அப்பன் வேங்கடேச பெருமாள் கோவில் - திருமுக்கூடல்




உள்ளம்  இறையின்  உறைவிடம் . உள்ளம் எனும் அகம்  எப்பொழுதும் தூய்மையுடன் வைத்திருத்தல் என்பது மிக அவசியமாகிறது.உள்ளம், அகம், நெஞ்சம் எல்லாம் ஒன்றே .எல்லாம் ஒன்றை மட்டுமே வைத்திருக்க தகுதிபெற்றிருக்கிறது.இறை எனும் ஆற்றல் மட்டுமே அகத்தினை ,உள்ளத்தினை உயர்வுறசெய்கிறது. இறை எனும் ஜோதி, இறை எனும் உயிர் ,ஜோதியாய் ,உயிராய், உள்ளே மிளிர்கிறது.உடம்பும் யாம் இல்லை உயிரும் யாம் இல்லை மனமும் யாம் இல்லை ,உண்ட உணவினை செரிக்கும் வேலையும்  யாம் செய்யவில்லை,கோடிக்கணக்கான செல்களை இயக்கி கண்களை இயக்கி எதையும் பார்க்கவைக்கும் வேலையையும் யாம் செய்யவில்லை,செவியை இயக்கி கேட்கவைக்கும் வேலையும் யாம் செய்யவில்லை..இவை யாவும் யார் எம்முள் செய்யவைக்கிறார்கள்..யார் அந்த அற்புத சக்தியின்  மூலகாரணம் ..? என என்னும் போதே இறை சூழ்கிறது.

 எதுவுமே யாம் இல்லை ,எம்மால் எதுவும் ஆனதில்லை இனியும் ஆகபோவதில்லை.எம்முள்ளே இயங்கும் கோடான கோடி செல்களை உருவாக்கியும் ,பஞ்சபூத ஆற்றலை அவைகளுக்கு வழங்கியும் ,காத்தும் அரவணைத்தும்  இயக்கிகொண்டிருக்கும் ஒரு அற்புத பேராற்றலின் ஒரு அங்கமே யாம்.இப்படி ஒரு  நிலைக்கு,யாம் எனும் அகந்தை ஒழிந்து செல்லும் நிலைக்கு வரும்போதெல்லாம்,இறையின் ஒரு அங்கமான கருணை சிக்கென கவ்விக்கொள்கிறது.மிகப்பெரும் ஒரு காந்த ஆற்றல் எனும் ஒரு சூட்சும பந்து .உள்ளம் எங்கும் வியாபித்து ,இறை தன்மையை மிளிரசெய்கிறது.இந்த இறை உணரும் காலமெல்லாம் வாழ்வில் பொன்னான காலம்.சொல்ல இயலா சுகம் தரும் காலம்.இது போன்ற நாட்கள் என்றும் என்றென்றும் நினைத்தாலே நிம்மதி தந்து வாழ்வை செம்மையாக்குகிறது.வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.




ஒரு அதிகாலை பொழுது.ஈதர் அதிகம் நிறைந்த பிரம்ம முகூர்த்தம்.உறக்கமும் விழிப்பும் மாறி மாறி எம்மை இறைஒட்டிய நிலைக்கு அழைத்துச்சென்ற தருணம்.ஒரு அழகான கிராமம் .சந்தன மரங்களும் இன்னும் வேறு நீண்டு நெடிய மரங்களும் சூழ்ந்து ,அடர்ந்த காடு போல ,செழுமைக்கு குறைவில்லா பசுமை  போர்த்திய  ஒரு வனம்.  அங்கே ஒரு அழகான கோவில்.கோவிலின் கருவரையில் கற்சிலை ஒன்று நின்ற கோலத்தில் இருக்கிறது.சக்தி மிகுந்த இடமாக தோன்றுகிறது.நன்கு உற்று கவனிக்க ஒரு சூட்சும உருவம் அந்த சிலையிலிருந்து மெதுவாக அசைவதும் பிறகு சிலை போல் இருப்பதும்  என மாறி மாறி ஒரு காட்சி. சூட்சும உருவம் சிலையை விட்டு விலக ஒரே ஆச்சரியம் சூழ்ந்துகொள்கிறது எம்முள். என்ன ஒரு அற்புதம் உயிர் போன்ற  ஒரு உருவம் இந்த சிலையில் அசைகிறதே  என வியக்க ..சற்றே ஓரிரு நொடிகளில்அந்த அசைந்த உயிர் உருவம் மீண்டும் சிலையிலேயே தம்மை பொருத்திக்கொள்கிறது. எம்மை பிரமிக்கசெய்தது.
இந்த கற்சிலையில் உள்ளே இருக்கும் உயிர் சூட்சும தேகம் அசைவதும் ,சேர்வதும்  என்ற இந்த நிகழ்வு  எம்மை ஒரே அதிர்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது.  சட்டென எழுந்து , இது என்ன கனவா இல்ல உண்மை நிகழ்வாக இல்லை இது போன்ற நிகழ்வு இன்று நிகழபோகிறதா  ? எதுவும் தெரியவில்லை.



ஏதோ எங்கேயோ ஏதோ ஒரு பிறவியிலோ விட்டகுறை தொட்டகுறை ,ஏதோ எமது தேடுதல் ,அதை உணர்த்த ,அதை நிறைவு செய்ய ,இறை தாமாகவே இரங்கி வந்து அருள் புரியும் தருணம் விரைவில் என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் உணர்த்துகிறது என்பதை எம்மால் யூகிக்க முடிகிறது.

காலையிலிருந்து மதியம் வரை பொழுது சென்றுவிட்டது.மூன்று மணிக்கு பிறகே ,நண்பர் ஒருவருக்காக யாமும் சும்மா சென்றுவரலாம் என முடிவுஎடுத்து செல்கிறோம்.சென்னைக்கு அருகே இருக்கும் ஒரு இரண்டாயிரம் வருட பழைமையான பெருமாள் கோவிலை நோக்கி. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று ,பிறகு அங்கிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்திற்கு முன்பே பழைய சீவரம் அருகே அமைந்துள்ளது திருமுக்கூடல்.தென் தமிழகத்தில் பாலாறு ,செய்யாறு ,வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் ஒன்றாக  சங்கமிக்கும் இடம் திருமுக்கூடல்.ஆற்றின் வடகரையில் லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலும் ,தென்கரையில் அப்பன் வேங்கடேச பெருமாள் கோவிலும் மிக அழகாக அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் எப்பொழுதும் நதி முழுவதும் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்ககூடும் என எண்ணத்தோன்றுகிறது.ஆனால் தற்பொழுது  இருக்கும் இந்த கலிகாலத்தில் அவ்வாறு இல்லை.வறட்சியே தென்படுகிறது.



பாலாற்றை கடந்து திருமுக்கூடல் ஊருக்கு முன்னரே வலது புறம் மிக அமைதியாக எந்த ஒரு ஆரவாரமும் அற்று  கரையின் ஓரத்தில் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேச பெருமாள்  கோவில்.சென்னையை போன்று மக்கள் கூட்டமின்றி , very relaxed wave field ,இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று அன்பர்கள் ,ஒரு அர்ச்சகர் மற்றும் எம்முடன் உள்ள எமது நண்பர்கள் அவ்வளவு தான்.இருக்கும் அலை இயக்கம் அமைதியாக இருந்தது .உள்ளே செல்ல பசுமையான புல்வெளியும் ,கல்மண்டபமும் மனதை கவர்ந்தது. இன்னும் அதை கடந்து உட்செல்ல பெருமாள் சன்னதி அருகே செல்ல செல்ல ,அலை இயக்கம் முற்றிலும் மாறுபடுகிறது.கோவிலுக்கு வெளியே ஒரு வித அலை இயக்கம்,கோவில் உள்ளே இருக்கும் புல்வெளியில்  ஒரு வித அலை இயக்கம்.இன்னும் பெருமாள் இருக்கும் மூலஸ்தானத்திற்கு அருகே முற்றிலும் இறை மிளிரும் அலைஇயக்கம். மூலஸ்தானம் நோக்கி செல்லும் போதே ஒரு வித பச்சைகற்பூரம் மற்றும் வேறு ஒரு மூலிகை கலந்த நறுமணம் ஈர்க்கிறது.இன்னும் அங்கே மேலும் அப்படியே உணர முற்பட ,இந்த மூலிகையெல்லாம் தாண்டி ஈர்த்துபிடித்து அரவணைக்கும் பெருமாளின் அற்புத சூட்சும உயிர் இறை அலைகள் நாட்டியமாடுகிறது. எம்முள்ளே பெருமிதம் கொள்கிறோம், பச்சைக்கற்பூரம் போன்ற ஒரு நறுமணமும் ,அடர்வு அதிகம் நிறைந்த காந்த ஆற்றலும் உள்ளத்தை உப்பி பெருக்கச்செய்து ,ஆனந்தமழையில் நனையவைக்கிறது.

பெருமாளின் திவ்ய தரிசனம் ,அற்புதம். அப்படியே திருப்பதி பெருமாள் போல தோற்றம்.சங்கும் சக்கரமும்,பெருமாளுக்கே உரித்தான பிரமாண்ட தோற்றம் ,பார்த்தாலே பிரமிக்க வைக்கிறது. நமது சூட்சுமத்தை, ஆன்மாவை அப்படியே ஈர்க்கிறது ,ஈர்த்து மேலும் மேலும் வலு ஏற்றுகிறது.கனவிலே எமக்கு கிடைத்த அற்புத காட்சி இதுவே என்பதை முற்றிலும் உணர்கிறோம்.கனவில் ஒரு உயிர் உருவம் சிலையிலிருந்து அசைவதை பார்த்தோம்.ஆனால்  இங்கே உயிர்  இருக்கிறது .ஆனால் அசைவதை ஸ்தூல கண்களால் பார்க்கஇயலவில்லை.மனதிற்கு ,உயிருக்கு,சூட்சும தேகத்திற்கு இங்கிருக்கும் இறை உயிர் தன்மை புரிகிறது,உணர்கிறது.உணர்ந்து அப்படியே ஆழ்ந்து செல்கிறது. பெருமாளை விட்டு பிரிய மனமில்லை.மனமெங்கும் ஒரு வித ஆனந்தம் ஈர்ப்பு,அன்பின் நெகிழ்ச்சி பொங்கிவழிகிறது. எம்மையும் இங்கே அழைத்து அன்பால் நெகிழச் செய்த அப்பன்' வெங்கடேசா ,  எப்படி யாம் நன்றி சொல்வது என்பது தெரியாமல் ஆழ்ந்து ,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து,எல்லாம் நீயே , அப்பனே அனைத்தும் நின் ஆட்சிபுலத்திலே , என்றும் நின் அருளாசிகள் வேண்டும்  என சாஷ்டாங்க  நமஸ்காரம் செய்கிறோம்.




கருவறையை சுற்றி ஒரு பத்தடி வரையில் ஆற்றல் விரியம் மிகுந்து அடர்த்தி அதிமாக இறை ததும்பி வழிகிறது..யார் வந்தாலும் அவர்கள் யாவரும் பெருமாளின் அற்புத உயிர் அலைகளை நன்கு ஆழ்ந்து ,நெகிழ்ந்து உணரலாம்.இறையே எம்மை இங்கே அழைத்தது அதுவே எமது சூட்சும தேகத்தை தமது ஆற்றலால்  நன்கு மெருகேற்றியது.வார இறுதி நாட்களை பயனுள்ள முறையில் செலவிடவேண்டும் எனும் அன்பர்களுக்கு ,இந்த இடமும் ,கோவிலும் ஒரு பொன்னான தருணங்களை தரும் என்பது உண்மை


கார்த்திகை மாதத்தில் பெருமாளின் ஜடாமுடியை கழற்றி மூலிகை/எண்ணெய் காப்பு செய்வார்களாம். எனவே அப்பொழுது மட்டும் தான் ஜடாமுடி தரிசனம் பார்க்க இயலுமாம்.நெற்றிக்கண் இருப்பதால் சிவன் அம்சமாகவும் , கையில் பத்மம் ,சங்கு, சக்கரம் ,திருமகள்  இருப்பதால் விஷ்ணு அம்சமாகவும் , பத்மத்தின் மீது பெருமாள் நின்று தரிசனம் தருவதால் பிரம்மா அம்சமாகவும் , ஆக மும்மூர்த்திகளாக இங்கே தரிசனம் தருகிறார் .திருப்தி பெருமாளின் சங்கும் சக்கரமும் இங்கே இருப்பதால் ,இது திருப்திக்கு இணையான தரிசனம் என்கிறார்கள்.திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து அதற்கு நிகரான தரிசனம் பெறலாம். (ஏற்கனவே நிறைய அன்பர்கள் அப்பன் வேங்கடேச பெருமாள் கோவில் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.எனவே முழுமையான தலவரலாறு மற்ற இணையதளத்தில் இருக்கிறது.படித்து பயன்பெறவும் .இங்கே எமது அனுபவத்தை மட்டுமே நிறைய எழுதுகிறோம்)


இறை உயிர் துடிப்புள்ள ஒரு கோவில் .இறை இங்கே இருக்கிறது என்பதை உணரவைக்கிறது.வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் இங்கிருக்கும் அலைஇயக்கம் என்பது தெள்ளத்தெளிவான உண்மை. வாய்ப்பு கிடைத்தால் சென்னைக்கு வரும் அன்பர்கள், இந்த அப்பன் வேங்கடேச பெருமாள் கோவில் சென்று பெருமாளின் அருள் ஆசிபெற்று,அருகிலேயே இருக்கும் லெட்சுமி நரசிம்மரையும் தரிசித்து செல்லுங்கள் என அப்பன் வேங்கடேச பெருமாள்  அருள் ஆசிகளுடன் அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கின்றோம் .

வாழ்கவளமுடன் ..!!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!




Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்