ஸ்ரீ தாயுமானவர் - திருச்சிராப்பள்ளி




மார்கழி  மாதம்  இயற்கையிலேயே அதிக ஈதர் நிறைந்த, சுத்தமான காற்றினை அதிகாலை வேளையில் அள்ளி தூவும் காலம்.திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலை வேளையில் கேட்பதே ஒரு தெய்வீக சுகம்.அதுவும் ஒருவர் கோவிலில் அழகிய மெட்டுகளில் பாடுவதும் அதை கேட்பதும் ஒரு தனி சுகம்.பனி ஒருபுறம் இருந்தாலும் அதிகாலை ஸ்நானம் செய்து பெருமாளையோ ,சிவபெருமானையோ வணங்குவது அதி உன்னதமானது. காவிரியில் நீராடி   நடந்தே  வடகரைக்கு அருகில் உள்ள ஸ்ரீரெங்கநாதரையும் , தென்கரைக்கு அருகே உள்ள மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமிகளையும் தரிசனம் செய்தார்கள் அந்த காலத்தில்.காவிரியில் நீர் வரும் பொழுது குளித்துவிட்டு , குறைந்தபட்சம்
வாகனத்திலாவது சென்று பெருமானை வணங்க வேண்டும் இக்காலத்தில்.









சிராப்பள்ளியின் பரபரப்பான  பகுதியாகிய மெயின்கார்டு கேட் தாண்டி உள் செல்ல, மலைக்கோட்டை அடிவாரத்தில்   மாணிக்கவிநாயகர்  சன்னதி அற்புதமாக இருக்கிறது .ஒரு ஜீவ சமாதியிலிருந்து வரும் ஆற்றல் போல ,இறை அலைகள் சன்னதி முழுவதும் சூழ்ந்து தெய்வீக மனம் கமழ்கிறது.தொழில் ,பணம் ,வேலை சம்பந்தபட்ட பல பிரச்சனைகளை கோரிக்கைகளாக இங்கே வைக்கிறார்கள்.மாணிக்கவிநாயகரை வணங்கி மேலே படிகள் கடந்து செல்ல ,கிட்டதட்ட மலைகோட்டையின் மையபகுதி அங்கே இடது புறம் ,தாயுமானவர் சுவாமி சன்னதி அழைத்துச்செல்கிறது.வலது புறம் உச்சிபிள்ளையார் கோவிலை நோக்கி அலைத்துச்செல்கிறது. இடது புறம் திரும்பி செல்ல தாயுமானவர் சன்னதி வருகிறது.தென்நாடுடைய சிவனே போற்றி ..!!!என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!!! தாயுமானவர்  மிகபெரிய சிவன் , முதல் பார்வையிலேயே எம்மையும் ஈர்த்தவர் .பிரமாண்டமான சிவன் ,எல்லாம் எமது ஆட்சியே  சர்வமும் எமது ஒரு துளி பார்வையில் நுனி அளவும் எம்மை விட்டு விலகுவதில்லை  என்பது  போல எம்பெருமான் மிக அற்புதமாக காட்சிதருகிறார்.எத்தனை முறை திருச்சிராப்பள்ளி வந்தாலும் ,சூட்சுமமாக அழைத்து அருள் ஆசி வழங்குகிறார். கிட்டத்தட்ட  ஆறு அடி உயரம் ,பிரம்மாண்டமான சிவன் .யாம் சென்ற போது ஒரு வயது முதிர்ந்த பெரியவர், சிவனடியார் தோற்றம் ,மிக அழகாக திருவெம்பாவை பாடல் பாடினார் .அழகான தமிழ் வரிகள் அதோடு அற்புதமான மெட்டு ,சற்றே கண் மூடி கேட்க ,மிக அற்புதமாக இருந்தது.

 சுகபிரசவம் ,குழந்தை வரம் போன்ற  வேண்டுதல் செய்பவர்கள் ,வேண்டுதல்நிறைவேறிய உடன்  சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து ,வாழைத்தார் படைத்து பிரசாதமாக யாவருக்கும் வழங்குகிறார்கள்.இது இங்கு மட்டுமே நிறைய அன்பர்களுக்கு சாத்தியமாகிறது.அந்த அளவுக்கு அருளாசிகளை வாரி வாரி வழங்குகிறார் இங்குள்ள தாயுமானவ பெருமான்.சிவனை வணங்கி அவன் தாள் பணிந்து நந்திக்கு அருகிலேயே அமர்ந்தோம். ஸ்ரீ ருத்ரம் சொல்ல ஆரம்பித்தோம் ,ருத்ர அலைகள் ஆக்கிரமிக்க தொடங்கியது.வார்த்தைகள் கணீர் கணீர் என விழுந்தது.எப்பொழுதெல்லாம் வார்த்தைகள்' அட்சர சுத்தமாக கணீர்  கணீர் என விழுகிறதோ அப்பொழுதெல்லாம் இறை சக்தி நம்முள் மிளிர்கிறது என்பதே உண்மை. சூட்சும இறைஅலைகள் தேகமெங்கும் ஆக்கிரமிக்க தொடங்கியது.மனதும் மெல்லிய அலை நீளம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.இந்த மெல்லிய அலைநீளம்  மனதை இதமாக கவ்விகொண்டவுடன்,ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, ஒரு ஈர்ப்பு ,ஒரு அரவணைப்பு ,இன்னும் சொல்ல இயலாத ஒரு ஆற்றல் பிடிப்பு, இவற்றால் மனம்  சூழ்ந்துகொள்கிறது.இப்படியே இருத்தல் என்பது இறை தந்த சுகம்.எந்த ஆற்றல் இழப்பும் இல்லை ,எதுவும் செய்ய தேவையில்லை,ஒன்றுமில்லா ஒன்று  அது செய்யும் ஒரு அற்புதத்தை  அப்படியே  கவனித்தல்  என்பது  இருக்கும் நொடிபொழுதினை அர்த்தமுள்ளதாக்குகிறது. மாசடைந்த மனதினை எதுவும் அற்றதாய் மாற்றி, எந்தவித கோரிக்கை ,கமிட்மென்ட் என எதுவும் இல்லாமல்  ஆக்கி. அவை யாவற்றையும் சற்றே தூரத்தில்  விளக்கி வைத்து ,தூய இறை அலைகள்  அதன் மூலத்தை தெள்ளத்தெளிந்த நீர் போல் அலைகள் அற்று, அமைதியாய் உறைந்துகிடக்கும் அற்புததத்தை உணரவைக்கிறது ,இங்கே  தவழும் தாயுமானவசுவாமியின் அலைகள் .இப்படி ஒரு நிறைவான நிலைக்கு மனம் வந்தவுடன்  பார்க்கும் கேட்கும் என எதுவும் ஆனந்தமாகிறது .இறை தந்த ஒவ்வொரு நொடியும் எத்தனை அர்த்தம் நிறைந்தது .ஒவ்வொரு நொடியும்  நிறைவான நெஞ்சம் நிறைந்த மனதால் அனுபவித்தல் என்பது  வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி இன்னும் இன்னும் மேம்பட்ட  நிலைக்கு இழுத்துச்செல்கிறது. தெள்ளிய மனம்  அதில் இறை ஆற்றல் கலந்ததால் ஒரு திடம் நிறைந்த ஒரு அரவணைப்பு ,முன்பை விட சற்றே வலுப்பெற்று யாவற்றையும் ஈர்க்கும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக அது தாமே பெறுகிறது.கண்கள் கருணை நோக்கி செல்லும் தன்மை பெறுகிறது.



இந்த' நிலையில் யாரவது ஒருவர் வந்து அவர் தாமே விரும்பி பேசுவது என்பது ,பேசுபவர் இறைநிலையில் இன்னும் உயர்ந்துள்ளார் என்பதையே உணர்த்துகிறது.அவர் ஒரு தேஜஸ் மிக்கவர் ,உடலெங்கும் ஒளிமின்னும் தன்மை நிறைந்தவர் ,அவர் வந்து வாய் திறந்து தான் பேசவேண்டும் எனும் அவசியமில்லை . இறை அலைகள் ததும்பி வழிகிறது.  இங்கு வா என அழைத்தல் என்பது போல உணர்கிறோம்.மிக அழகாக மலையில் குடைந்து செதுக்கப்பட்ட ஒரு இடம் ,இங்கு தான் எங்கோ இருக்கிறது .அதில் இந்த தேஜானுபாவமான மகான்.புன்னகையும் அன்பும் நிறைந்த முகம்..அவர் அருகிலேயே அமர்கிறோம் .அப்படியே எமது கடந்த கால நிகழ்வுகள் பற்றி எமக்கு ஞாபகம் செய்கிறார்.அவர் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை,எமது கடந்த கால வாழ்வில் எங்கெங்கே எமக்கு இறை உதவியது என்பதை ,மிக தத்ரூபமாக காட்சிமூலம் விளக்குகிறார்.அங்கே எமது அறிவு செயல்பட்ட விதம் ,அதற்கும் மேலே இறை அலைகள் அந்த நிகழ்வுகளை தாமே உள்வாங்கி,எப்படி எமக்கு உதவிசெய்தது என்பதை ,எமக்கு உணர்த்துகிறார்.  எல்லாம் ஓரிரு நொடியில் ,எங்கோ பொதிந்து கிடந்த அலைகளை விரித்துகாண்பிக்கிறார்.அதை எல்லாம் இதுநாள் வரை எமது அறிவு மூலமே அது நிகழ்ந்தது என்ற கர்வத்தை உடைத்தெரிகிறார்.இறை அலைகள்  உதவி இல்லை எனில் எமது கடந்த கால நிகழ்வுகளில் எப்படி யாம் சிக்கி தவித்திருப்போம் என்பதை உணர்கிறோம்.இறைஅலைகள் ததும்பிய முகத்தில் ஒரு புன்னகை ,தற்பொழுது இது போதும் செல் , என்பது போல  உணர்வு பெறப்பட்டு ,அங்கிருந்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பினோம்.


மெதுவாக  இறங்கி மட்டுவார் குழலம்மை தாயார் சன்னதி சென்று வணங்கி ,நடந்த நிகழ்வுகளை  அசைபோட்டு மேலும் கீழே இறங்க ,ஒரு அன்பர் வாழைத்தாரிலிருந்து வாழைப்பழங்கள் கொஞ்சம் பிய்த்து கொடுத்தார்,வாங்கி கொண்டு கீழே இறங்கிவந்துவிட்டோம்.


தாயுமானவர் அருள் ஆசிகளோடு ,அகத்திய உள்ளங்கள் அனைவருக்கும்   வரும் புத்தாண்டு அருள் அலைகளை அள்ளி வீசும் ஆண்டாக ,நிறை செல்வம் ,நீண்ட ஆயுள் ,தந்து எல்லா வளங்களையும் வழங்கும் ஆண்டாக இருக்க வேண்டும் என எம்பெருமானை வணங்கி , வாழ்த்தி ,புத்தாண்டு ,மற்றும் பொங்கல்  வாழ்த்துகளை  தெரிவித்துக்கொண்டு , அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில்  விரைவில் சந்திக்கின்றோம்.

வாழ்க வளமுடன் .

ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்