அதிர்வு அலைகள்





வெறும் வெளி இது எல்லாவற்றுள்ளும் இருக்கிறது.இது இல்லாத இடமே இல்லை.இதனுள் கோடான கோடி இரகசியங்கள் புதைந்துகிடக்கிறது.எங்கெங்கும் விரிந்தும் பரந்தும் ,அடர்ந்தும் ஆழ்ந்தும் கிடக்கிறது இந்த வெறும் வெளி எனும் வெட்டவெளி.ஆழ்ந்து நோக்கி உணர்ந்தவர்க்கே இது  ஒரு அன்பின் பெட்டகமாய் மாறி அன்பால் மிளிர்கிறது.அன்பின் ஆற்றலை டன் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறது,இந்த ஒன்றுமில்லா ஒன்றில் ,வெற்றிடமாகிய வெட்டவெளியில் இருக்கும் தன்மையை,இறைத்தன்மையை உணர உணர உடல் உயிர் மனம் என யாவையும் ஒன்றுபடுத்தி ஒரு பிடிப்பினை ஏற்படுத்தி ,உயிரின் அடர்த்தியை அதிகபடுத்தி எல்லையில்லா பேரின்பத்தில் ஆழ்த்துகிறது.

எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும்  நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரின் திறமையே  இருக்கிறது அவர் வாழ்கையே இருக்கிறது.

 இறை உணர நிறைய வழிகள் இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. உள்ளத்தில் உறைந்து ,ஆழ்ந்து, உணர்ந்து ,அன்பாய் மாறத்தெரிந்தவர்க்கு எதுவும் தேவையில்லை.இறையின் வெகு அருகில் அழைத்துச்சென்றுவிடும்.
இவர்களுக்கு ஸ்லோகங்கள் தேவைஇல்லை,மந்திரங்கள் தேவைஇல்லை எதுவும் தேவைஇல்லை.அன்பு அது ஒன்றே இவர்களை இறையின் அருகில் அழைத்துச்சென்றுவிடும் , அன்பாலே அனைத்தும் கிடைக்க செய்துவிடும்.

பக்திமார்க்கத்தில் இருப்பவருக்கு ஒரு வழி யாதெனில் நல்ல சக்திமிக்க ஸ்லோகங்கள் மந்திரங்கள் சொல்வது.எமது அனுபவத்தில் ஸ்ரீ பைரவர் காயத்ரி, ஸ்ரீ ருத்ரம் ,ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் ,ஸ்ரீ விஸ்ணுசகஸ்ரநாமம், இவை எப்பொழுதெல்லாம் உச்சரிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ,மாயையை குழப்பத்தை வெளியேற்றி ,தெளிவான அலைகளால் நம்மை சூழவைத்து,நம்முள்ளே நம்மனதுள்ளே, எப்பொழுதும் ஒருவித அமைதி அலைகளை ஏற்படுத்தி,நம்மை மேலும் ஒருவித  மிதமான வெப்ப அலைகளால் சூழவைத்து ,விழிப்பு நிலையில் வைத்திருப்பதை உணரலாம்.அந்த அளவிற்கு சக்திமிக்க அதிர்வலைகள் அவை .


ஸ்ரீ பைரவர் காயத்ரி உடலை உயிரை மனதை தகதகவெனும் அதிர்வு அலையில் இருக்கவைக்கும்.குறிப்பாக நாம் இதுவரை அறியாத சூட்சுமசரீரத்தின் ஆற்றலை உணரவைக்கும்.இது ஒரு அற்புதமான சுகம்.இதுவும் ஒரு இறை உணரும் வழியே.கர்மவினை யாவும் இங்கே தகர்க்கபடும் என்பதும் உண்மையே.சுத்தமான சூழலில் ஒரு அக்னி வளர்த்து அதில் நெய் விட்டு ஸ்ரீ பைரவ காயத்திரி மந்திரத்தினை ஒரு நூற்றியெட்டு முறை உச்சரித்து ,பின்பு அதன் அருகில் அமர்ந்து நம்மை நம் உள்ளத்தை உள்நோக்க ,அங்கே நமக்கு ஏற்பட்ட அலைகளை உணர முற்பட ,அது ஒரு அற்புதமான உலகத்திற்கு நம்மை அழைத்துசெல்லும்.உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் அதன் தாக்கம் இருப்பதை உணரலாம்.அமைதியான அற்புதமான நிலைக்கு நம்மை இழுத்துச்செல்லும்.


ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் ,ஸ்ரீ தேவியின் ஆயிரத்தெட்டு நாமங்களை உச்சரித்து அவளின் அனுகிரகத்தை பெறவைக்கும் ஒரு அற்புத ஸ்தோத்ரம்.இங்கேயும் அதிர்வு அலைகள் ,ஒவ்வொரு வார்த்தையையும் சரியான உச்சரிப்பில் உச்சரிக்க ,வார்த்தைகள் உருண்டு ஓடும் பதம் வருகிறது.இதுவே சரஸ்வதி தேவியின் அலைகள் .தேவியின் நாமாக்களை உச்சரிக்க சரஸ்வதி அருள் ஆசி தருகிறாள் முதலில் பிறகு அவ்யாஜ கருணா மூர்த்தியாய் ,நீங்கள் எதிர்பார்க்காத முறையில் ,கருணையை மழையாய் பொழிகிறாள் தாய் .ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மெல்லிய சிறு அதிர்வுதருகிறது.அதனுள் மூழ்கி மெய் மறந்து ,தாயவளை நினைந்து ,அவள் சூட்சுமமாய் இருப்பதை யூகித்து ,உச்சரிக்க ,ஆயிரம் நாமாக்களும் வெகு விரைவில் முடிவது போல் தோன்றும் ,இன்னும் கொஞ்சம் தேவியின் நாமாக்கள் இருந்தால் ,இன்னும் இந்த பிடிப்பு நிலை , இந்த அதிர்வு அலையால் நனைந்த நிலை தொடர்ந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணும் மனநிலை வரும்.இந்த நிலையில் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க .உடம்பில் உயிரில் சூட்சும தேகத்தில் ஏற்பட்ட இந்த ஸ்லோகத்தின் தாக்கம் ,நம்மை தனியாக மற்ற அலைஇயக்கத்திலிருந்து பிரித்து வேறுபடுத்தி காண்பிக்கும்.முன்னர் பார்த்த உலகத்திற்கும் எதிர்கொண்ட நிகழ்வுகளுக்கும்,தற்பொழுது இருக்கும் இந்த உலகத்திற்கும் நடக்கும் நடக்கபோகும் நிகழ்வுகளுக்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதை நீங்களே உணர்ந்துகொள்ளலாம்.எமது அனுபவத்தில் பொறுமையாக ,நிதானமாக ,அன்பு நிறைந்து ,ஒவ்வொரு அட்ச்ரங்களையும் சொல்ல அது ஒன்று மட்டும் போதும்  வேறு எதுவும் தேவையில்லை ,அன்றைய நாளுக்கு.எதையும் எதிர்கொள்ளும் துணிவும் ,துணிவுஎன்ன ,அவளே நடக்கபோகும் நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக மாற்றி உங்களின் கர்மவினை நிகழ்வுகளை  உங்களை பாதிக்காத வண்ணம் நடத்துவாள் என்பதை நீங்களே உணரலாம்.

ஸ்ரீதேவியின் நாமங்களை சொல்ல சொல்ல ,உடலில் ஒரு மெல்லிய வெப்பம் உருவாவதை உணரலாம்.இதற்கு முன் இல்லையே தற்பொழுது எவ்வாறு இந்த வெப்பம்  உருவானது என சிந்திக்க ,ஆயிரம் நாமங்களில் அதன் உள்ளே ஒவ்வொரு அட்சரத்திலும் இருக்கிறது அந்த மெல்லிய வெப்பம்.மேலும் இதற்கே உரித்தான அலைகளை நேரடியாக தேவியின் உலகத்திலிருந்து இழுக்கிறது இங்கே.ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா சத அஸ்டோத்ர நாமாவளி ,எதுவாகினும் மிதமான வெப்பத்தை முதலில் நம்முள் ஏற்படுத்தி ,உடலை உயிரை தூய்மை செய்கிறது முதலில்.பிறகு அதிலே ஆழ்ந்து செல்ல செல்ல சக்தி அலைகளை அதிகம் ஈர்த்து ,நம்மை சுற்றிலும் ஒரு சக்தி அலைகள் நிரம்பிய ஆற்றல் பெட்டகமாய் மாற்றுகிறது.தாயவளின் அருள் ஆசியினை மெல்ல மெல்ல  உணரவைக்கிறது.அழகான சரியான உச்சரிப்பால் சொல்லிமுடித்து ,பிறகு அப்படியே கண்களை மூடி அமைதியில் ஆழ்ந்து கவனிக்க ,அதிர்வு அலைகள் அந்த இடத்தில் சுழன்றுகொண்டும் ,அங்கே ஏற்படுத்திக்கொண்டிருக்கும்   தாக்கத்தையும் உணரலாம்.



ஸ்ரீ விஸ்ணுசகஸ்ரநாமம் சொல்வதும் மிக அற்புதமான அலைகளை உணரவைக்கும்.உடலிலே இருக்கும் நாள்பட்ட வலி ,நோய் இவை இருந்தால் ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லும் போது , ஸ்லோகத்தில் பொதிந்து இருக்கும் அலைகள் ,உடலிலே உள்ளத்திலே இருக்கும் தீய அலைகளை வெளித்தள்ளி ,நோயை சரிசெய்கிறது.எதிர்பாராத விதமாக ஒரு நண்பருக்கு உண்டான ,முதுகின் பின்பகுதியில் ஏற்பட்ட கொடுரமான வலியை விரட்ட ,கடைசிமுயற்சியாக இதை செய்யலாம் என அவரை அருகிலேயே இருக்க வைத்து ,அவரோடு யாமும் சேர்ந்து இந்த ஸ்ரீ விஸ்ணுசகஸ்ரநாமம் சொல்ல ,வலி மெல்ல மெல்ல குறைந்து பறந்தோடியது.மிக அற்புதமான ஸ்லோகம்.





ஸ்ரீருத்ரம் இது ஒரு மகாமந்திரம் .எப்பொழுது சொன்னாலும் மெல்லிய குளிர்காற்று வீசி ,இருக்கும் இடத்தையும் சூழலையும் மென்மையாக்கி ,மனதை இதமாக்கி ,மனதிற்கு உயிருக்கு வலுசேர்க்கிறது.அதுவும் பிரதோஷகாலங்களில் பழமையான சிவஆலயங்களில் சொல்வது ,ருத்ர அலைகளை மிதமாய் மெல்லிய அலையாய் நம்முள் உணரவைக்கும் என்பது யாம் உணர்ந்த உண்மை.ருத்ர அலைகள் சூழ்ந்து சொல்பவரின் சூட்சும சரீரத்தை நன்கு வலுபடுத்தி,கதகதவென ஒரு வெப்பத்தை பரவச்செய்து,தீய அலைகளை ஓட ஓட விரட்டி,இருக்கும் இடத்தையும் தூய்மையாக்குகிறது.அந்த அளவுக்கு இந்த ஸ்லோகங்கள் அதற்குரிய அலைகளை தாங்கியிருக்கிறது.இன்னும் ஆழ்ந்து கொஞ்சம் கவனிக்க ,இந்த
நல்ல தொரு அதிர்வு  அன்றைய நாள் முழுவதும் சுழன்றுகொண்டேஇருக்கும் என்பதும் யாம் உணர்ந்த உண்மை


யாம் உணர்ந்த ஒரு சிறு துளியில் கிடைத்த ஒரு மிகச்சிறிய பங்களிப்பே இக்கட்டுரை.எம்மைவிட இங்கே உணர்ந்தவர் கோடி கோடி மானுடர்காள்.அவர்கள் யாவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணங்கங்கள்!!!,நன்றிகள்.!!சக்திமிக்க அதிர்வு அலைகளின் பெட்டகங்களாய் இருக்கும் அற்புத ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை பாராயணம் செய்து பயன்பெறுவோம்.கிடைத்த ஆற்றல்களை ஆக்கத்துறையிலேயே யாவரும் பயன்படும் வண்ணம் பயன்படுத்துவோம் என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி,வணங்கி வேறு ஒரு கட்டுரையில் ,நிகழ்வில் சந்திக்கிறோம்

வாழ்க வளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்