இறை ஆசிகள் ...!!!




சர்வேஸ்வரனே .....!!! மானுடம் அறிய இயலா அதிநுட்பதிறம் படைத்தோனே ..!!!நீ தானே என்னுள்   ....உன்னுள்ளும் நான் இருக்கிறேனே .. இந்த உண்மை அறிந்தும் மறந்து விடுகிறேனே பலமுறை .. பாசம் நிறைந்த பரந்தவெளி பெரியோனே ..!!எம் பெருமானே !!  அண்டசராசர உயிர்கள் யாவற்றையும் அரவணைக்கும் ஆதி முதல்வோனே ..!!! தூயோனே !! மாசற்றவனே ..!! மிகபெருமைகொண்ட பழைமைவாய்ந்தவனே ..!! இன்று கிடைக்கும் தொழில்நுட்பதிறமெல்லாம் உன்னுள்ளே எத்தனையோ கோடி கோடி ஆண்டுகளுக்கு முன் ,நின் அதி நுட்ப திறத்தால் ஒரு சிறு புள்ளியாக அலையாக பதிந்துவைத்திருக்கும் அதி உன்னத திறமை வாய்ந்தவனே ..!!
பழைமைக்கும் பழைமையானவனே !! புதுமைக்கும் புதுமையானவனே ..!!
நின் பெருமையினை அளவிடல் அரிது.நின் பெருமை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்குருகி விழிபிதிங்கி நின்றோம் பல முறை .நின்னை நினைத்தல் என்பதே ஒரு சுகம்.ஆழ்ந்து ஆழ்ந்து ,அகன்று அகன்று, விரிந்து விரிந்து, பரந்து பரந்து, இயங்கும் நின் அற்புத திருத்தாண்டவம் எங்கனம் உரைப்பது எம்பெருமானே ..!!!.கிடைத்தற்கரிய  இந்த மானுட பிறவியில் நின் பெருமை எண்ணி எண்ணி ,நீ எம்மை படைத்த விதம் எண்ணி எண்ணி ,மகிழ்ந்து மகிழ்ந்து,ஆனந்தம் நிறைந்து  நின் திருவடியில் வீழ்கின்றோம் ..!! அரவணைப்பாய் ஆதி அந்தமிலா நாயகனே ..!!!





சிவம் மிகபெரியது. எப்பொழுது எதை எங்கு நிகழ்த்துவது என்பதெல்லாம் சிவத்திற்கு மட்டுமே தெரியும்.சிவத்தை அறிதல் என்பது இயலாதது .அறிய முற்பட்டோர் அங்கேயே அமிழ்ந்து மூழ்கிகொண்டே தம்மை மறந்தோர் ஆயிரம் ஆயிரம் . கோடியில் ஒரு பிறப்பு சித்தன் .சித்தனும் சிவனும்  கிட்டத்தட்ட ஒன்று தான்.சித்தன் சொல்வது நிகழும் ஆனால் சிவம் என்ன சொல்கிறதோ அதையே சித்தனும் சொல்கிறார்.இறை தான் எல்லாம் நடத்துகின்றது.இது தெரிந்தும் இந்த மனம் இதை நம்ப மறுக்கின்றது தமது அகந்தையால்.இந்த மாபெரும் மனித உடலை, உயிரை படைத்ததே இறை தானே.ஆனால் ஆணவம் நிறைந்த மனம் இதை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறதா ?  இறை தான் ஒருவனுக்கு தேவையான பணம் தருகின்றது .இறை தான் ஒருவனுக்கு தேவையான செல்வம் தருகின்றது.இறை தான் ஒருவனுக்கு தேவையான நீர் காற்று உணவு என யாவற்றையும் தருகின்றது.இவை எல்லாம் என்னால், என் உழைப்பினால் மட்டுமே கிடைத்தது என்று அகந்தை மிகுதியால் சொல்வது என்பது எவ்வளவு பொருத்தமற்றது.இது எப்பொழுது ஒருவருக்கு பிடிபடும் என்றால் அதற்கான சூழல் அமையும் போது தான்,எவ்வளவு செல்வவளம் இருந்தும் இறையின் ஒரு சின்ன இயற்க்கை சீற்றத்தில் பொருள்வளம் செல்வவளம் என எல்லாம் மண்ணோடு மண்ணாகி , அடுத்தவேளை என்ன செய்வது என்ற நிலைக்கு தள்ளப்படும்போது தான் ,இறையே எல்லாம் நடத்துகின்றது ,இதில் எம் உழைப்பு என்பது தூசியே என்பது தெரியவருகிறது.அங்கே உழைப்பு   ,பணம், பொருள், வாகனம் ,நிலம், வீடு ,படித்து பெற்ற பட்டம், புகழ் என எல்லாம் எங்கே..எங்கே..?? எல்லாம் அங்கே மண்ணோடு மண்ணாக கேட்பாரற்று கிடக்கின்றது. எல்லாம் தூசியோடு தூசியாக கிடக்கின்றது.

மானுட பிறவி அரிது அரிது  .......கிடைத்ததை எண்ணி பெருமை கொண்டு , இறை எதிர்கொள்ளச்செய்யும் காரணகாரியத்தால் ,அன்றைய நாள் நம்மோடு உறவாடும் அத்தனை உயிர்களையும் ,எந்தவிதத்திலும்  ஒரு சிறு அளவேனும் தீங்கின்றி ,நமக்கு விதிக்கபட்ட செயலை செய்து,முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து ,துன்பப்படும் உயிருக்கு ,குறைந்த அளவில்   ஒரு ஆருதலேனும் சொல்லி ,நல்லாஇருப்பா , எல்லாம் கடந்துபோகும் ,மாற்றமே நிலையானது ,எதுவும் இங்கே நிரந்தரம் இல்லை,எத்தகைய கொடிய துன்பமும் நொடியில் கரைந்து போதும் ஈசனின் அருள் பெற்றால்,வாழ்க வளமுடன் ,எல்லாம் இறையின் ஆசிர்வாதம் .விரைவில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் என வாழ்த்து சொல்ல ,அந்த உயிரும் அளவிலா ஆனந்தம் பெரும் ,நமது பிறவிபெருங்கடலும் சுகமாய் கடந்துபோகும் ,வாழ்வும் அர்த்தமுள்ளதாய் மாறிவிடும் .

 மாபெரும் அண்ட பேரண்ட நாயகனின் அருள்இருந்தால் போதும் எதுவும் எளிதாகிவிடும்.எல்லாம் சிவமே எல்லாம் ஈசனே எனும் நிலைக்கு வரும் பொழுது ,ஈசனின் வியத்தகு ஆற்றல் அற்புதமாய் மிளிரும் .இருக்கும் மிக பெரிய வாழ்வியல் பிரச்சினை என்பதெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது.மனம் விரிந்து எம்பெருமானை ஏற்றுக்கொள்ளவேண்டும்.கூனி குறுகி தன்னிச்சையாக எல்லாம் நான் நான் எனும் மனத்தால் என்ன  தான் சாதிக்க முடியும் ...?
எம் குருநாதர் சொல்வது போல "..." நீ கிழித்ததெல்லாம் போதும் ....." என்று தான் தோன்றுகிறது.
 கூனிக் குறுகிநின்ற மனதை விரி ,விரித்து விரித்து ,பரந்து கிடக்கும் பரவெளியை பார் .அதன் மூலகாரணம் யார் என தேட முற்படு , விளைவு இறையே உன்னில் மிளிரும்...இதன் பிறகு இறையே உம்மை ஆலும்.



அவர் ஒரு மகான்.பார்க்க  மிக சாதரண தோற்றம் ,மிக எளிமையான காவி உடை .மேல் சட்டை எதுவும் அணியவில்லை .மாலை நேரம்  மிக அழகான பொழுது .அவரை சந்திந்த இடம் ஒரு  மலையும் மலை சார்ந்த இடமும் ,அப்பொழுதுதான் மழை பெய்து ,தண்ணீர் சிற்று ஓடை வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது.சிறிது மழையும் தூறலும் சாரலுமாக  பெய்கிறது,அங்கே நிலவும் சூழல் அற்புதமாயிருக்கிறது. மழை பெய்ததால் சூழல் மிக மென்மையாக ,தெளிவான காற்றுடன் எந்தவித மாசின்றி மிக ரம்மியமாய் இருக்கிறது. சும்மா அதை ரசிப்பதே தேகத்திற்கும் மனதிற்கும் மிக அழகான தொடர்பை ஏற்படுத்தி ,மனதை  மிக மெல்லியதாய் இதமாய் இருக்கவைக்கிறது.

ஆங்காங்கேயுள்ள புல்வெளியும் தரையும் மழைச்சாரலால் நனைந்தும் மிதந்தும், மழை நின்று அழகாக பெய்து , மழையில் செடியும் பூக்களும் நனைந்த காட்சியும்,ஒரு சின்ன சிற்று ஓடை உருவாகி ,அது அன்னம் போல் மெல்லிய நடை போடும் அழகும், மிதமான அந்த சூழலில் காற்றில் ஈரப்பதம் சேர்ந்து அரவணைத்து ஒரு ஜில்லெனும் தன்மையை உருவாக்கியிருப்பதையும் ,பார்க்கவே மிக அற்புதமாய் இருக்கிறது.


 சூழலும் மிக அமைதியாக மிக அழகாக இருக்கிறது அங்கே வருகிறார் காவி வேட்டி உடுத்தி கொண்டு ,கொஞ்சம் நீண்ட முடி ,கண்கள் மிக அழகான அற்புதமாக கருணை நிரம்பியிருக்கிறது அவரைப் பார்த்து எல்லோரும் சொல்கிறார்கள் இந்த மகான் இங்கு வந்தாலே மழை பொழிகிறது ,இந்த மகான் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். யாமும் சென்று அவரை தரிசிக்க வியல்கிறோம்அவர் அருகே செல்கிறோம், ஒரு ஒரே ஒரு நொடிதான் இருக்கும் .அவருடைய கண்கள் யாவற்றையும் ஈர்க்கிறது .மிக அழகான ஒளி வீசும் கண்கள்,அவரை  வணங்கி அவர் கண்களைப் பார்க்கவே வியல்கிறோம் ,சட்டென விலகிவிட்டார்கள் அரை நொடித்துளிகளுக்குள்  அவர் நகர்ந்து விட்டார்.மகான் சென்ற இடம் நோக்கிபார்க்கிறோம்.கண்களாலேயே ஆசி வழங்கி விடைபெற்றுவிட்டார்கள். மகானின் அரை நொடி பார்வையில் அர்த்தங்கள் கோடி கோடி .அங்கிருந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆசிவழங்கி எங்கோசென்றுவிட்டார்கள்.மிக அற்புதமான நிகழ்வு.



கீழே வரும்  பாடல் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் இயற்றப்பட்டது.மிக அற்புதமான ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் மிக எளிமையான வரியில் யாவருக்கும்  இறை பற்றி சிந்தனையை மிக எளிதில் உணர்த்தவைக்கும் ஒரு அழகான பாடல்.அது எம்மையும் ஈர்த்தது.


எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.

அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தஇடம்
அறிவு முழுமை அதுமுக்தி.
வேதாத்திரி மகரிஷி




எல்லாம் வல்ல தெய்வமது
(click above to listen and download mp3)

இந்த அழகான பாடல் வரிகளுக்கு ,இறை எமக்கு தந்த மெட்டுகளை வைத்து பாடியிருக்கிறோம்.இந்த மெட்டுகளை பாடியபோது ஏற்படும் குறை அது எம்முடையது .தயைகூர்ந்து பொருத்தருள்க.இதில் வரும் நிறை எல்லாம்  வெகு அண்மையில் காலம் சென்ற எமது குருநாதர் திரு.இராமநாதன் அய்யா, அவர்களுக்கு அற்பனிக்கின்றோம்,இறை அவருக்கு மரணமில்லா பெருவாழ்வு அளித்து, இறைஅடியில்  அய்யாவின் ஆன்மா என்றும் அருள்ஒளியுடன் மிளிரட்டும் என இறையை என்றென்றும் பிரார்த்திகின்றோம்.

வாழ்க வளமுடன் .!!!
வாழ்க வளமுடன் .!!!
வாழ்க வளமுடன் .!!!


ஒம் அகத்தீஸ்வராய நமஹா ...!!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்