குரு தேடல்...!!!





"...சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே...."

இறையை பற்றி சிந்திக்க வேண்டும் ,ஒரு துளி அலையாவது உணரவேண்டும் என்ற உன்னதமான சிந்தனை ,எண்ணம் கொண்டோர்,இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ,அது திருவண்ணாமலையோ அல்லது வேறு எங்கோ ,எங்கோ இறை கொடுத்த ஒரு சிறு இடத்தில் ,அமர்ந்துகொண்டு ,
மாணிக்கவாசக பெருமானார் இறை உணர்ந்து எழுதிய  "..மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே ... என தொடங்கும் பாடலில் வரும்  வரியான "சோதியனே துன்னிருளே...." இந்த இரண்டு வரியை மட்டும் ,கொஞ்சம் ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டு இதன் பொருளை ,இதன் தன்மையை உணரமுற்படுங்கள் ,உங்களை வெகு விரைவில் இறை அலைகள் சூழ்ந்து ,முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும்.

இந்த பிரபஞ்சமே வியக்கும் அளவுக்கு மாபெரும் அக்னிபிழம்பாய் ஜொலிஜொலிக்கும் மாபெரும் ஜோதிமயமானவே..!!! ஜோதி என்றால் எங்கும் எங்கெங்கும் நிறைந்து ,கண் கூசும் மிக பிரகாசமாக நிறைந்து தெறித்து ,பார்க்கும் வெளியெலாம் ஒரே ஜோதிமயமாய் தகதகவென ஒளிர்கிறது.அத்தகைய தனமை நிறைந்தோனே..!!!

ஜோதிமட்டுமா ....எங்கெங்கும் துன் இருள்...ஒரே காரிருள் ,கருங்கும்மிருட்டு,,...ஆழ்ந்து விரிந்து அகன்று செல்லும் வெளியெல்லாம் ...காரிருள் ..இருளால் சூழ்ந்தவனே.!! புறத்தே வெளிப்படாத பெருமை உடையோனே ..!! எல்லாமே நீ தான் .எல்லாம் உன்னுள்ளே ...எத்தனை எத்தனை கோடி கோடி உயிர்கள் ,உடமைகள்,பொருட்கள்,தொழிநுட்பங்கள், என யாவும் உன்னுள்ளே ..அடங்கி கிடக்கிறது.இவ்வளவு உள்ளே வைத்துக்கொண்டும் அது நான் தான் ,என்னுடையது தான் இவை யாவும்,நான் தான் இவை யாவையும் படைத்தேன், என்று ஒரு இம்மி அளவு கூட கர்வம் இல்லாதவனின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது ....இன்னும் என்ன என்னவெல்லாம் ஆதிவெளியில்இருந்து வரப்போகிறதோ.... கற்பனைக்கே எட்ட இயலாத ,இப்பொழுது நாம் பார்ப்பதும் ,இனிமேல் இப்பிரபஞ்சத்திலிருந்து பிறக்கபோகும் கோடான கோடி உயிர்களும் பொருட்களும் ,தொழில்நுட்பமும் ,இவை யாவற்றையும் சும்மா வெறுமனே இருளாய் ,வெளியாய் உள்ளடக்கிகொண்டும் இருக்கும் தோன்றாப்பெருமையனே ..!!! பெம்மானே ..!!! ஆதி அந்தம் இல்லாதவனே..!! முடிவும் நடுவும் ஆகி அல்லானே ,அவை அல்லாது இருப்பவனே.!! எம் நெஞ்சத்தால் ஈர்த்து எமை ஆட்கொண்ட எம் தந்தையாகிய சிவபெருமானே ..!!! என பெருமகனாரின் இறைதாகம்  தொடர்கிறது..

இவை வெறும் வரிகள் அல்ல .இறைநிலையில் இருந்து அதன் சுகத்தை அனுபவித்து பிறந்த வரிகள்.இந்த வரிகளின் உண்மைத்தன்மை, அவை எம்முள் ஏற்படுத்திய பாதிப்பு ஏராளம் ஏராளம்.இந்த வரிகளை நன்கு ஆழ்ந்து உள்வாங்க முற்பட ,அது எமக்கும் இறைக்கும் தன்மையை மெல்ல மெல்ல தெளிவுபடுத்துகிறது.எவர் ஒருவர் இதனை முடிந்தவரை உள்வாங்கி ,உணர முற்படுகிராறோ ,அவருக்கு இறை பற்றிய சிந்தனை துளிர்விடுவது மட்டுமன்றி ,அவர் தம் கர்மவினை தாக்கம் குறையும் என்பது யாம் அனுபவத்தில் கண்ட உண்மை.வாழ்நாளில் கிட்டதட்ட பாதிகாலம் அற்ப பொருள் தேடலுக்கே செலவுசெய்துவிட்டாலும்,இருக்கும் மீதி காலத்தை சோதியனை நோக்கி ,ஆதியனை நோக்கி உணர முற்பட , ஆதியந்தமிலாதானின் தார்மீக அலைகள் அரவணைத்துக்கொள்ளும் என்பது சத்தியமான உண்மை.




திருமறைநாதர் கோயில்  திருவாதவூர்.


 மாணிக்கவாசகபெருமானார் பிறந்த சொந்த மண்.கிட்டதட்ட ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கே தான் ,இந்த மண்ணில் தான் திருவாசகம் பிறந்தது.வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் இங்கு சென்று (மதுரையிலிருந்து 25km தூரத்தில் இருக்கிறது இந்த திருவாதவூர் திருமறைநாதர்கோவில்) அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து,பெருமகனாரின் பாடல் வரிகளை ஆழ்ந்து உள்வாங்கி ,அதன் தாக்கத்தை உணரமுற்படுங்கள்.அலையாய் ,காற்றில் ,இங்குள்ள கல்லில் மண்ணில்,வெளியில் ,ஒரு சிறு அணுவில் பொதிந்து கிடக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிச்சென்ற இறைவரிகள், அது இன்றும் தாமாகவே சூட்சுமமாய் உணர்த்திகொண்டிருக்கும் இறை தன்மை உணரலாம்.


உதவாக்கரையான நான் எனும் அகங்காரம் கொண்ட ,எல்லாமே நான் செய்தேன்,நான் படித்தேன்,நானே பொருள் சேர்த்தேன் ...நான் நான் என்று பொய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அற்ப நான் எனும் ஒரு மிக சிறிய ஒன்றிற்கும் ,  கற்பனைக்கே எட்ட இயலாத மிக பிரம்மாண்டமாய் ,மிக மிக பிரம்மாண்டமாய் ,யாவற்றையும் உருட்டி திரட்டி இயங்கவைத்து ,ஜோதியாய் ,ஆதியாய் ,துன் இருளாய்  இருக்கும் பிரபஞ்ச நாயகனாம்  எம்பெருமான் சிவம் எனும் அற்புத பேராற்றலுக்கும் இருக்கும் தொடர்பு புரியும்.





இந்த ஆதியந்தமிலாதவனை உணர்ந்தால் மட்டுமே ,ஒரு ஆழ்ந்த மிக நீண்ட  தொடர்பு ,அற்பனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் தொடர்பு பிடிபடுகிறது.இந்த இறை சங்கிலி பிணைப்பு ஒவ்வொரு நொடிப்பொழுதும் இருந்தால் எல்லாம் சுகமே..ஒரு நொடி அகன்று விட்டாலும் இந்த மிகபெரிய இழப்பு தான் ,ஏனெனில் நாம் அந்த அளவிற்கு மனதினை மதிகெட்டு சிக்கி பாலாய் படுத்தி ,இருக்கும் ஆற்றலை நொடியில் விரயம் பண்ணும் தன்மையில் அறியாமல் தெரியாமல் நாமாகவே பழக்கப்படுத்தி வைத்துள்ளோம்.ஏனெனில் அகங்காரம் சூழ்ந்து யாவற்றையும் துவம்சமாக்கிவிடுகிறது.நொடிப்பொழுதும் நீங்காமல் இறையோடு இருக்கும் தொடர்பு என்பது ஆனந்தம் தருகிறது,நொடிப்பொழுதும் நீங்காமல் இறையோடு இருக்கும் பிணைப்பு என்பது  நிறைவு தருகிறது , நொடிப்பொழுதும் நீங்காமல் இறையோடு இருக்கும் தன்மை என்பது நிம்மதி தருகிறது.

எந்த அளவிற்கு ஆழ்ந்து உணர்ந்து இறையில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட வரிகள் பிறந்திருக்கவேண்டும் .

"....இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..."

எவ்வளவு ஆழ்ந்து அனுபவித்து உணர்ந்திருக்கிறார் மாணிக்கவாசக பெருமான் ,இப்படிப்பட்ட  போற்றுதலுக்குரிய வரிகள் காலம் கடந்தும் இன்றும் என்றென்றும் ஜொலித்துக்கொண்டேயிருக்கிறது.

இறையோடு இருத்தல் என்பது ஒரு சுகம் .இறையோடு சிந்தனை என்பது ஒரு மிக பெரிய சுகமான அனுபவம்.இறை சூழ சூழ அதன் அலைகள் சூழ சூழ ,மெல்ல மெல்ல அற்புத இறை அலைகள் நெஞ்சம் சூழ்ந்து ,இதமாய் ,மிதமாய்  அலைகள் நெஞ்சைகவ்விகொள்கிறது.அன்பு விளைகிறது .கருணை பிறக்கிறது.அதன் பிறகு எல்லாம் செழுமையே ..எல்லாம் நன்மையே..!!எல்லாம் முழுமையை நோக்கி... எங்கெங்கு பார்க்கினும் எந்தவித பேதமில்லை ..எல்லாம் சமநேர்நோக்கான பார்வையே..எல்லாம் இறையின் ஒரு பிரதிபலிப்பே எனும் தன்மையை உணரவைக்கிறது .என்ன தேவையோ அது கிடைக்கபெருகிறது. அதே போல பிற உயிருக்கு என்ன தேவையோ அதை கொடுக்க இம்மி அளவும் தடை இன்றி தர முயல்கிறது சிந்தனை ஊற்றெடுக்கிறது.கருணையோடும் அன்போடும் யாவற்றையும் வாழ்த்த தாமாகவே முயன்று வாழ்த்துகளை சொல்லும் தன்மை வருகிறது.ஆறுதலும்  நிம்மதியும் கிடைக்கபெறுவார்கள் இத்தன்மை கொண்டோர் அருகில் இருப்பவர்கள்.


எமது இறைதேடும் பயணத்தில், யாம் என்றோ செய்த புண்ணியமே யாம் சந்தித்த மகான்கள்.அதில் மூன்று மகான்கள் .மூன்று மகான்களும் மூன்று சகாப்தம்.மூன்று மகான்களும் இறை ததும்பும் முகம் .மிக எளிமையானவர்கள். இவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம் ஏராளம்.பயனடைந்தோர் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் .அதில் ஒரு புனித ஆத்மாவை பற்றி ,எமது ஸ்தூல சந்திப்பு பற்றி சிறிதே இங்கு எழுதுகிறோம்.


அண்டகோடி  பிரபஞ்ச சக்திகள் யாவும் அலையாக சுருங்கி அவர் கண்களில் ஒரு நெருப்பு பிழம்பு போல் ஜொலிக்கிறது.சாதாரண நமது பார்வையில் இந்த மகான் ஒரு சிறுபிள்ளை கைகளை ஆட்டி இங்குமங்கும் விளையாடுவது போல இருந்தாலும்,இவர் பார்க்கும் பார்வை , இந்த ஸ்தூல பொருட்களையோ ,இங்குள்ள மானுடர்களையோ அவர் தம் பொருட்களையோ அல்ல ,இது வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறது.இவர் வேறு ஏதோ ஒரு சக்தியின் ,எல்லாம் வல்ல இறையின் கட்டளையில் அதன் ஆணைகிணங்க கீழ் படிந்து ,ஏதோ ஒன்றை ஏதோ ஒரு அற்புததத்தை நிகழ்த்திகொண்டிருக்கிறது. இந்த மகான் .எவர் அழைத்தாலும் வருவார் . அன்போடு அழைபவர்களுக்கு வெகு அருகிலே இருக்கிறார் இவர் .மிக எளிமையானவர் .ஒரு சுத்த பரப்பிரம்மம் .இறையிலேயே எந்நேரமும் மூழ்கியதால் கண்களில் ஒரு ஒளி ,கண்ணங்கள் எல்லாம் காந்த ஆற்றலுக்கே உரியதான ஒரு வித செந்நிறதில் ஜிவ்வென ஜொலிக்கிறது.அழகான இறை ததும்பிய முகமும் ,தூய வெண்ணிற தாடியும் மீசையும் ,தலையிலே ஒரு வித தலைப்பாகையும் ,கைகளிலே தேங்காய் சிரட்டையும் இன்னொரு கைகளிலே விசிறியும் ,காவி நிற உடையும் வெகு எளிமையாய் தோற்றம் அளிக்கிறார்.

எத்தனையோ அன்பர்கள் எங்கெங்கோவிருந்து இங்கே வந்து இந்த மகான் தம்மை எப்பொழுது அழைப்பார் என ஒரு வித ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகிறார்கள்.யாமும் அவர்களுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து அங்கு உச்சரிக்கும் ராமநாம மந்திரத்தில் கலந்துகொண்டோம். இந்த மகான் ஒரு chain smoker .தொடர்ச்சியாக புகைபழக்கம் கொண்டவர்.யாரையும் அவர் அருகில் அவர் காலில் விழுந்து வணங்க அங்கே அனுமதிக்கவில்லை . மகான் இருக்கும் போதே அவர் எழுந்து நின்ற வடிவில் ஆசிர்வதிக்கும் சிலையை தொட்டு வணங்கி செல்லவே அனுமதி அங்கே .அந்த சிலை அருகிலே இந்த நிஜ மகான் .அவர் கண்களை மட்டும் நன்றாக உற்று கவனிக்கும் பாக்கியம் கிடைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மகானின் சிகரெட் வாசனை துளி கூட எமக்கு தெரியவில்லை.சற்று அருகிலேயே நின்று நிஜ மகானையும்  வணங்கி வெளிவந்துவிட்டோம்.கண்களை உற்றுநோக்க செந்நிறமாய் சிவந்த கண்கள் ஏதேதோ இங்குமங்கும் உருட்டிக்கொண்டிருந்தது.இது' ஏதோ ஒன்றை எங்கோ நிகழ்த்திகொண்டிருக்கிறது.

யாம்  சென்ற மூன்று முறையில் இருமுறை மட்டுமே மகானை சந்திக்க நேர்ந்தது .இரண்டு முறையும் ஒரே மாதிரியான அனுபவமே.இரண்டு முறையும் மகான் எம்மை ஏறெடுத்துக்கூட பார்க்க  வில்லை ஆனால் மகானின் சூட்சும பார்வை எம் உள்ளத்தில் பதிந்தது ,எம்  நெஞ்சுக்குழி மையத்தில் மிக அழகாக அலைவடிவில் பதிந்தது .அதன் பாதிப்பு இன்று வரை தொடர்கிறது .என்றோ ஒரு பிறவியில் செய்த புண்ணியம்,என்றோ அவரோடு இருந்ததால் அவர் அலைகள் ஏற்படுத்திய  ஒரு சிறிய தாக்கம் ஆதலால் இந்த ஸ்தூலதேகத்தில் சந்தித்தோம்.ஆனால் இன்று மகான் ஸ்தூலதேகத்தில் இல்லை அவரின் சூட்சும தேகம் இன்றும் தொடர்கிறது. இவர் ஸ்தூல வடிவம் எடுத்து வரும் காலம் வெகு விரைவிலே ,கால சக்கரம் சுழல அது எத்தனை பிறவிகள் தொடர்ந்தாலும் ,அப்போதும் எமக்கும் மகானுக்கும் இந்த தொடர்பு ,இன்னும் நெருக்கம் அதிகமாகி, இறைத்தன்மை மிளிரும் என்றே எண்ணுகிறோம்.  எம் வாழ்வில் யோகிராம் சூரத்குமாரரை சந்தித்தது பெரும்பாக்கியமாக கருதுகிறோம்.




யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்ஜெய குரு ராயா.!!

உள்ளன்போடு  இந்த தாரக மந்திரத்தை எப்பொழுது உச்சரித்தாலும் பகவான்  யோகி ராம்சுரத்குமாரின் அருள் அலைகள்  உச்சரிப்பவர்கள் அருகில் வந்து விடுகிறது பகவானின் இந்த நாமம் அதற்குரிய பண்பை அதன் இயல்பை கொடுத்துவிடுகிறது .

இந்த நாமம் உச்சரிப்பவரின் மனதை மிக ஆழ்ந்து கவனிக்கிறது அங்கே அவருக்கு என்ன தேவையோ அதை தர முயற்சி செய்கிறது ஒரு குருவின் நாமம் என்பது மிக சாதாரண விஷயம் அல்ல. குருவின் நாமம் எந்த ரூபத்தில் இருந்தாலும் சரி அது இறைநிலை சம்பந்தப்பட்டது ,சிவத்தோடு  தொடர்புடையது. குருவின் துணை கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் .எவ்வளவு பெரிய கர்மவினையாக இருந்தாலும் சரி அதனை அதன் வேர் வரை அதன் நுனி வரை சென்று அதன் தன்மையை உணர்ந்து அந்த அன்பருக்கு அவரின் கர்மவினை பாதிக்காத வண்ணம் , மிக சரியானமுறையில் அதை கையாளும் வித்தை   தெரிந்தவர்  குரு. குரு என்பது வெறும் ஸ்தூலத்தில் பார்க்கும் உருவம் மட்டும் அல்ல.இது ஒரு மிக பெரிய வலிமையுடைய தொடர்ச்சியான சங்கிலிபிணைப்புபோல உள்ள, நாம் வணங்கும் குரு மகான், மகானின் குரு ,பிறகு குருவின் குரு ,அந்த குருவின் குரு இப்படியே தொடர்ச்சியாக சென்று  இறையில் இருக்கும் ஆதி குரு வரை நீள்கிறது . அங்கிருந்து ஆற்றலை மிக விரைவில் பெற்றுத்தரும் ஒரு அற்புதமான சூட்சும ஆத்மா குரு.  இறையின் கருவி குரு.
குரு முற்பிறப்போடு சம்மந்தபட்டவர்.இனி வரும் பிறவியிலும் தொடர்புடையவர்.குருவும் இறையும் ஒன்று .

யாருக்கெல்லாம் குரு தேடல் இருக்கிறதோ,யாரெல்லாம் எமது குரு யார் ? என தேடுகிறார்களோ அவர்களெல்லாம்

யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார்ஜெய குரு ராயா.!!

எனும் தாரக மந்திரத்தை ஒரு நூறு முறை தினந்தோறும் சொல்லிவர விரைவில் விடை கிடைக்கும்,முதலில் குருவை பற்றிய தகவல் அவர் பற்றிய நிகழ்வுகள் என கனவிலும் ,நினைவிலும் மெல்ல மெல்ல கிடைக்கப்பெற்று குருவிடம் கொண்டுசெல்லும்.குருவின் ஆசிகளோடு  இக்கட்டுரையை நிறைவு செய்து வேறு ஒரு கட்டுரையில் அகத்திய உள்ளங்களை சந்திக்கின்றோம் .

வாழ்க வளமுடன்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்