உள்ளம் ...உணர்வாய்... இறை




எம்முள் கலந்த சிவமே ..!! நின்னையே அனுதினமும் எண்ணி எண்ணி மகிழ்கிறோம் .ஒவ்வொரு நொடியிலும் தெறித்து ஓடும் நின் அன்பெனும் ஈர்ப்பு நிறைந்த அலைகளை  பிடிக்க முயல்கிறோம்  ..இயலவில்லை பலமுறை ...விடை தெரியா கேள்கிகளுக்கெல்லாம் விடை தரும் வேதாந்த சக்தியே .. அன்பெனும்  அலைகளால் அகிலத்தையே ஈர்த்து அரவணைக்கும் ஆதி மூலமே ..!! பிரபஞ்ச பேராற்றல் நாயகனே.!!!  பேரண்டம் முழுவதும்  நினது அருள் தானே ஆட்சிசெய்கிறது .. ஆனந்தக் கூத்தனே.. அன்பின் நாயகனே..!! அன்பாய் உருமாறியவனே ..!!! என்றுமே வற்றாத  கருணை நிறைந்தவனே..!!! எம் நாயகனே ..!!! எம்பெருமானே.!!  நினையே நினைந்து ..நினையே புகழ்ந்து ...நின் திருவடியில் வீழ்ந்து நின்   திருவடி பணிகின்றோம்..நின் கருணையை என்றென்றும் எமக்கு அருள்செய்வீர்களாக..!!!

தாவிக்கொண்டே இருக்கும் மனதிற்கு அதை அறிய முற்பட அடங்கும்.இல்லை எனில் ஒரு  இடத்தில் நிலை கொள்ளாது . எப்படி நமது உடலுக்கு பசி என்ற ஒரு உணர்வு வருகின்ற பொழுது தேவையான உணவுகளை கொடுக்கிறோமோ அது போல மனதிற்கும்  உணவுகள் அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆழ்ந்த இறை சிந்தனை ஒன்று மட்டும் போதும் .ஆனால் இது ஒவ்வொரு நாளைக்கும் தர வேண்டியது அவசியமாகிறது இல்லையெனில் மனம் அது ஒரு இடத்தில் இருக்காது இயங்கிகொண்டே  ஆற்றலைசெலவழித்துக் கொண்டே இருக்கும்.



நம்முள் எழும் உணர்வுகள் உண்மையானது அது இறைநிலையை சம்பந்தப்பட்டது .உணர்வுகள் என்பது அன்பு சம்மந்தபட்டது .அன்பான அலைகள் அது. அன்பின் அலைகள் அதன் மூலம்  இறைநிலை.இறைநிலையே மேலும் மேலும் இறங்கி வந்து ,நமது உள்ளம் எனும் கோவிலில் அலையாக ,அன்பாக உணர்வாக தவழ்கிறது. ஒரு கட்டத்தில் அது இறை,ஆனால் தற்பொழுது அது  அன்பின் அலைகளாக நெஞ்சத்தில் உள்ளத்தில் உணர்வுகளாக வெளிப்படுகிறது. இந்த அன்பின்   அலைகள் ,உணர்வாக பெறப்படும் அலைகள், உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்தவிதத் தீங்கும் தராது ஏனெனில் இது இறை சம்பந்தப்பட்டது. ஆனால் உணர்ச்சிகள் என்பது வேறு .அது தீங்கு தரக்கூடியவை .கோபம் வெறுப்பு,பொறாமை என தொடரும்  உணர்ச்சிவயப்பட்ட அலைகள் எப்பொழுதும்  பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அன்றாட நிகழ்வுகளில் ,வாழ்வின் நியதிகளை  எதார்த்தங்களை ,எதிர்கொள்ளும்போது இந்த உணர்ச்சிவயப்பட்ட அலைகள் நம்மாலோ ,பிறராலோ ,சூழ்நிலையலோ போன்ற ஏதேனும் ஒரு காரணத்தினால் நம்மை நம் நெஞ்சத்தை சூழ்ந்து துவம்சம் செய்துவிடுகிறது.இருக்கும் உன்னதமான இறை ஆற்றலை விரயமாக்கிவிடுகிறது. உணர்ச்சிகள் என்பது வேறு ,உணர்வுகள் என்பது வேறு. நம் உள்ளத்தில் எழும் உணர்வு, அது நம்முடைய இறைஅலை. நம்முள்ளே, நமக்குள் இருக்கும் இறையே ,அலையாக உணர்வாக வெளிவருகிறது.இந்த உள்ளம் தரும் அலைகளை உணர்ந்தால் மட்டும் போதும்.ஆனந்தம் உடனே கவ்விக்கொள்ளும்.இறைபற்றிய ஈர்ப்பு அலைகளை ஈர்க்கும்.பிறகு மனம் கரைந்துவிடும் ,குழப்பம் ,விரையம் யாவும் சென்றுவிடும்.எடுக்கும் முடிவுகள் எல்லாம் மிக துல்லியமாக இருக்கும்.



ஒரு ஜீவசமாதியோ அல்லது ஒரு மிக புராதனமான கோவிலுக்கோ செல்லும் பொழுது ,அங்கே அமர்ந்து மனதால் ஒன்றுக்கும் உதவாக்கரையான தகவல்களை சேகரித்து அறிவை வளர்ப்போம் என்ற குதர்க்கமான எண்ணத்தை தூக்கி எறிந்துவிடவேண்டும்..உண்மையில் அறிவை வளர்க்கும் முயற்சியில் இறங்கி தகவல்களை சேகரிக்க அது அகந்தையை  நான்  எனும் தன்மையை அதிகபடுத்தி அகந்தை கர்வம் என்பவற்றை வளர்த்துவிடுகிறது.இதை சேகரித்ததால் ,இதை கற்றுக்கொண்டாதால் ஒரு இறுமாப்பு ஒரு கர்வம் வந்துவிடுகிறது ..கிடைக்கும் இடத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து, சற்றே அமர்வோம் என அமைதியாக அங்கே அமர்ந்து ,உள்ளம் என்ன இங்கே சொல்கிறது என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.அது தாமாகவே  என்ன பெறவேண்டுமோ அதை அன்பு அலையாக , உணர்வாக மிக அழகாக  உள்ளத்தில் பெறுகிறது. என்ன உணர்வுகள் என்ன அன்பின் அலைகள் பெறப்பட்டது என்பதை நோக்க ,உணர ,முற்பட ,அங்கே என்ன தேவையோ அது கிடைத்துவிடுகிறது.என்ன உணர்த்தப்படவேண்டுமோ அது உள்ளத்தில் உணர்வாக  மிக சரியாக உணர்தப்பட்டுவிடுகிறது.உள்ளம் நிறைந்துவிடுகிறது.இறை சம்மந்தபட்டதால் எல்லாம் மிகச்சரியாக மிக துல்லியமாக இருக்கும்.உள்ளம் என்பது இறை இருக்கும் இடம்.இறை நமக்கு உணர்வாக இறைத்தன்மைகளை உணரவைக்கும் இடம் அது.ஒருவருக்கு அவர் உள்ளத்தில் ஒரு உணர்வு  கிடைத்துவிட்டால்,இறையின் கசிவு அது ,அதை தெளிவாக புரிந்துகொண்டால், அது போதும் .இறையோடு இன்னும் இன்னும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திவிடும்,பிறகு எல்லாம் எளிதாகிவிடும் ,அகன்று படர்ந்த விரிந்த பிரபஞ்சத்தில் எல்லாம்  இறை கருணையாக  தோன்றும்.அன்பின் அலைகள் தவழ்ந்து ஓடும்.

இந்த ஞானம் கிடைத்துவிட்டால்,உணர்ந்துவிட்டால்  அது வாழ்க்கையே புரட்டிப்போட்டுவிடும்.உண்மை மட்டுமே மிளிரும்.பிறகு எடுக்கும் முடிவும் செய்யும் செயலும் மிக சரியாக ,மிகத்துல்லியமாக நம்மை முன்னேற்றத்தை நோக்கியே அழைத்துச்செல்லும் .ஏனெனில் இது   யாருக்கும் தீங்கு இழைக்காது.இதனால் யாவருக்கும் நண்மையே கிட்டும்.எந்தவித குழப்பமோ ,அச்சமோ ,பயமோ எதுவும் இருக்கப்போவதில்லை.இனிவரும் காலமெல்லாம் வெறும் அறிவால் ஒன்றும் செய்ய இயலாது .சேகரித்த dataக்களை வைத்துகொண்டு இறை அறிதல் என்பது இயலாது.ஒவ்வொரு மனித உள்ளமும் மிக உன்னதமானது.ஒவ்வொரு உள்ளமும் இறைஇருக்கும் இடம்.அங்கே இறையை உணர்ந்துவிட்டால் பிறகு எல்லாமே சத்தியலோகமாக மாறிவிடும்.உண்மை எனும் இறையே மிளிரும்..


மனதால் யாவற்றையும் அறியவேண்டும் என்ற சிந்தனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட  இறை மெல்ல மெல்ல உள்ளத்தை கவ்விக்கொள்கிறது.இறை வந்து அமர்ந்துவிட்டால் எந்தவித போட்டி இல்லை ,எந்தவித பாதுகாப்பும் தேவை இல்லை,என்ன தேவையோ அது அங்கே மாபெரும் இறைவெளியால் பெறவைக்கப்படுகிறது.அன்றைய நாள் உண்மையான தேவை கிடைத்தாலே போதும் ,வாழ்வு மிக எளிதாக ,ஆனந்தமாகிவிடும்.எந்தவித இறுக்கமான (stress) அலைகள் இல்லை எனவே உள்ளம் மற்றும் உடல் கருவிகள் சிதையாமல், உடலும் உள்ளமும் தூய்மையாகி அதன் ஆயுட்காலங்களை அதிகரித்துகொள்கிறது .நோயின் தாக்கம் குறைகிறது.அமைதி அலைகள் தவழ்கிறது .அன்பு அலைகள் தாண்டவமாடுகிறது.




கிட்டத்தட்ட ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போல தோற்றம் உடையவர்.மகான்கள் யாரும் தமது பெயரையோ தம்மைபற்றியோ ஒரு சிறு அடையாளத்தையோ போன்ற எதுவும் சொல்வதில்லை.நாம் அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் வருவதில்லை.அவர்கள் எப்பொழுது அழைக்கிறார்களோ அப்பொழுது நாமே  அவர்கள் அருகில் சென்றுவிடுகிறோம், ஒரு ஈர்ப்பு விசை ஒன்று ஈர்ப்பது போல். மேல்சட்டையின்றி ஒரு அற்புதமான தேகம்.ஒளிபொருந்திய கண்கள்.எளிமையே உருவான தோற்றம்.எதைபற்றியும் சட்டை செய்யாத பாவனை.எம்மை அழைக்கிறார்கள்.அருகிலே சென்றதும் தமது கைகளால் எமது நெற்றி மையத்தில் ,தமது மூன்று விரல்களை வைத்து சூலாயுதம் போல விரல்களால் தடவி விட ,ஒரு அற்புத உணர்வு எழுகிறது.
கை பட்டதுமே உயிர் ஜிவ்வென பறக்கிறது ,உடலை விட்டு உயிர் போன்ற அலைகள் ஆனந்தத்தில்  துள்ளிகுதித்து பயணிக்கிறது.இதுவரை உடலோடு ஒட்டிக்கொண்டு இருந்தது தற்பொழுது அலைவடிவில் அப்படியே ஒரு ஈர்ப்பான பயணமாக பறக்கிறது.எதை நோக்கி எங்கு நோக்கி இந்த பயணம் யாம் அறியோம்.ஆனால் ஒரு மகிழ்ச்சி ஒரு ஆனந்தம் ..எதைபற்றியும் சிந்தையில்லா எங்கோ எங்கெங்கோ பரந்து விரிந்த பயணம்....ஒன்றும் இல்லை ...உருவம் இல்லை...ஆசை இல்லை... பாசம் இல்லை.ஓசை இல்லை ஒளி இல்லை இருட்டும் இல்லை எந்த நிறமும் இல்லை ,நிறமில்லா ஒன்று .நினைவில்லா ஒன்று .சிந்தையில்லா ஒன்று ..சிந்தையே இல்லை ஆக அதன் தன்மை பற்றி உரைக்க ,எழுத இயல இல்லை .ஒரு ஆனந்த பயணம் .இது தான் இறையோ ..?.இறை நோக்கிய பயணமா ..!! யாம் அறியோம் .எங்கிருக்கிறோம் ..எதுவும் அறியோம் ...எல்லாம் அந்த மகானின் பிச்சை .அவர் அருளினால் கிடைக்கப்பெற்ற ஒரு உயிர் பற்றிய பயணம்  என்றே உணர்கிறோம் ...மிக அற்புதமாக இருந்தது.


இறை ஆட்சி செய்யும் உள்ளத்தில் என்றும் என்ன நமக்கு அங்கே உணர்வாக உணர்த்தப்படுகிறது என்பதை ஆழ்ந்து கவனிப்போம்.இறைவழி நடப்போம் இருக்கும் எஞ்சிய வாழ்வை ,இறை வழிநடத்தும் வழிசெல்வோம் என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி,வணங்கி வேறு ஒரு நிகழ்வில் கட்டுரையில் சந்திக்கிறோம்
வாழ்கவளமுடன்

ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!






Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்