அன்பின் ஒரு துளி ..!!!



உலகமெல்லாம் நீக்கமற நிறைந்தோனே !!  பூரணத்துவம் நிறைந்த மாபெரும் இறையே !!! .வற்றா பேரொளியே ! கோடான கோடி உயிர்களின் நெஞ்சத்துள் அன்பின் கசிவாய் வெளிப்படும் ,ஈர்ப்பு ஆற்றல் நிறைந்த பெம்மானே ..!!பெருங்கடல்களும் பிரம்மாண்ட மலைகளும் ,ஆர்பரிக்கும் அருவிகளும் பசுஞ்சோலைகளும்  என பரந்து விரிந்தோனே !! பெரும் அதிநுட்பம் நிறைந்தோனே ,பேரண்ட வெளியில் ஆடும் நின் தாண்டவத்தால் பல ஆயிரம் கோடி கோடி மாற்றங்களை உருவாக்கும் நாட்டியக்கூத்தனே !! போற்றுதலுக்குரியோனே !! நின் பொற்பாதம் பணிந்து வீழ்ந்து வணங்குகிறோம் ,நின் திருவருள் என்றும் எம் நெஞ்சத்துள் நிலைக்கச்செய்வாய் ,பெரியோனே !! சான்றோனே !! தன்னிகரில்லா எம் தலைவனே !! ஈசனே !! எம் நேசனே !! எம் நெஞ்சச்தோடு ஒன்றில் ஒன்றாய் உறைந்தோனே !! நின்திருவடி வாழ்க !! நின் திருவடியே என்றும் என்றென்றும்  எம்போன்றோருக்கு சரணாகதி !!


அன்பு எனும் ஒரு சொல் ஏதோ கொஞ்சம் அதன் தாத்பர்யத்தை உணர்த்துகிறது.இது ஒருபுறம் பார்த்தால்அலை ஒரு அற்புதமான அலை ஒவ்வொரு ஜீவனுள்ளும்  சரியாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு அனுவுள்ளும் ஒவ்வொரு ஜடத்திலும் அதன் மூலகாரணமான ஒன்றாய் பின்னிப்பிணைந்துள்ளது. "
"....அன்பெனும் தன்மை உன்னுள் உணர்த்திநேனப்பா.ஆழமாய் சிந்தித்து அதனுள் உட்செல்ல அண்ட சராசரமெல்லாம் அதன் தன்மை உணர்த்தும் அதிசயம் காண்பாய்யப்பா ...பிண்டத்துள் ஒரு துளி அன்பெனும் ஞானம் பிரபஞ்ச ரகசியமெல்லாம் உணர்த்துமப்பா ,,!!  அன்பெனும் ஞானம் உணர
 சிந்தையில் கசிந்திடும் இறை எனும் ஈர்ப்பு ,ஆதலால் செய்வதறியாது கருணை மிகுந்து பூரித்து  வழிந்தோடும் கண்களில் நீர் தாரை தாரையாக "
.."

எல்லாவற்றையும் தூக்கிஎறிந்துவிட்டு அமைதியாய் அமர்ந்து மனதுள் ஆழமாய் சிந்திக்க ,யாவற்றையும் ஈர்க்கும் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்ந்துகொள்கிறது,அமைதி அலைகள் ,இந்த அலைகள் பற்றாக்குறையால் தானே பல்வேறு பிரச்சினை ,இதன் தன்மை உணராமல் தானே கோடான கோடி  சிக்கல்கள்.எதை உணர்ந்தால் எல்லாம் அமைதிகிடைக்கும் என்றால் ,எதை நம்முள் இருத்த பழகிக்கொண்டால் எல்லாவற்றிற்கும்  சுமூக தீர்வு கிடைக்கும்,எதை அறிந்து உணர்ந்துகொண்டால் இறை வழி கிட்டும் என்ற பல் வேறு விடைதெரியா கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் வருவது இந்த அன்பெனும் அலை, அன்பெனும் அலை உணரும் தன்மை,அன்பெனும் அலை உணரும்  ஞானம், அன்பாய் இருப்பது,அன்பாய் தம்மை மாற்றிக்கொள்வது.




ஒரு நாள் முழுவதும் ,எதாவது ஒரு விடுமுறை நாளை எடுத்துக்கொண்டு,பிடிவாதமாக இன்று முழுவதும் நம்முள் அன்பை மட்டும் நிரப்பி அன்பால் இருப்போம் என முடிவுஎடுத்து அமைதியாய் ,ஆழமாய் ,அன்பை அதனின் அற்புதமான ஜீவ அலையை உணரமுற்பட,கொஞ்சம் கொஞ்சமாக அலைகள் ,நெஞ்சத்தை சூழ்ந்துகொள்கிறது.நெஞ்சின் மையத்தில் நெஞ்சுக்குழியின் அருகே வலது புறமாய் ஒரு இன்ச் அளவில் நெல் முனை அளவிலும் மிக  சிறிதாய் இருக்கும் சிதாகோசம் எனும் புள்ளியை ஆக்ரமிப்பு செய்துகொள்கிறது.இங்கு தான் உள்ளம் உறங்குகிறது.இறை பேரமைதியாய் ஆழப்பதிந்துள்ளது. இந்த மையம் நிரப்ப அன்பின் ஒரே ஒரு சிறு துளி போதும் ,இது நிரம்பிவிடும். பிறகு அன்பின் அலைகள் தாண்டவமாடும்.எல்லா சிக்கல்களும் அதனதன் விடுபடும் வழியே பறந்துவிடும்.நடக்கும் எல்லாம் இறை செயல்,இதில் வருத்தப்படவோ ,கோபப்படவோ எதுவும் இல்லை என்பதை உணரும் தன்மையை தந்துவிடும்.ஒரு தகுதியை தந்துவிடும்.ஒரு மென்மையை உள்ளத்துள்ளே உருவாக்கிவிடும்.உள்ளம் ஒரு கோவில் என்பதை உணர்த்திவிடும்.அன்பால் இன்னும்  இன்னும் எதைநோக்கியும் ஆழ சிந்திக்க  சிந்திக்க,ஒவ்வொரு அணுவும் அன்பால் அதன் தன்மையை வாரி வாரி வழங்கும் தன்மையை ,அதாவது இறை ஒன்று கேட்க ,அதற்கு இறையாய் இருக்கும் மற்றொண்டு அன்பால் பூரிப்படைந்து ,அது செய்யும் கைமாறு செய்வதை பார்க்கும் போது ,உள்ளம் நிறைந்துவிடுகிறது .அன்பின் அலைகள் நிறைந்துவிடுகிறது .கருணை சூழ்ந்துகொள்கிறது .முகத்தில் ஒரு தேஜஸ் சூழ்ந்துகொள்கிறது.இப்படி அன்பால் இருக்கும் ஒருவரை யாருக்கும் பிடிக்கும் ,யாரும் எளிதில் அவருக்கு தேவையானதை அவர் கேட்கும் முன்பே வந்து தாமாகசெய்துவிட்டு செல்வார்கள்.

அன்பெனும் இறை ஆற்றல் பெட்டகம் .வெறும் வெளியாய் வெற்று வெளியாய் ஆன்மாவாய் நமது நெஞ்சகத்தே அற்புதமாக அமர்ந்திருக்கிறது.இதை உணரும் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமே.இதை அறியாமல் உணராமல் செய்யும் ஒவ்வொரு செயலும் முழுமைபெறாது போகிறது .இதுவே ஒவ்வொரு உயிரின் மனசாட்சி ,இங்கே எல்லாம் இறையின் ஆட்சியே.எதை பார்த்தாலும் அவை இறையின் பரிணாமவளர்ச்சியில் இருக்கும்  முழுமைநிரம்பிய, அற்புதம் நிரம்பிய இறையின் ஒரு அங்கமே எனும் சிந்தனையை உணரச்செய்யுகிறது.எல்லாம் சம நேர் நோக்கான பார்வையே.இங்கே அழகுநிறைந்தவர் அசிங்கமானவர் ,உயரமானவர்,குட்டையானவர் ,செல்வம் ,கல்வி ,புகழ் போன்ற  இவற்றின் ஏற்றதாழ்வுகள் இல்லமால்  எல்லாம் இறையின் அங்கமே அவை இறைததும்பும் அற்புத உயிரே ,அதனுள் ஈர்க்கும்  ஜீவ அன்பு நிறைந்த அலைகளே என்பதை உணரும் தன்மையை தந்துவிடுகிறது

பார்வைஎல்லாம் உலகளாவிய பார்வை .யாவற்றையும் அன்பால் கருணையால் பார்க்கும் பார்வை .இறை எண்ணி அவனின் அன்பின் தன்மை எண்ணி எண்ணி, வியந்து வியந்து ,ஆழ்ந்துசெல்லும் அதி நுண்ணிய பார்வை.எந்த ஒரு மந்திரமும் எந்த ஒரு தியானமும் ,எந்த ஒரு விளக்க முறையும் தேவைஇல்லை இங்கே.அன்பு அது ஒன்று மட்டும் போதும்.அன்பு தான் நம்மை ஆள்கிறது.அன்பு தான் நம்மை நம் உயிரை உடம்பை இயக்குகிறது.அன்பு தான் இங்கே எல்லா உயிர்களுக்கும் தேவையான உணவை தந்துகொண்டிருக்கிறது.அன்பு தான்  இந்த உலகத்தையே இயக்குகிறது.அன்பு தான் எம்மையும் இந்த இதழ் வாசிக்கும் அன்பு உள்ளங்களையும் அகத்தியம் மூலம் இணைக்கிறது.எல்லாம் அன்பே.அன்பின் அலையே .அன்பின் ஆற்றலே.அன்பின் மூலமாய் இருக்கும் அன்புபசை நிறைந்துள்ள அன்பின் மறுபெயராகிய இறையே.இன்றைய நாள் நாள் அது இனிதாய் முடிய அன்பெனும் அலையை நம் உள்ளே உணரும் தன்மை பெற அது இனிதாய் முடிகிறது.




அவர் ஒரு பெரியவர் .எளிமையே என்றும் நிறைந்தவர்.கருணா ஸாகரம் அன்பும் கருணையும்   நிறைந்தவர்.அவரைக்காண கடல் போல் கூட்டம் அலை மோதியது.யாமோ சிறுவயது .ஏதோ எமது பள்ளிதலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்து ,கூட்டத்தோடு கூட்டமாக எம்மை போன்ற நிறைய மாணவர்கள், பள்ளி சீருடையில் அந்த எளிமையான பெரியவரை தரிசிக்க வரிசையில் நிற்கின்றோம். என்றோ எமது முற்பிறவியில் செய்த புண்ணியம் .ஏனெனில்  கிடைக்கும் நேரமெல்லாம் விளையாட்டு ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனநிலை உள்ள வயது அது .யார் இந்த பெரியவர் அவரை சந்தித்துதான் ஆக வேண்டுமா என்றெல்லாம் தெரியாது .சிறு வயது பள்ளி மாணவர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக எங்களுக்கு முன்னுரிமை கிடைகப்பெற்று  வெகு எளிதில் அவரை காணும் பாக்கியம் கிடைத்தது.எல்லோரும் முன் செல்ல  யாமும் செல்ல ,அந்த பெரியவர் அருகில் சென்றோம்.மெலிந்த தேகம் ,கண்ணாடி அணிந்துகொண்டு ,குத்தவைத்து உட்காந்துகொண்டு எந்த சலனமின்றி ஒரு பார்வை,அந்த பார்வையின் அர்த்தம் என்னவென்று உணரும் தகுதிஇல்லை,அலை உணரும் தன்மையும் இல்லை அப்போது.கைகளில் தீர்த்தம் கிடைக்கப்பெற்று அதை அருந்தி வெளிவந்தோம் ,ஏதோ ஒரு புத்துணர்வு அவ்வளவு தான்.இவை நடந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டது.




காலம் எனும் சக்கரம் சுழல சுழல அன்று அவர் போட்ட விதை வளர தொடங்கியது.அந்த பெரியவர் அன்பு பல முறை கவர்ந்திழுத்தது.அவரை பற்றி நினைக்க சிந்திக்க அதன் நினைவுகள் அதிமாகி அவர் பற்றிய கட்டுரைகள் கிடைக்கபெற்று அதன்  நினைவில் மூழ்கிவிடுவோம்.ஒரு முறை கனவிலே பெரியவர் வருகிறார்.வெண்மை நிற வேஷ்டி அணிந்திருக்கிறார்கள்.ஒரு பேப்பரில் எம்மை ஏதோ ஒன்றை எழுதசொல்கிறார்கள்.அவை என்னவென்று தெரியவில்லை.விரைவில் என்னவென்று தெரியவரும் என்று விட்டுவிட்டோம்.கொஞ்சநாட்கள்  கழித்து மஹா பெரியவர் பற்றி எமது நண்பர் ஒருவர் பகிர்ந்த கட்டுரை ,அதில் அந்த மஹா பெரியவர் ஒருவருக்கு கூறிய  மங்கள அட்சரம் நிறைந்த ஒரு மந்திரம்  அம்பகவ : (அம்பகவஹா என உச்சரிக்கவேண்டும் ) எனும் மந்திரம் பற்றி எழுதியிருந்தார்.அற்புதமான கட்டுரை.உள்ளம் நிறைந்த அன்போடு அம்பகவ: என்று யாமும் உள்ளத்தோடு அசை போட ,சொல்ல சொல்ல அம்பகவ : மந்திரத்தின் சூட்சுமம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மந்திர அலை சூழ்கிறது எம்மை.  ஒரு சிறு துளி ஆற்றல் யாம் உணர்ந்தது ,இவை உள்ளத்தில் ஆழ்ந்து சொல்ல ,நடக்கும் நிகழ்வுகள் முன்னரே அதன் காட்சிகள் ,நிகழ்வுகள், நடக்கும் முன்னரே வந்து ,மனதில் காட்சியாய் விழுகிறது.அதிசயம் என்னவெனில் அப்பொழுதே இது நடந்தேறியது.காட்சியில் எமது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வருவது போலவும் ,வந்து அவர் எமது அருகே இருக்கும் ஐந்து இருக்கை இருக்கும் சோபாவில் முதலாவது இடத்தில் தான் அமர்கிறார் என்பது போல எம் மனதில் ஒரு காட்சி கிடைத்தது. ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும் .இந்த காட்சி நிகழ்வுகள் எமக்கு மறந்துவிட்டது வேறு வேலை காரணமாககஅதே நண்பர் வருகிறார்.யாம் சென்று அவரை அழைத்து பருகுவதற்கு நீர் கொண்டுவர உள்ளே சென்று அவரிடம் நீர் கொடுக்க அவரும் நீர் பருகி நலம் விசாரித்தார்.பிறகு தான் எமக்கு ஞாபகம் வருகிறது.சரியாக யாம் இருக்கும் இருக்கை ,அதன் அருகிலே இருக்கும் ஐந்து  இருக்கையில் முதலாவது இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.அதுவும் எவ்வாறு காட்சியில் வந்ததோ அதே போல அமர்ந்திருக்கிறார்.பெரியவரின் அற்புதத்தை உணர்ந்தோம்.மெய்சிலிர்த்தோம்,இதே போல நிறைய நிகழ்வுகள் நடந்தன இந்த அம்பகவ: செய்தது.இதை இந்த மந்திரத்தை பேப்பரில் எழுது என்பதை தான் பெரியவர் எமக்கு இந்த நிகழ்வுக்கு முன்னரே கனவிலே வந்து சொல்லியிருக்கிறார்கள் எனபதை பிறகு தான் உணர்ந்தோம்.அவரின் அன்பிற்கு முன்னாள் இவை எல்லாம் ஒன்றுமில்லை. இது ஒரு சிறு அனுபவம் யாம் உணர்ந்தது.காரணம் ,அந்த பெரியவர் மேல் இருக்கும் அன்பின் ஆழம் ,இந்த மகாபெரியவரை கனவில் கண்டாலும் அவர்கள் கொடுத்துவைத்தவர்களே.


 அன்பின் அலைகளை நிறைய உள்ளத்தில் பெருக்கி ,நெஞ்சம் நிரப்பி நிறைமனதோடு ஒரு சிறு மணித்துளியாவது வாழ்த்துவோம் இந்த' பிரபஞ்சத்தையும் அதில் வாழும் கோடான கோடி உயிர்களையும் அவை படைத்த இறைவனையும்.மஹாபெரியவரின் அருள் ஆசிகளோடு நிறைந்த  மங்கள அட்சரம் நிறைந்த அம்பகவ:மந்திரமும்,அன்பின் மூலமாய் இருக்கும் இறையும்,  அகத்திய உள்ளங்களுக்கு நிறைவையும் அன்பையும் ஆனந்தத்தையும் அளிக்கட்டும் என அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் .


வாழ்க வளமுடன்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்