வானோர் பிரான் ...!!!




 இறை எனும் ஞானம், இறை எனும் வேதம் ,இறை எனும் வெளி ,இறை எனும் வெட்டவெளி,இறை எனும் தூய ஜோதி, அண்டத்துள்ளும் ,இந்த பிண்டத்துள்ளும்,நீக்கமற நிறைவாக நிறைந்த இத்தத்துவத்தை எவனொருவன்  தம்முள் உணர்கிறானோ ,அவனே நிறைவுபெற்ற மனிதாகிறான்.அவனுக்கு இறப்பும் என்பதில்லை.மீண்டும் பிறப்பும் என்பதுமில்லை. நீரும் நெருப்பும் ,காற்றும் விண்ணும் ,மண்ணும் ,இந்த பிரபஞ்சமும்  தம் இயற்கை ரகசியங்களை எல்லாம்,  அவனுக்கு அவை தாமே முன்வந்து உணர்த்துகிறது.அஷ்டமா சித்திகளை எல்லாம் வாரி வழங்குகிறது.

எவ்வளவு  அழகும் மிளிர்வும்  வளமைகுன்றா செழுமையும் நிறைந்தது  இறைநிலையால் படைக்கப்பட்ட இந்த உலகம். 
  எதை தேடுகிறோமோ  அதை அவ்வழியே மிக அழகாக வாரிவழங்கிக்கொண்டேயிருக்கிறது.அள்ள அள்ள குறையாத ஜீவ  அமிர்த  அலைகளை  தந்துகொண்டேயிருக்கிறது.இறைநிலை அது ஒன்றை தவிர இங்கே இந்த பூவுலகில்,தேடுவதற்கு வேறு எதுவுமில்லையடா என சொல்லாமல் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.இறையை  உணர  இடமோ மொழியோ,பணமோ,அந்தஸ்தோ, எதுவுமே தேவையில்லை என்கிறது.எம்மை நோக்கி எமது மாபெரும் பிரமாண்ட இந்த சிருஷ்டியில்,ஒரு துளி அன்போடு எம்மை பற்றி, எம் தன்மைபற்றி அறிய முற்படு .அதுவே   உமக்கு யாரும் தர இயலா ஆனந்தம் தரும், நிறைவு தரும்,முக்தி தரும் என்கிறது இறை.எத்தனை செயல் புரினும்,எத்தனைதொழில் புரினும் ,இறைநோக்கிய அறிவு இல்லை எனில்அங்கே நிறைவு இல்லை .ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வே மிஞ்சுகிறது.அந்த ஒன்றே இறை எனும் யாம்.எந்த ஒன்றை அறிந்தால் எல்லாம் பெறமுடியுமோ,அந்த ஒன்றை அறிந்து அதில் ஆழ்ந்து ,அதில் மூழ்க எடுத்த இந்த ஈனப்பிறவி அர்த்தம் பெறுகிறது,முழுமை பெறுகிறது.இல்லை எனில் வாழ்கை எனும் வட்டத்தில்,கர்மவினையில் சிக்கி, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து  கொண்டேயிருக்க வேண்டியதாகிறது.


 தூய்மையான  மிக நுண்ணிய மின்னிடும் , வெண்மையான மிக நுண்ணிய அணுக்களால் ஆனது போன்ற ,மிக மிக நுண்ணிய அலைகள் ,வெண்மையான ஒளித்துகள்களால் கோர்க்கப்பட்ட அன்பின் அலைகள், சிறிது சிறிதாக இருக்கும் இடமெங்கும் மெல்ல மெல்ல வியாபிக்கிறது. மெல்ல மெல்ல இருக்கும் எதையும் கவர்ந்துகொள்கிறது.ஒரு கட்டத்திற்கு பிறகு  அப்படியே ஆட்கொள்கிறது.அன்பெனும் ஈர்ப்பு அலைகள்,இந்த  அலைகள் எங்கு இருக்கிறதோ அந்த இடத்திற்கு ,அந்த பொருளுக்கு,அந்த உயிருக்கு  ஒரு வர்ணிக்க இயலா,இது இப்படிதான் என்று சொல்ல இயலா  ஒரு ஈர்ப்பு தன்மையை கொடுத்துவிடுகிறது.ஒரு மதிப்பு வந்துவிடுகிறது.ஒரு முழுமைதன்மை வந்துவிடுகிறது. ஒரு நிறைவுத்தன்மை வந்துவிடுகிறது.யாவற்றையும் ஈர்க்கும் தன்மை வந்துவிடுகிறது .ஏனெனில் இறையின் தன்மை ,இந்த  ஒன்றில் மட்டுமே எதுவும் ,யாரும் எந்த கேள்விகள் இன்றி, ஒன்றி ஒன்றுமே இல்லாமல் போகும் நிலை வருகிறது.இந்த ஒரு அலையே யாருக்கும் உடனே பிடித்துவிடுகிறது அல்லது இது யாரிடம் இருக்கிறதோ அவரை யாருக்கும் உடனே பிடித்துவிடுகிறது.உண்மையின் சொரூபம்.அப்பளுக்கற்ற தூய இறை எனும் பேராற்றல்.எமை ஆளும் நாயகன்.பிரபஞ்ச நாயகன்,.இவனே யாவருக்கும் நாயகன் .ஒப்பற்ற தலைவன்.பிரபஞ்ச பேராற்றல் நாயகன், அண்டசராசரங்களை ஈர்க்கும் அளவிடமுடியா ஆற்றல் உடைய  வானோர்பிரான்.அன்பிற்கு அடிமையானவன் .அன்பு ஒன்றே இவனிடம்  அழைத்துச்செல்லும் .எப்பொழுதும்  அன்பால் மூழ்கி ,அன்பால் நெகிழ்ந்து ,அன்பெனும் ஆற்றலை கரைபுரண்டு   ஓடசெய்பவன் .இமை பொழுதும்  நெஞ்சத்துள் நீங்காமல் இறையோடு இறையாக இவனை உணர முற்படவேண்டும்.

 எல்லை இல்லாமல் ,பரந்து,பரந்து,விரிந்து ,விரிந்து ,கற்பனை செய்ய இயலா தூரத்திற்கும் மேல் சென்று அதற்கும் மேல் சென்று  எங்கும் நிறைந்து நிற்கும் பிரமாண்ட  பேரியக்க நாயகனின்  அளவிடமுடியா ஆற்றல் .இப்படி எல்லை இல்லா ஆற்றலை உடைய நாயகனின் அன்பு பார்வை  படாத இடமே இல்லை இந்த சிருஷ்டியில் .எல்லாமே இறைநிலையே.!! நாம் பார்க்கும்,கேட்கும்,தொடும் சுவாசிக்கும்,எல்லாம் இறையே.இறையின் பரிணாம மாற்றத்தில் மாற்றம் பெற்றவையே. இறையின் பரிணாம மாற்றத்தில் எதிலிருந்து வந்தோம் என்ற உண்மை மறந்துவிட்டதால் ,மாயையிலும் அகங்காரத்திலும் இந்த உயிர் சுழன்று ,தம் உண்மைதன்மையை  இழந்து ,இன்று  செய்வதறியாது ஏங்கிநிற்கிறது .இதுவே தம்மை உள்நோக்கி ,எங்கிருந்து வந்தோம், எம் மனதின் மூலம் என்ன ?எம் உயிரின்  மூலம் என்ன ?  என மனதினை உட்செலுத்த  முற்பட ,அங்கே அன்பெனும் மிக அதீத  ஆற்றல் உள்ள அலைகள் ,கொஞ்சம் கொஞ்சமாக  உள்ளத்தை வாரிக்கொள்கிறது.உள்ளத்தை அன்பால் நிரப்புகிறது.சப்தமற்று அமைதியால் திளைக்கிறது.பேரமைதி நோக்கி இழுத்துச்செல்கிறது. அன்பால் பின்னி பிணைந்த பாச அலைகளில் திளைக்கிறது.தாயை விட்டு வெகு காலம் பிரிந்த சேய்,அது மீண்டும் தமது தாயிடம் சேரும் போது, எவ்வாறு மகிழ்ச்சி கொள்ளுமோ ,ஆனந்தம்கொள்ளுமோ அது போல் ,இந்த சிறிய  ஆன்மா எனும் இறை , பேராற்றல் உடைய பெருமானை கண்டவுடன் பேரானந்தம் கொள்கிறது .பெருமிதம் கொள்கிறது.மகிழ்ச்சியால் திளைக்கிறது.,போதிய அன்பும் அரவணைப்பும் என்றும் தந்துகொண்டேயிருக்கிறதுஇறை எனும் பேராற்றல்.


 நண்பர் ஒருவருடன் ஒரு நீண்ட தூர பயணம் மேற்கொள்ளவேண்டியிருந்தது.அன்றைய தினம் பூஜை செய்ய இயலாததால் கிடைத்த ஒரு இடத்தில் அமர்ந்து ஸ்ரீ ருத்ரம் சொல்ல ஆயத்தமானோம். அன்பரே!, சற்றே விழிப்புடன் நடப்பதை கவனியுங்கள் என்று ருத்ரம் சொல்ல ஆரம்பித்தோம்.ருத்ரம் சொல்ல சொல்ல ,எங்கேயோ இருந்து மெல்லிய காற்று எங்களை சூழ்ந்தது ,இந்த மெல்லிய காற்று கொஞ்சம் அதுவே அடர்ந்து,படர்ந்து எம்மையும் நண்பரையும்  அருகில் இருக்கும்  மரம் செடி கொடி என அனைத்தையும்  கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ருத்ரமும் ,மெல்லிய காற்றும் ,அன்போடு பின்னிபிணைந்த சிவனின் தார்மீக அலைகளும்,எங்கள் உள்ளத்தோடு ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத நிகழ்வாக வெகுநேரம் தொடர்ந்தது. எங்கெங்கும் பேரமைதி வியாபித்து இருந்தது. இறையை உணர  ஒரு அடி தான் எடுத்துவைத்தோம்,இங்கே இறைவன் பத்துஅடி என்ன,சொல்ல இயலா அடிகள் மூலம், அலைகள் மூலம் எங்களை முற்றிலும் ஆக்கிரமித்துவிட்டான்.யாவற்றையும் ஒடுக்கும் சக்தியுடைய ருத்திரனை ,இங்கே நிலவும் பேரமைதியில் அன்பால் கசிந்திருப்பதை உணர்ந்தோம்.

மனம் லேசானது.... ...நிறைவானது..அமைதியானது...ஆனந்தமானது... இது ஒன்றே போதும் என தோன்றுகிறது.எதை பற்றியும் சிந்தனை இல்லை தற்பொழுது.எத்தனை கமிட்மென்ட் எதுவும் இம்மிகூட, இந்த இறை தந்த, அன்பின் நிகழ்வுகளை,அதன்  நிலையினை அசைக்ககூடமுடியவில்லை.ஆட்டிபடைக்கும் கோள்களின் தாக்கம் எங்கே ? கர்மவினை அலைகள் எங்கே ? எங்கே ...? எங்கே...? என தேடும் அளவிற்கு ,எல்லாம் ஓடி மறைகிறது.இறை நிகழ்விற்கு மட்டும் தான் இவை யாவும் அவை இருக்கும் இடம்தெரியாமல் ஓடிவிடுகிறது. இருக்கும் நேரத்தில் இது போன்ற தருணம் பொற்காலமாகிறது. இதுவே நிறைவுதருகிறது.இதுவே முழுமை தருகிறது.இதுவே ஆனந்தம் தருகிறது ..இதுவே பேரானந்தம் தருகிறது..இப்படியே இந்த அலைகள் இன்னும் இன்னும் நீடித்துஇருந்தால் என்ன என்று தான் எண்ணத்தோன்றுகிறது. ,இந்த அலைகளே வாழ்வை செம்மைபடுத்தி அர்த்தமுள்ளதாக்குகிறது..இறைபற்றி அவன் பெருமையினை நினைக்க, அவனை உணரஆரம்பிக்க, மனம் பூத்துகுலுங்கும் நந்தவனம் போல துள்ளிக்குதிக்கிறது


எங்கிருந்து இந்த காற்று வருகிறது அதன் மூலம் யார் என தேட ,மனதின் அலை சுழல் குறைந்து ,மெல்ல மெல்ல மென்மையாய் மாறுகிறது.அரவணைக்கும் மெல்லிய காற்றின் மூலம் யார்...? எனும் ஒரே ஒரு கேள்வி ,ஒரே ஒரு சிந்தனை ,மனதினை அதன் அலை சுழல்களை குறைத்து,அப்படியே மனதினை ஒடுக்கி, ஆழ்ந்துபோகசெய்து,இறைநிலை நோக்கி செல்லவைத்துவிடுகிறது.மனதினை சுத்தமாக எதுவே செய்யயியலாமல் கட்டிபோட்டுவிடுகிறது.இறைபற்றிய ஏக்கமும்,நெகிழ்வையும் ஏற்படுத்தி,இறைக்கும் நமக்கும் உண்டான பாசஅலைகளை ஈர்க்கிறது.மேலும் அதுவே தொடர்ந்து ,ஆழ்ந்து ,நீண்டு ,விரிந்து ,பரந்து,எங்கெங்கும்  அரவணைத்து அதன் மூலம் நோக்கி அழைத்துச்செல்கிறது. இங்கே சப்தங்கள் நிசப்தமாக மாறுகிறது .ஒன்றுமே இல்லாத  ஒன்று உப்பி பெருத்து விரிகிறது.விரிந்துகொண்டேயிருக்கிறது ,விரிவதுமட்டுமில்லாமல் தாமே விரிந்து ,பிறகு தமக்குள்ளே  யாவையும் அரவனைத்துக்கொள்கிறது.எதையும் விட்டுவைப்பதில்லை ,எல்லாவற்றையும் தமக்குள்ளே உருவாக்கி,ஆழ்த்தி,அமிழ்த்தி, நிகழ்த்தி ,வேடிக்கை பார்த்து ,செயல்படுத்தி,நிறைவுசெய்து,பிறகு  ஒன்றுமே இல்லாமல் ஆகவைக்கிறது.


இது போன்ற நிகழ்வுகள் மனதினை செம்மைபடுத்துகிறது.ஏதோ மனதிற்கு ஒரு தெம்பினை ஊற்றுகிறது.யாருமே தர இயலா ஆற்றலினை பெற்றுதந்துவிடுகிறது.சாந்தம் தருகிறது .கொஞ்சம் கொஞ்சமாக  எதையும் கணிக்கும் தன்மை தருகிறது.ஒரு தகுதியை தருகிறது.ஒரு நிறைவினை தருகிறது.இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அன்றாட வாழ்வில் தேவைப்படுகிறது.
" நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் ....." எனும் மாணிக்க வாசக பெருமானின் திரு வாசகங்களுக்கு அர்த்தங்களை புரியவைக்கிறது .இறைநிலையோடு இருக்கும் நொடிகள் வாழ்வின் மிக சிறந்த நொடிகள் .வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் நொடிகள் .இறை உணர்வோம் வானோர்பிரானின் அற்புதங்களை உணர்ந்து வாழ்வை பயனுள்ளதாக்குவோம் என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி, வணங்கி,,மீண்டும் அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் .



ஒம் அகத்தீஸ்வராய நமஹா..!!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா...!!! 
ஒம் அகத்தீஸ்வராய நமஹா...!!!



Comments

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்