குருவைத்தேடி...!!!



எல்லாம் வல்ல பரம் பொருளே !! ஆதி முதல் குருவே..!! கேட்பாரற்று சோவென கிடக்கும் பரவெளியே ..!! எல்லையே இல்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும் நுண்ணிய அணுக்கள் நிறைந்த  ஆற்றல் உடையோனே!! ஆதியாய் ஜோதியாய் அலையாய் எம்முள் வந்து ,எம் மனதுள் நின்று , எம் உயிருள் நுழைந்து,அழகாய் அற்புதமாய் வந்து, நின்திருத்தாண்டவத்தை நிகழ்த்துவாய் எம் நாயகனே ..!! எம் உள்ளத்துள் நின் அலைகள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எமக்கு பேரின்பமே .!! நின் அருள் அலைகள் தரும் ஒரு இதம், ஒரு சுகம்,யாருமே எமக்கு இப்பிரபஞ்சத்தில் தரஇயலாது எம் பெம்மானே !! நின்  அருள் அலைகளால் தெறித்து ஓடுகிறது எம்மை சூழ்ந்த அஞ்ஞானம் ,நின்  அருள் அலைகளால் புறமுதுகிட்டு ஓடுகிறது எம்மை ஆட்டிபடைத்த கர்மவினைகள் ..!!  நின்னை எம்முள் எம் உள்ளத்துள் கொண்டுவர எதுவும் தேவையில்லை ,எங்கு அழைத்தாலும் வருகிறாய் எங்கெங்கும் இருக்கிறாய்.எங்கெல்லாம் வெளிஇருக்கிறதோ அங்கெல்லாம் நின் அருளும் இருக்கிறது.நின்னை நினைத்த மாத்திரத்தில் ஜிவ்வென பற்றிக்கொள்கிறது எம் உள்ளம் ,உள்ளத்தில் அமுதமழை பொழிகிறது ,ஆனந்தம் நிறைகிறது அமைதி பேரமைதி என அது தாமாய் மிளிர்கிறது.நின் அருள் அலைகள் எம்முள் அற்புதம் செய்கிறது.இந்த அருள் அலைகளை எம்உள்ளத்துள் வைத்து நின் பொற்பாதம் பணிகின்றோம் எம் பெருமானே !!


யாது செய்யினும் சிந்தை குருவின் திருவடியில் இருத்தல், செயலுக்கு முழுப்பலனையும் தருகிறது.எம்முள் குருவே உள்ளிருந்து யாவற்றையும் வழிநடத்துகிறார் எனும் நிலை உருவாகிற பொழுது ,அஞ்ஞானம்  புறமுதுகிட்டுஓடுகிறது.மாயை அகள்கிறது,இன்னல் இருக்கும் இடம்தெரியாமல் பரந்தோடுகிறது,சூரிய ஒளிக்கற்றை பட்டவுடன் எப்படி எல்லா இயற்கை செடி கொடி மரம் உயிர் யாவும் தத்தம் வேலைகளை செய்கிறதோ அது போல ,குருவின் அருள் ஜோதி பிரகாச அலைகள் பட்டவுடன் ,என்ன செய்யபடவேண்டுமோ அது எந்தவித தடையுமின்றி அற்புதமாக நடந்தேறுகிறது.குருவின் அருள் இல்லையெனில் அங்கே இருப்பது தனி மனித அறிவு ,ஏதோ செயல்கள்  நடந்தேறுகிறது அவ்வளவுதான்.கர்வினையின் தாக்கம் நிறைந்து அடிபட்டு ,மிதிபட்டு ,தனி மனித ஆற்றலை முழுமையாக இழந்து துவண்டு வாடிவிடுகிறது.உங்கள் குருவினை உள்ளத்தில் வைத்து அன்றைய நாள் பொழுதினை துணிவோடு எதிர்கொள்ளுங்கள் ,வாழ்வு மிக எளிதாகிவிடும்.





குரு என்பவர் எங்கேயிருக்கிறார்?.அவர் ஒரு ஸ்தூல வடிவமா ? அவரிடம் பேசமுடியுமா ? எமக்கு உண்டான எல்லா பிரச்சனைகளுக்கும் அவர் நல்ல தீர்வினை சொல்வாரா ? எப்படி இருப்பார் எம் குரு ? தோற்றத்தில் அறிவில் ஞானத்தில் ?எனும் கேள்விகளை உள்ளே கேட்டுப்பாருங்கள்.எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து விழும்.அவரவர் தேடினால் மட்டுமே விடை கிடைக்கும்.குருவேண்டுமென்று திருவண்ணாமலையை கிரிவலம் வந்து குருவின் ஆசிபெற்றோர் நிறைய உள்ளனர்.குரு ஸ்தூலமாகமட்டுமின்றி  சூட்சுமாகவும் உள்ளத்தில் அலைவடிவில் ,உள்ளத்துள் நிறைந்து ஒரு சில அதிர்வுஅலைகளை ஏற்படுத்தி வழிநடத்துவார். முதலில் எம் மனம் ,எம் மனதுள்ளே எமக்கு கிடைக்கும் சிந்தனை ,தீர்க்கமான முடிவு ,இவை யாவும் நொடிபொழுதில் யாம் தீர்மானித்து முடிவினை எடுத்தாகவேண்டும் ,இங்கே எனது அறிவு ,எனது அனுபவம் ,எனது திறமை இவை யாவும் எடுக்கும் தீர்மானிக்கும் ஒரு முடிவு ,ஒரு செயல் ,இவைகளை மிக துல்லியமாக எடுத்தாகவேண்டும் .கற்ற அறிவு ,திறமை யாவும் கொண்டு ஒரு முடிவை தீர்மானித்து எடுத்து நடைமுறைக்கு கொண்டுவந்தாலும் அது ஓரளவிற்கு செயல்படுகிறது.ஆனால் இங்கே குரு எனும் மாபெரும் இறைஆற்றல் துணை கொண்டு ,ஒரு முடிவினை தீர்மானித்தால் ,அதன் விளைவுகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாக வேலைசெய்கிறது.




குரு கிடைப்பது அவரவரின் பூர்வ ஜென்ம புண்ணியம்.குருவின் அறிவுரை கேட்கும் வாய்ப்பு பெறுவது ,குருவை காண்பது ,குருவோடு பேசுவது என்பதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்.குரு ஒரு ரூபாய் கூட எதிர்பார்க்கமாட்டார் .மாறாக தம்மிடம் இருக்கும் இறை அருளால் சீடர்களின் இன்னல் தீர்த்து ,அவர்கள் கர்மவினையை சூட்சுமமாய்  உள்நோக்கி அவர்கள் வாழ்வு இறைநோக்கி செல்ல வழிகாட்டுவார்.சூட்சும மாய் எம்உள்ளத்துள் அதிர்வுஅலைகளை உருவாக்கி, எம்முள் எம் உள்ளத்துள் அன்பு என்றால் என்ன என்பதை நன்கு புரியவைத்து, நன்கு  ஆழமாய் உணரவைத்து,அதன் மூலம் இறையை உணரவைத்தவர் எம் தந்தை ஸ்ரீ அகத்திய மாமுனிவர் ஐயா(இது அன்பின் ஆழம் கட்டுரை வாசிக்கவும்).






ஒருமுறை மஹாபெரியவரின் போட்டோ வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்றோம்.அளவுக்கு அதிகமாக ஸ்வாமி போட்டோகளும் ,மற்ற மகான்கள் போட்டோகளும் இருந்தன.ஆனால் யாம் தேடிவந்த பெரியவர் போட்டோ மட்டும் எம் கண்ணிற்கு பிடிபடவில்லை. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சரி கடைக்காரரை கேட்கவேண்டியது தான் என ,அங்கே இருந்தவரை கேட்க , அவரும் புரிந்துகொண்டு ,ஓஅந்த தாத்தா போட்டோவா ,இருங்க எடுத்துதருகிறேன் என்று ஒரு நொடியில் தேடி பிடித்து எடுத்து காண்பிக்க ,மிக அற்புதமாக இருந்தது.மனதிற்கும் மிக நிறைவாக இருந்தது.ஏனெனில் எமது பூஜை அறையில் ஒரு இடம் காலியாகவே இருந்தது நீண்டநாட்களாய் ,அந்த இடத்திற்கு மஹாபெரியவர் போட்டோ மாட்டவேண்டும் என்று என்றோ தீர்மானித்துவிட்டோம்.அதற்கான நேரம் வந்துவிட்டது.தாருங்கள் அன்பரே என பில் போட என்று அவரிடம் கேட்ட போது, அந்த கடைக்கார அன்பரோ இதில் விலை ஸ்டிக்கர் மிக குறைவாக தவறுதலாக ஒட்டிவிட்டார்கள்.ஆகவே இதனை பிரிண்ட் திருத்தவேண்டும்.இதே பிரேமில் வேறு போட்டோ இருக்கிறது சரியான விலையில்,ஆனால் இந்த தாத்தா போட்டோ ஒன்னே ஒன்னுமட்டும் தான் இருக்கிறது .எனவே இதை தர இயலாது பிறகு வாருங்கள் என்றுசொல்லி விட்டார்.ஒரு சிறு வருத்தம் இருந்தது .சரி என்று யாமும் வந்துவிட்டோம்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே கடைக்கு சென்றோம். அதே இடத்தில் பெரியவர் போட்டோ கேட்க , அங்கே வேறு ஒரு அன்பர் ,ஓடிவந்து ,எடுத்துக்கொடுத்தார்.நீங்கள் சென்று பில் போடுங்கள் என்று  எம்மிடம் கொடுக்க ,யாமும் அதை வாங்கி அங்கிருந்து நகன்று வந்து பில்போட்டுவிட்டேன்.பில் போட்டு திருப்பி பார்க்கிறேன் ,ஒரே ஆச்சர்யம் ,யாம் போன முறை சென்றபோது ,எம் கைக்கு கிடைத்த அதே மஹாபெரியவர் போட்டோ,அதே விலையில் (குறைவான விலையில்) இன்னும் விலைதிருத்தபடாமல் அப்படியே எமக்கு திரும்பிகிடைத்தது .ஏனெனில் இதே பிரேமில் இருக்கும் மற்ற போட்டோ எல்லாம் இதைவிட இரண்டுமடங்கு விலை அதிகம். விலை ஒரு புறம் இருந்தாலும் ,மஹாபெரியவரின் அருள்ஆசி இந்த சிறுபோட்டோ விசயத்தில் எம் உள்ளத்தில் மிக அற்புதமான அதிர்வு அலையை ஏற்படுத்தியது. எமக்காக விலையையும் குறைத்து ,தமது திருவிளையாடலையும் நிறைவேற்றி, எம் உள்ளத்தையும் உற்றுநோக்கி ,எம்மை சோதனைசெய்வது போல ஒரு நாடகத்தையும் நடத்தி, வரவேண்டிய காலத்தில் யாம் உனது பூஜைஅறைக்கு வருவோம் என்பதை சொல்லாமல் நடத்திகாட்டிய இந்த நிகழ்வு , இன்றும் குருநாதர் அலைவடிவில் இருக்கிறார் ,நாம் குருஅர்ப்பணிப்போடு செய்யும்  ஒவ்வொரு செயலையும் நன்றாக கவனித்து நமக்கு வாழ்வை மிக இதமாக்கி, இனிமையாக்கி , நம்மை இறைவழியில் அழைத்துசெல்ல வழிவகைசெய்கிறார் என்பதை நிரூபிக்கிறது என்பது யாம் ஆணித்தனமாக உணர்ந்த உண்மை.

குருவை போற்றுங்கள் ஏதேனும் ஒரு வடிவில் ,செய்தி துளியாகவோ ,உள்ளத்தில் அதிர்வுள்ள அலையாகவோ ,யாரோ ஒருவர் யாருக்கோ சொல்லும் பேச்சின் மூலமாகவோ,ஏதேனும் ஒரு வடிவில் ,உள்ளத்தில் ஒரு அதிர்வு அலையை ஏற்படுத்தி,அறிவை நன்கு உங்களை உங்களுக்கு புரியவைத்து செயல்படவைப்பார், குரு.எந்த ரூபமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஒருவனுக்கு குரு பற்றிய சிந்தனை இல்லை எனில் எல்லாம் வீண்.எவ்வளவு கற்றறிந்தும் எவ்வளவு தான் செல்வங்கள் இருந்தாலும் குருவின் தாமரை பாதங்களில் மனதினை செலுத்தாவிட்டால் ,பெற்ற யாவும் பயனில்லை.செய்யும் யாவும் குருவிற்கு அர்ப்பணம் செய்துவிட வேண்டும் .எது எப்படி யாயினும் குருவின் பாதங்களில் சமர்பிக்கவேண்டும்.

மனித அறிவைகொண்டு ஓரளவிற்கு மனதினுள் இறை பற்றிய  சிந்தனைகள் அது எப்படி அடைவது என்பதினை ஏட்டில் இருக்கும் சுரைக்காய் போல அறிந்துகொள்ளலாம்.ஆனால் உண்மையிலேயே எப்படி இறையை உணர்ந்துகொள்ளல்  என்றால் அதற்கு இந்த அறிவின் எல்லையை (limitedness) தாண்டி வரவேண்டும் .அறிவின் எல்லையை தாண்டி வருவது என்பது மிக கடினமான வேலை .இங்கே தான் குரு மிக அதிஅற்புதமாக  மாற்றம் செய்கிறார். தமது ஆற்றலையும் இறைஆற்றலையும் சேர்த்து ,அறிவை அதன் எல்லைதாண்டி செல்லும் நிலைக்கு மிக  அற்புதமாக உயர்த்தி  உதவுகிறார்.

குருவின் மேன்மை பற்றி ஆதிசங்கரர் விவரிக்கிறார்கள்.ஒரு அற்புதமான அஷ்டகம் இது.பொறுமையுடன் படித்து உணருங்கள்.குரு நம் வாழ்வில் எவ்வளவு அவசியம் என்பதை  மிக அழகாக விவரிக்கிறது.குருவைபற்றிய புரிதலையும் தேடுதலையும் இந்த குருவாஷ்டகம் மிக அற்புதமாக உணர்த்துவதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.இந்த குருவாஷ்டகத்திற்கு மிக அழகான இனிமையான மெட்டு போட்டு பாடலை மிக அழகாக பாடியிருக்கிறார்கள் .அவர்களுக்கு எம் உள்ளம் நிறைந்த நன்றிகளை இந்த வலைத்தளம் மூலமாக தெரிவித்துகொள்கிறோம்.





ஆதிசங்கரர் தம் ஆன்மீக பயணத்தினை குருவின் துணை கொண்டு தொடர்தலே உன்னதம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டு ,கேரளாவிலே  காலடியில் நர்மதா நதிக்கரையில் இருக்கும் கோவிந்தபாதரின் ஆசிரமத்தில் குருவுக்கு சீடனாக பலகாலம் தொண்டுசெய்தார்கள்.குருவின் மீது   மிக அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.எதையும் ஒரு குருவின் மூலமே கற்றறிய வேண்டும் என்பதில் அதீத நமிக்கை வைந்திருந்தார்கள்.

குருவின் சிறப்பு எத்தகையது என்பதினை மிக அழகாக குருவாஷ்டகம் எனும் ஸ்லோகத்தில் விவரிக்கிறார்கள்.

ஸரீரம் ,ஸ்வரூபம் ததா  யுவா கலத்ரம் உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் ,
யஸஸ்ஸாரு சித்ரம் தனம் மேருதுல்யம்  உங்கள் பெயர் புகழ் ஓங்கியிருந்தாலும் தனம் மலையளவு குவிந்துகிடந்தாலும் 
மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?



கலத்ரம் தனம்புத்ரபௌத்ராதி ஸர்வம்  அதிர்ஷ்டம் செல்வத்தையும் நல்லகுணம் நிறைந்த மனைவியையும் நல்ல குழந்தைகளையும் 
க்ருஹம் பாந்தவா: ஸர்வமேதத்தி ஜாதம் ! நல்ல நண்பர்களையும் வீடுவாசல்களையும் கொடுத்திருந்தாலும்
மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?

ஷடயூங்காதிவேதோ முகே ஸாஸ்த்ரவித்யாஅனைத்து வேதங்களையும் நீங்கள் கற்றுதேர்ச்சிபெற்றாலும் ,

கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி உங்கள் நாவிலே அவை குடியிருந்தாலும் ,ஸ்லோகங்களை நீ படைத்திருந்தாலும்
மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?

விதேசேஷு மாந்ய: ஸ்வதேஸசேஷு தந்ய:
ஸதாசாரவ்ரு த்தேஷு மத்தோ ந சாந்யா :
வீட்டிலும் வெளியிலும் வேறு பூமிகளிலும் நல்ல செயலுக்காகவோ அல்லது வேறு செயலுக்காகவோ உங்கள் புகழ் பரவி மதிக்கப்பட்டவனாகயிருந்தாலும்

மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?

க்ஷமாமண்டலே பூபபூபாலப்ருந்தை :
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம் ! உங்கள் மேன்மை மற்றும் பண்டித திறமையினாலும் ராஜாக்கள யாவரும் உங்கள் காலடியில் விழுவார்கள் என்றாலும்
மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?


யஸஸோ மே கதம் திக்ஷு தாநப்ரதாபா
ஜ்ஜகத்வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத் !

உங்கல் புகழ்  எங்கும் பரவியிருந்தாலும் நல்ல ஒழுக்கத்தால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் பரிசாக கிடைத்தாலும்

மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?


ந போகே ந யோகே  ந வா வாஜிரா ஜௌ
ந காந்தாமுகே நைவ வித்தேஷு சித்தம் ! 

செல்வங்களாலும் சொந்த மனைவியினாலும் சுகபோகங்களையும் விரும்பாதவனாகவும் நீ  இருக்கலாம் ,யோகம் தியானம் போன்றவற்றின் பலன்களையும் நீ விரும்பாதவனாகக்கூட இருக்கலாம் .ஆனால்

மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே 
ந தேஹே மநோ வர்ததே மே த்வநர்க்யே !
வீடு போலவே காட்டிலும் வசிக்க தயாராக இருக்கலாம். பற்று இல்லாமல் செயல்களையும் செய்யலாம். உடல் ஆரோக்யம் கெட்டு அழகில்லாமல் இருப்பதை கூட நீ கவலைப்படாதவனாக இருக்கலாம் ஆனால்
மனஸ்சேன லக்னம் குரோ ரங்கிரி  பத்மே   உங்கள் மனம் குருவின் தாமரைப்பாதங்களில் லயித்திருக்காவிட்டால்
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் உண்மையில் இவற்றால் என்ன பயன் ?என்னபயன் ? என்னபயன் ? என்னபயன் ?


குரோரஷ்டகம் ய: படேத்புண்யதேஹீ
யதிர்பூபதிர் ப்ரஹ்மசாரீசகேஹீ !
லபேத்வாஞ்சிதார்தயும் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்தவாக்யே மநோ யஸ்ய லக்நம் !!

எவரொருவர் இந்த குருவாஷ்டகத்தை படித்து புரிந்துகொண்டு, குருவின் மேன்மையை விவரிக்கும் இந்த அஷ்டகத்தை  உச்சாடனம் செய்கிறார்களோ  ,குருவிற்கு விசுவாசமாகவும் நடந்துகொண்டு ,அவர் கற்பித்தவற்றை புரிந்துகொண்டும் இருப்பவர்கள், அவர்கள் புனிதர்களோ சந்யாசிகளோ, மன்னர்களோ , இல்லத்துவாசிகளோ ,யாராக இருந்தாலும் ,அவர்கள் தங்கள் லட்சியத்தையடைந்து ,அதாவது பரம்பொருளின் இருபிடத்தை அடைந்து ,அசைக்கமுடியாத முடிவற்ற இருக்கையில் அமர்வார்கள்.



Click below link to Download குருவாஷ்டகம் PDF
குருவாஷ்டகம்

Click below link to Download குருவாஷ்டகம் MP3
Guruvastagam MP3

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்