திரு அண்ணாமலை சித்தர் ...!!!




பிரபஞ்ச நாயகனே ..!!  பேரானந்தம் நிறைந்தோனே..!! பிறப்பறுக்கும் பிஞ்ஞகனே ...!! அன்பின் அலைகளால் அரவணைக்கும் ஆனந்த கூத்தனே ..!! அண்ட கோடி சராசரங்களை  நொடிப்பொழுதில்  அரவணைத்து ,அருள் ஆட்சிசெய்வோனே ..!!ஆனந்தம் நிறைந்த காரிருளே..!! வெட்டவெளியே.!!! பேராற்றலே ...!!! பேரின்பமே ..!! தென்பாண்டி நாட்டானே..!! அன்பிற்கு அடியோனே ..!! தமை நாடும் யாவரையும் அன்பால் அரவணைத்து ,தீப்பிழம்பாகிய தமது  சூட்சும பார்வையால்,கர்மவினை அழித்து , முக்தி அளிப்பவனே...!!  மாசற்றோனே ..!! மஹா ருத்ரனே ...!!! மொழியற்றவனே..!!! எம் வேந்தனே ..!! எம் பெருமானே ..!! நம் பெருமானே ..!!! ஈசனே! நேசனே ..!!! . ஈசனுக்கு ஈசனே ..!!சித்தனுக்கு சித்தனே..!!  யாவற்றிகும் ஆதியாகவும் முடிவாகவும்  இருக்கும் ஆதி அந்தம் அற்றவனே ..!!  வற்றாத கருணை கடலே..!!! முடிவில்லாமல் ,அழிவில்லாமல் ,எப்பொழுதும் ஆற்றல்  பெருக்கம் உடையோனே ..!!! பெரியோனே ..!!! சான்றோனே ...!! நின்னை முழுவதும் உணர்தல் கடினம், உமை   சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை, நின்னை எம் உள்ளத்தால் நினைந்து...நினைந்து......ஆழ்ந்து ,,..ஆழ்ந்து .. ,அன்பால் கசிந்து,அன்பால் நிறைந்து,  அன்பால் உருகி, நின் தாள் பணிந்து வணங்கி , நிற்கும் எம்மையையும் ,எமைபோன்ற அகத்திய உள்ளங்களையும் , நின்  ஆனந்தத்திருவருளால் ஆட்கொண்டு, என்றும் அருள் ஆசி வழங்குங்கள்  ஐயனே ..!! சர்வேஸ்வரனே ...!! மெய்பொருளோனே.!!.அன்பருக்கு அன்பனே  ..!! ஆதி ஞானியே ..!! ஆதியின் மூலமே ..!! பேரொளியே ..!! ஜோதியே .!!ஜோதியில் ஜோதியே..!!!


கோயில் கருவறை ஆற்றல்  என்பது மகத்துவம் வாய்ந்தது .அதுவும் பிரதோஷகாலங்களில் சிவனின் கருவறை  ஆற்றல், மிக அதீத சக்திமிகுந்து தெய்வாம்சம் நிறைந்து,  அமைதியையும் ,ஒரு வித சக்தியையும், வருவோர் செல்வோர் என அனைவருக்கும் வாரிவழங்கிக்கொண்டிருக்கிறது.இது போன்ற காலங்களில்  அங்கே வீசும் மெல்லிய காற்று சிவனின் தார்மீக அலைகளாக அங்கிருக்கும் அனைவரையும் உரசிச்சென்று ,சிவ தத்துவங்களை உணர வழிவகை செய்கிறது.இறைநிலை பற்றி நிறைய புரிய இயலா தத்துவங்களையெல்லாம் புரியவைக்கிறது ,உணரவைக்கிறது.




பொதுவாக எந்த கோயில் கருவறை சென்றாலும் ,அங்கே நிரம்பியுள்ள ஆற்றலை  நாம் உணர்ந்துகொள்ளும் அளவுக்கு ,நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ளுதல் என்பது மிக அவசியமாகிறது. அங்குள்ள அலைகள் நமது சூட்சும சரீரத்துடன் மிக நெருங்கிய தொடர்புஉடையது .அன்றாட  வாழ்வியல் நிகழ்வில், இருக்கும் கொஞ்சநெஞ்ச புண்ணிய அலைகளை இழந்து  (சாதாரண வாக்குவாதமே  நமது மிகப்பெரும் அளவிற்கு நமது சக்தியை,புண்ணியத்தை  வீனடித்துவிடும் ) இப்படி இருக்கும்  சக்தியைஎல்லாம் இழந்த ஆன்மாவிற்கு ,அதுவும் பிரதோஷம் போன்ற தருணத்தில் ,  பிரதோஷ காலத்தில், அதுவும்  மிக புராதனமான பழமையான சிவனின் கருவறை இடத்தில் இருப்பது ,அது அந்த ஆன்மாவிற்கு  சொர்க்கத்தில் இருப்பது போன்று மிக  பேரானந்த ஆற்றலை வழங்கி, அந்த ஆன்மாவை பேரானந்தம் கொள்ளச்செய்கிறது. கருவறையிலிருந்து ஆற்றலை உறிஞ்சி உப்பி பெருத்து முன்னைவிட நன்கு வலுப்பெறுகிறது.சூட்சும சரீரத்தில் ஆங்காங்கே உள்ள வெற்றிடம்  இறை அலைகளால் நிரப்பபட்டு ஒரு அற்புதமான புதுத்தெம்பும் உற்சாகமும் பெறுகிறது.ஏதோ இழந்ததை பெற்றது போன்ற ஒரு புத்துணர்ச்சி பெற்று , ஆன்மாவிற்கு  ஒரு சிறு குழந்தைபோல துள்ளிக்குதிக்கும் சக்தியை தருகிறது.இதுவே மீண்டும் மீண்டும் தொடர ,ஆன்மா அங்கிருக்கும் ,அங்கே கொட்டிகிடக்கும் ,புதைந்துகிடக்கும் இரகசியங்களை எல்லாம் மெல்ல மெல்ல உணரமுற்படுகிறது.எங்கேனும் உள்ள மிக பழமையான சிவஆலயங்களுக்கு பிரதோஷகாலங்களில் சென்று உள்ளம் உணரும் சக்தியினை வேறுபடுத்தி அங்கிருக்கும் ஆற்றலின் மகத்துவத்தை உணரமுற்படுங்கள்.கொஞ்சம் அமைதியோடு தற்பொழுது நம் உள்ளத்திற்கு உருவாகும் வேறுபாடு என்ன எங்கிருந்தது இந்த அலை வந்தது ..? எம்மை எப்படி இந்த சாந்த அலைகள் சூழ்ந்தது ...?என சற்றே சிந்திக்க ,அலை உணரும் தகுதி கொஞ்சம் கொஞ்சமாக வந்துவிடும் விரைவில்.






ஒரு முறை அண்ணாமலையை பற்றி  நினைக்க ,அது அப்படியே எம்மை அங்குகொண்டு சேர்த்துவிட்டது.மலையும் ,மலையின் அழகும் ஒரு புறம் ஈர்க்க,ஈசனின் அன்பெனும் அலைகள் சூழ்ந்துகொண்டுவிட்டது.நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் அல்லவா திருவண்ணாமலை.சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும்   கிட்டதட்ட 180 km   தூரம் , குறைந்தது  மூன்று மணி நேரமாகிறது  அங்கே செல்ல.ஆன்மீக ஆர்வம் உள்ள  அன்பர்களுக்கு திருவண்ணாமலை ஒரு அற்புதமான சொர்க்கம்.ஆனால் இங்கிருந்து கிளம்பி அங்கே செல்ல ,இடையே உண்டாகும் டிராபிக்,பல நிகழ்வுகள் ,பல வேறுபட்டமனிதர்கள் ,சந்திப்புகள்,உரையாடல்கள் என ,இவற்றை நினைக்கும் போதே ,கொஞ்சம் முடிவை பின்னோக்கி வைக்கிறதல்லவா .? .அண்ணாமலையாரே ..!! இதற்கு ஒரு எளிமையான தீர்வு தாருங்கள் ,எந்த இழப்பும் மின்றி உமை தரிசிக்க வழி வகை செய் அய்யனே ... .. என்ற வேண்டுகோளுக்கு விடைதருகிறார் அண்ணாமலையார்  இந்த கட்டுரை வழியாக.





முன்னொரு காலத்தில்  நாம் தற்பொழுது வலம் வரும் இந்த கிரிவலப்பாதை அடர்ந்த காடாக மிக நீண்டதூரம்சென்று  வலம் வரவேண்டுமாம்.ஆங்காங்கே எத்தனையோ மகான்கள்  தம் நிலை மறந்து இறையோடு கலந்து ஸ்தூல வடிவிலே காட்சிதருவார்களாம்.கிரிவலம் வரும் அன்பர்களின் பல பிரச்சனைகள் ஆங்காங்கே உள்ள மகான்களால் சரிசெய்யப்பட்டு ,அன்பர்கள் வீடுதிரும்புவார்களாம்.ஆனால் இன்றைய கிரிவலபாதை என்பது வெறும் பதினான்குகிலோமீட்டரே.,மகான்கள் சூட்சும வடிவில் வலம் வருகிறார்கள்..ஸ்தூல வடிவத்தில் உள்ள மகான்கள் இந்த  கலிகாலத்தில் வாழும் அன்பர்களுக்கு எளிதில் புலப்படுவதில்லையாம்.திருவண்ணாமலை இறைஉணர்வு பெற மிக அற்புதமான ஸ்தலம்,சூட்சும வடிவில் மகான்கள்,மலையை சுற்றிலும் ஜீவசமாதிகள். ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியிருக்கிறோம்.இருப்பினும் நிறைய நிகழ்வுகள் இன்னும் நடைபெறஇருக்கிறது.திருவண்ணாமலையையும் சதுரகிரியையும் என்றுமே நிறைய மிக அதீத ஆற்றல்களை உள்ளடக்கி அன்பர்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கிறது.



அண்ணாமலையாரின் அற்புத ஆற்றல் ,இமை மூடி சற்றே  உள் ஆழ்ந்து செல்ல ,அன்பின் அலைகளால் அப்படியே அண்ணாமலையார் கட்டிபோட்டுவிடுகிறார்.இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் ,அண்ணாமலையார் பற்றி நினைத்தவுடனேயே , மனதின் அலைசுழலை  குறைத்து , ஈசன்  தமது  பாசம் நிறைந்த அன்பு அலைகளால் கவர்ந்திழுக்கிறார். விஸ்ரூபமெடுக்கும் அன்பெனும் மாபெரும் பேராற்றல் பெட்டகம் ,மலையை மையமாக வைத்து ,அலைவடிவில் ஈசனாக ,ஈசனின் அன்பு அலையாக ஒரு hollow வெற்றிடவடிவில்,சூழ்ந்து,கருணையோடு அன்பெனும் தெய்வீக அலைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருக்கிறது.இளம் காலைப்பொழுதில் அண்ணாமலையும் அதன் எழில்மிகு  பசுமையான அழகும்  ,அங்கே சுழலும் மெல்லிய காற்றும் ,பணி போர்த்திய மலை போல் சூழ்ந்துள்ள அமைதியும் ,யாவரையும்  உடனே கவர்ந்திழுக்கிறது.கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணாமலைசென்று தரிசனம் செய்து  ,அண்ணாமலையார் தரும் அன்பு அலைகளை ஈர்த்து கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பலாம்.

 



ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலத்தில் ஒரு பெரியவரை சந்திக்கும் சந்தர்ப்பம் உருவானது .கொஞ்சம் அன்பர்கள் அந்த பெரியவரைசுற்றி சூழ்ந்த வண்ணம் நின்றுகொண்டு,எப்பொழுதாவதுஅவர் பார்வை தம்மீது படாதா என்ற ஏக்கத்துடன் இருந்தனர்.அந்த பெரியவர்  ஒரு மிக சாதாரண மனித தோற்றத்துடன் ,மன பிரம்மை பிடித்தவர் போல ,இங்கிருந்து கொஞ்சதூரம் நடந்து சென்று ஓரிடத்தில் நின்றுகொண்டு ,புரியாத சங்கேத மொழியில் ஏதோ கத்துகிறார்.பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து ஏதோ சொல்கிறார். இதை தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்துகொண்டேயிருக்கிறார்.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அங்கு நிற்கும் ஆட்டோவில்ஏறிக்கொண்டு திருவண்ணாமலையை எதிர்திசையில் கிரிவலம் வருகிறார் (opp. Direction from  our usual Girivalam ).



அய்யா யார் ? ஏன் இவ்வளவு அன்பர்கள் இங்கே என விசாரிக்க "....ஐயா தான் மூக்குபொடி சித்தர்.சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய அண்ணாமலையார் அருள்ஆசி பெற்ற,தற்பொழுது வாழும் மனிதவடிவில் உள்ள சித்தர். எமக்கு ஒருமுறை தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார்கள்......"
சரி, "ஏன் அய்யா எதிர்திசையில் கிரிவலம் வருகிறார்கள் என கேட்க, "...அதற்கு  எத்தனையோ மகான்கள்  இங்கே  சூட்சும வடிவில் திருவண்ணாமலையை கிரிவலம் வருகிறார்கள்.அய்யாஅவர்கள் எதிர்திசையில் செல்வதால்  ,வலம் வரும் மகான்கள் அனைவருக்கும் அய்யாவின் தரிசனம் முழுமையாக அவர்களுக்கு கிட்டும் அதனால் தான் அய்யா எதிர்திசையில் வலம் வருகிறார்கள் என்றார். வாழ்வின் விரக்திக்கே போன அன்பர் ஒருவர் ,அருணாசலம் தரிசனம் முடித்து திரும்பும் போது,அருணாசலேஸ்வரர் அருளால்,  அருகே அய்யாவை சந்திக்க நேர்ந்து ,அய்யாவும்  அவர்  வாழ்வின் துயரங்களை விரட்டியடித்து ,மறுபிறப்பெடுப்பதுபோல  அவர் தம் வாழ்வில் இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழிவகை செய்தார்கள்.அவரும் இன்று மீண்டு வந்து ஒவ்வொரு முறை அமாவாசையில் கிரிவலத்தில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கிகொண்டிருக்கிறார்கள் ....."என்று நிறைய  செவி வழி செய்திகள் சொன்னார்கள்.


யாமும் இவை யாவற்றையும் அசைபோட்டுக்கொண்டு கிரிவலம் வர,அய்யாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது.அப்பொழுதும்அவர் முன்னர் செய்தது போலவே நடப்பதும் ,சங்கேத வார்த்தைகள் கொண்டு ஏதோ சொல்லிக்கொண்டு முன்னும் பின்னும் செல்கிறார்கள்.கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்கிறார் .பிறகு கையை கீழே வைத்தும் ..பொறுமையாக இரு என்பது போலவும் ஆசிர்வாதம்  செய்தும், இங்கும் அங்கும் நடக்கிறார்கள்.வெறும் ஸ்தூல கண்களால் பார்ப்பதற்கு  ஒரு மிக சாதாரண மனித வடிவமே.கிட்டத்தட்ட ஒரு பரதேசி போல ,சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போலவேயிருந்தது .அழுக்கான வேஷ்டியும் ,கொஞ்சம் தாடியும்  ,கையில் ஒரு துண்டும் ,எதை பற்றிய சிந்தனை என்று யாராலும் கணிக்க இயலாதவராய்,மிக சாதரண மனிதவடிவில் இங்கும் அங்கும் வருகிறார்கள் .

ஆனால் அங்கே யாம் உணர்ந்த அலைகளோ  வேறு...சுத்தமாக எம் மனநிலையே மாற்றிவிட்டது .ஒரு மிகப்பெரிய அன்பின் வடிவம் .மனித வடிவில்அன்பின் அலைகள்  ஏதோ சொல்லுக்கு கட்டுப்பட்டு அதன் தன்மை வெளித்தெரியாமல் உள்ளே அடங்கிக்கிடக்கிறது. அந்த அன்பு அலைகள் அவரிடமிருந்து வெளிவந்தால் தமை பார்க்கும் ஓராயிரம் அன்பருக்கும் மனதினை ஆழ்நிலைக்கு அழைத்துச்சென்றுவிடும் .அப்படிப்பட்ட தன்மையுடைய அன்பின் அலைகள் உள்ளே அடங்கிக்கிடக்கிறது . எப்படி இப்படி ஒரு தன்மை இந்த பெரியவருக்கு ..!! ஸ்தூலகண்களுக்கு எதுவுமே புலப்படவில்லையே ..!! ? என்ற சிந்தனையில் வீடுவந்து சேர்ந்துவிட்டோம்.

எப்பொழுது திருவண்ணாமலை சென்றுவந்தாலும்  எமது உள்ளம் கொஞ்சம் இறைதன்மையோடு நீண்டநேரம்  இறைஅலைகளோடு இருக்கும்.இம்முறை இந்த பெரியவரின் தரிசனம் வேறு.அலைகள் நிரம்பிவழிந்தவண்ணம் இருந்தது.இடையில் எத்தனையோ நிகழ்வுகள் ,எந்த நிகழ்வும் எமது உள்ளத்தை சட்டை செய்யமுடியவில்லை .இழப்பே இல்லை .எல்லாம் அலை பெருக்கமாகவேயிருந்தது.ஆற்றல் பெருக்கமாகவேயிருந்தது.ஆதலால் தற்பொழுது அன்பின் அலைகளும் ,இறைஅலைகளும் உள்ளம் முழுவதும் நிரம்பிவழிந்தது.ஆனால் இந்த பெரியவரின் சிந்தனை மட்டும் எம்மை விட்டு அகலவேவில்லை.என்னையா இவ்வளவு அன்பின் சக்தி மிகுந்து இருக்கிறீர்கள் ...? இது இறையின் தன்மை அல்லவா ...அதீத அன்புள்ளம் கொண்டு கருணை மிகுந்தால் மட்டுமே தானே  இது போன்ற தருணம் வரும்... இறைஅலைகள் மிகுதியால் மட்டுமே தானே இந்த நிலைக்கு வரமுடியும் ..அன்போடு  கருணையும் சேர்ந்துள்ளதே.....ஏன் இந்த  ஸ்தூல கண்களுக்கு மட்டுப்படவில்லை.. என ஆழ்ந்து....ஆழ்ந்து  அவரை பற்றி  சிந்திக்க சிந்திக்க ....யாமும் கொஞ்சம் கொஞ்சமாக அன்பின் அலைகளால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல ...யாம் எம்மை மறந்தோம் ...எமது சூட்சும  தேகம் மட்டும் அது பயணம் செய்கிறது .யாரோ ஒரு மாபெரும் சக்திஒன்று வழிநடத்தி செல்கிறது.ஸ்தூல கண்களால் சந்தித்த அந்த பெரியவரே எம்மை ..எம் சூட்சும தேகத்தை அழைக்கிறார்.எமது சூட்சும தேகத்தோடு கிரிவலம் வர வைக்கிறார்.அருணாசலேஸ்வரர் தரிசனம் பெறவைத்து ,ஏதோ நிறைய சொல்கிறார் .அவர் சொல்லும் யாவற்றையும் புரிந்துகொள்ள பக்குவம் எமக்கு இன்னும் வரவில்லை .ஆனால் ஒரு மிகப்பெரும் சக்தியின் பிடியில் ஐயா போன்ற மகான்கள் தத்தம் பணி செய்கிறார்கள் . பிறகு மீண்டும் எம்மை திரும்பவைக்கிறார்.

இந்த நிகழ்வில் எம் உள்ளம்  உணர்ந்தது யாதெனில்,  இறையோடு இனைந்த வாழ்வை  மேற்கொள்ளும் அன்பர்களுக்கும்,எவ்விதமேனும் அன்பால் இறை உணரும் அடியவர்களுக்கும்,பக்திவழியில் வரும் அன்பர்களுக்கும், வாழ்வில் எத்தகைய பிரச்சனையானாலும் அல்லது எவ்வளவு பெரிய கொடிய இன்னல் வந்தாலும் ,திருஅண்ணாமலையை ஒன்பது முறை கிரிவலம் வருவதால்  அருணாச்சலேஸ்வரின் அருளால்,அவர்கள் பிரச்சனைகள் ,இன்னல்கள் சரிசெய்யப்படுகிறது.காலம் கனியும் வரை பொறுமையாக இரு,அண்ணாமலையாரின் அருள் அலைகள் கர்மவினையால் பீடிக்கப்பட்ட சூட்சுமசரீரத்தை சுட்டெரித்து சாம்பலாக்கிவிடும்.பிறகு விரைவில் அது ஸ்தூல உடம்பில் நடைமுறைக்கு வரும் .வாழ்வு அமைதி பெரும் ..!!இறைநோக்கி ஆனந்தம் மிகும்.அருணாச்சலேஸ்வரின் அருள் அலைகளோடு ,மீண்டும் அகத்திய உள்ளங்களை வேறுஒருநிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!








Comments

  1. அருனாசலசிவ அருணாசலசிவ அருணாசலா எம் நெஞ்சம் நிறைந்தது கண்கள் நிறைந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஓம் அருணாசலா போற்றி ஓம் அகத்தீஸவரா போற்றி

    ReplyDelete
  2. அருனாசலசிவ அருணாசலசிவ அருணாசலா எம் நெஞ்சம் நிறைந்தது கண்கள் நிறைந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஓம் அருணாசலா போற்றி ஓம் அகத்தீஸவரா போற்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி