிலை என்றால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.சும்மா வெறுமனே மனம் போன போக்கில் சிந்தனை இல்லை.என்ன நிகழ்கிறது என்பதை முழு மனதுடன் கூர்ந்து ரசித்து கவனிக்கிறது.அடடா தினந்தோறும் இப்படி வாழ்வை எதிர்கொண்டால் வாழ்வு எவ்வளவு தீர்க்கமாக ஆழமாக  அற்புதமாக இருக்கும்.மனதில் ஒரு சித்தன் போட்ட ஒரு சூடு ,அது உச்சி முதல் உள்ளங்கால் வரை ,துடிப்புடன் ,விழிப்புடன் மிக நேர்த்தியாக எல்லா செல்களையும் நன்றாக இயக்கி யாவற்றையும் கவனிக்கிறது.மூளையில் ஒரு புத்துணர்ச்சி ,இது வரை இயங்காமல் மலிங்கி போய் இருந்த செல்கள் எல்லாம் ,புத்துணர்ச்சியோடு துள்ளி எழுகிறது.இறை படைத்த மாபெரும் மானுட வடிவம் இது.எத்தனை அற்புதம் நிறைந்த உடம்பு இதில் ஆயிரம் ஆயிரம் செல்கள் கைகோர்க்க எல்லாம் ஒரு கட்டத்தில் மாயை போல மருவி ,ஒரு கருவியாக ,பணியை செய்யும் ஒரு தற்காலிக வடிவம் பெற்று ,தத்தம் கடமையை செய்யும் விதம் நேர்த்தி திறம் ,இவை யாவையும் எண்ண எண்ண பிரம்மிக்க வைக்கிறது.கிட்டதட்ட ஒரு நாள் முழுவதும் யாம் தூங்கவே இல்லை .பகலா இரவா என எதுவும் தெரியவில்லை .இருபத்திநான்கு மணிநேரமும் விழிப்புடன், சும்மா தகதகவெனும்  ஆற்றல் மிகு அலையுடன் இருந்தேன் .பொழுது போனதும் தெரியவில்லை.கண்களை மூடி தூங்கினாலும் தூக்கமே இங்கு இல்லை.தூங்கவில்லை எனும் காரணத்தால் சிறு அளவில் கூட ஆற்றல் இழப்போ சோம்பேறித்தனமோ என எதுவும் இல்லை.அப்படி ஒரு அலை இயக்கம் அப்படி ஒரு விழிப்பு நிலை.



தூய சங்கத் தமிழ் துள்ளி உறவாடுகிறது நெஞ்சத்துள் கவியாய்  அருவி போல கொட்டுகிறது.கவி எழுதும் அலை நீளத்திற்கு மிக அழகாக கொண்டுசெல்கிறது.இப்படியே இந்த அலைநீளத்தில் இருத்தல் சுகமே என்பதை சொல்லாமல் சொல்கிறது.ஒரு சித்தன் நினைத்தால் மிக சாதரணமான மனிதனை மிக பெரும் மனிதனாக மாற்றலாம். .ஒரு சிறிய அலையே இப்படி என்றால் ,அலை பிறக்கும் இடம் எத்தனை வலிமையுடையது என்பதை நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.எத்தனை ஆயிரம் ஆயிரம் மெகாவாட் ஆற்றல் கொண்ட மின்சாரம்.காருண்யம் கடல் போல பரந்து,விரிந்து ,பார்க்கும்  யாருக்கும், தம்மை நினைக்கும் எவருக்கும்,எங்கிருந்தாலும் வெட்டவெளி மின்காந்த அலைகளோடு இணைப்பை ஏற்படுத்தி ஆற்றல் கொடுக்கும் திறம்,நுட்பம் ,கலை அற்புதம் ...அற்புதம்... அற்புதம்.மெல்லிய மன நிலை (light weight) ,பெரும் ஆற்றலால் புடம் போட்ட உடல் உயிர் மனம் .தூய ஒளிக்கற்றை பாய்ந்த உள்ளம்,வெறுமனே நடப்பதை ஆழமாய் ரசித்து கவனிக்கும் தன்மை என வெகு நேரம் தொடர்கிறது




அறிவை கூர்படுத்தி  மனதை தெளிவாக்கி வைத்துக்கொண்டால் செய்யும் நல்ல செயல்கள் எதுவாகினும் மிக எளிதில் திறம்பட செய்துவிடலாம்..மனதையும் அறிவையும் ,உயிரையும் ஒரு சிறு அலை மிக அற்புதமாக நேர்படுத்துகிறது என்றால் அந்த அலையின் பிறப்பிடம் ,அலையை உருவாக்கியவனின் திறம் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே ஆற்றல் மனதில் இறுக பற்றிக்கொள்கிறது..இவை எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம் ,அலையாக ,ஆசிர்வாதமாக ,அறிவுரையாக எதுவாகினும் அவை ஏற்படுத்தும் தாக்கம் மிக அற்புதம்.
கிட்ட தட்ட ஒரு நாள் முழுவதும் , இருபத்திநான்கு மணி நேரத்திற்கு பிறகு இந்த அலை  கொஞ்சம் கொஞ்சாமாக விலகுகிறது ,ஒரு சாதரண மனித அலை இயக்கதிற்கு வருகிறது.நேரம் செல்ல செல்ல வெளிவட்ட தொடர்பு பெற்று ,கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது .சூழல் மாறுகிறது . எத்தனை வேறுபாடு ,எவ்வளவு மாற்றம் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைகிறது. காலங்கள் கடந்து  சென்றாலும் இந்த சித்தனின் அலை ,அது  ஏற்படுத்திய தாக்கம் அலையாய் விரிகிறது, ஈர்த்து அணைத்த ஜீவ அலைகளை அதன் நினைவினை அசை போட அசைபோட ,அதன் சாராம்சத்தினை தந்துவிட்டே செல்கிறது.ஒன்றை மற்றதாய் மாற்றிக்கொண்டே  செல்லும் இந்த இறை பயணத்தில் .நேற்று இருந்த மனநிலை இன்றில்லை.இன்றிருக்கும் கோள்களின் தாக்கம் நாளையில்லை .நாளை வரப்போகும் எதுவும் மீண்டும் மாற்றுதலுக்கு உள்ளாகபோகிறது.எதுவும் இங்கே நிரந்தரமில்லை. இந்த இடைப்பட்ட பயணத்தில்  உருவாகும் நிகழ்வுகளை இறையோடு இயைந்து எதிர்கொள்வோம் .!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்