சிவமும் சிவயோகியும் .!!


இந்த உலகத்தில்  எழுதிவைக்கப்பட்ட வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று நாம் கண்ணால் காணும் காலம் வரை  எத்தனை ,எத்தனை, சிவயோகிகள் ...!! ஒம் நமசிவாய எனும் தாரகமந்திரம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு  சிவத்துள் தம்மை மறந்த எத்தனை எத்தனை  ஆயிரமாயிரம் மகான்கள் ..!!!  அவர் தம் ஜீவசமாதிகள்..!!,இவை தமக்குபிறகும் தொடரவேண்டும் ,சிவமே இறைநிலை ,இறைநிலையே சிவம், என மக்கள் சிவத்தை உணரவழிவகை செய்ய, இவர்கள் சூட்சுமாய் அரூபமாய் இன்றும் ....இன்றும்....இப்பொழுதும் .... இந்த காலகட்டத்திலும்  அன்புள்ளம் கொண்ட ஆத்மாக்களுக்கு வழிநடத்தும், சிவலயத்தில் ஈடுபடுத்தும் ,இவர்கள் கட்டிவைத்த ,எத்தனை எத்தனை  பெருமைமிகு சிவஆலயங்கள்  !!.இம்மண்ணில் பிறப்பெடுத்ததற்கே பெருமை அல்லவா கொள்ளவேண்டும் ..!! அதுவும் புண்ணியவான்கள் அருள்சூழ்ந்த இடத்தில் வசிப்பது,சுவாசிப்பது, இருப்பது ,நடப்பது,என அனைத்தும் ஒரு சுகமான அனுபவமே...அதுவும் அவர்கள் அரவணைப்பில் வாழ்வது இறை அருகே நம்மை தாமாகவே அழைத்துசென்றுவிடும் !!

இன்றும் நம்மால் உணரஇயலாத ,சிவலயத்தில் இருக்கும் மகான்கள், இன்றும்.... என்றும்... இவர்கள் யாவரும் சிவத்துள் மூழ்கும் காரணம் தான் என்ன ? புரிய இயலா சிவனின் ஆற்றலா !? எதற்கும் மூலமான சிவத்தின் ஈர்ப்புஅலைகளா !? ஆதி அந்தம் இல்லாத இவன் நடத்தும் லீலைகளின் ,ஓர் அங்கமாக இன்று இருக்கும் இந்த ஆத்மாவின் பெருமைஉணர்ந்து ,இந்த நீர்க்குமுளி வாழ்விற்கு முற்றுப்புள்ளிவைக்கும் ஒரு நாடகமா !? யாவற்றையும் ஒன்றாக சமநேர் நோக்கான பார்வையுடன் பார்த்து ,கோடான கோடிஆத்மாக்களையும் அன்பால் அரவணைக்கும் ,என்றும் வற்றாமல் ததும்பி வழியும் அன்பு அலைகளின் அதிநுட்ப திறத்தை காண்பிக்க நினைக்கும் ஒரு பயணமா !?  எம்முள் இருந்து தானே இந்த ஜடம் முதல் இதழ் வாசிக்கும் அன்பர் வரை ....இறையாகிய எம் பயணத்தில் ,எம்மை யாமே அறியும் பயணத்தில், இடைப்பட்ட ஒரு நிலைதானடா தூசிக்கும் கீழுள்ள  உமது கர்மவினை, அதனால் உண்டான பாவ புண்ணியங்கள் யாவும் ,எதுவும் உமதல்ல ,எதுவும் நிரந்தரம் அல்ல, யாம் ஒருவனே நிரந்தரமானவன், என்பதை உணர்த்த இவன் செய்யும் புரிய இயலா விந்தையா ....!? இவனின் அன்பை தான் அளவிட முடியுமா ? கற்பனைக்கு எட்டாத சப்தமாய், நிசப்தமாய் விரிந்துகொண்டேயிருக்கும் பிரபஞ்சத்தை படைத்து,அதில் ஆயிரம்  ஆயிரம்கோடி ஜீவராசிகளை உருவாக்கி,அனைத்திற்கும் அமுது படைத்து, செயலுக்கேற்ற விளைவு தந்து, அரவணைத்து ,காத்து, என்றும் அன்பு அலைகளை ஊடுருவ செய்து, எவனும் தம் நிலைஅறிய இயலாத ஆற்றல் எம்முள் உள்ளது  என்பதை விளக்கும், யாரும் அறியமுடியாத தத்துவமா ?!

யார் அறிவார் சிவனின் திருஉள்ளம்....!! அடர்ந்தும் ,படர்ந்தும், ஆழ்ந்தும் அகன்றும், விரிந்தும் ,எங்கும் எங்கெங்கும் யாவற்றையும் சூழ்ந்துள்ள இவன் தன்மை இவன் பெருமை யார் அறிவார் ...!!! இவனை உணர ஆரம்பித்தவர் இவனுள்ளே மூழ்கினர் ...மூழ்கியவர் அவர் தம் பயணத்தை தொடர்ந்தவண்ணம் உள்ளனர்.!!


எதற்கும் ஒரு மூலம் சிவம், எந்த ஒரு மந்திரத்திற்கும் மூலம் .."ஒம் நமசிவாய" எனும் மந்திரம்.சர்வமும் இதில் அடக்கம்.ஒம் நம சிவாய எனும் சிவ மந்திரத்தில் ஒளிந்துள்ளது ஒரு நாயோட்டு மந்திரம். அது என்ன நாயோட்டு மந்திரம் ? சிவனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? சிவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ? சிவ யோகியருக்கும் இந்த நாயோட்டு மந்திரத்திற்கும் என்ன தொடர்பு ? இந்த நாயோட்டு மந்திரத்தை சரியாக புரிந்துகொண்டால் ,சிவலயம் கிட்டிவிடுமா? இங்குள்ள சரியான சூட்சுமத்தை புரிந்துகொண்ட சிவயோகியர்  தம்மை இதில் இழந்து,ஒரு சிவ பழமாக,  சிவத்தின் சாரமாக , இந்த சிவத்தில் மூழ்கிகொண்டேயிருக்கும்  இரகசியம் தான் என்ன...!?

பின் வரும் மந்திரத்தை இங்கு உள்ளது போலே இடைவெளிவிட்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள்..

சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!

சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!
சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!சிவாய சிவாய சிவாய நம ஒம் !!!


தொடர்ந்து சொல்லி உடலில் மனதில் வரும் அதிர்வலைகளை நன்கு உள்வாங்கிபாருங்கள்,சிவம், சிவ அதிர்வு ,வேரறுக்கும் கர்மவினையை.



சிவயோகி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளமாட்டான்,எல்லா மருத்துவமும் தெரிந்தவன் ,அத்தனை வர்மபுள்ளிகளும் இவனுக்கு அத்துபடி, தாம் செய்யும் எந்த மருத்துவத்திற்கும் அதற்கான மருந்திற்கும் சன்மானம் வாங்கமாட்டான். ஏனெனில் இவன் வந்த வழி சிவன் வழி,சிவனுக்கென எந்த சொத்தும் கிடையாது .ஏனெனில் எல்லாம் சிவன்  சொத்து ,எல்லாத்தையும் சிவமாகவே பார்க்க பழகியவன் .இவன் திருவாய் திறந்து பேசினாலே அது ஒரு  சிவகீதை ,அது சிவ ஞானம், அது சிவ தீட்சை ,அது சிவ விளக்கம் ,அது ஒரு சித்தன் அருள் வாக்கு,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,,அந்த அளவிற்கு சிவத்தில் ஆழ்ந்து மூழ்கியவன் சிவயோகி.எளிமையே இவன் சிறப்பு.இப்படி ஒரு சிவயோகி இந்த காலகட்டத்தில் வாழஇயலுமா ? இவை எல்லாம் இந்த கலியுகத்தில் சாத்தியம் தானா ? .ஒரு நல்லவர் உண்மையை சொன்னாலும் அதை ஓராயிரம் முறை பதம் பார்த்து ,ஏண்டா இந்த உண்மையை அவர் சொன்னார் என ,அவரை துவம்சம் செய்துவிடும் அளவுக்கு , பழக்கபடுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் இது.

இளம் சிவயோகி ஒருவர் மெல்லிய தேகம் ,கருமையான நிறம், நீண்டதலை முடி,கருமையான தாடி,ஆங்காங்கே அழுக்கு நிறைந்த ஒரு வெள்ளை நிற பைஜாமா உடை,கண்களில் ஒருவித கருணை ,எப்படி எனில் இவர் பார்க்கும் எவரையும் ,அவர் உள்சென்று அவருள்ளே ஆழ்ந்து அங்குள்ள இறைநிலையை பார்க்கும் திறம்.எதை பற்றியும் ஒரூ கவலை இல்லை இந்த யோகிக்கு,இருக்கும் இந்த நிமிடத்திலும் அவருக்கு ஒரு பெரியவர் இட்ட கட்டளையில் தம் சிரம் மேற்கொண்டு பணிசெய்துகொண்டிருந்தார் .இப்படிப்பட்ட ஒரு சிவயோகி நீண்டு நெடிய மலைகள் சூழ்ந்த ,இயற்கை எழில் மற்றும் மூலிகைகள் நிறைந்த ,அமைதி ஆழ்ந்து குடிகொண்டிருக்கும்  ஒரு மிக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திற்கு அருகில் எமக்கு தரிசனம் தருகிறார் .இவரோடு எமக்கு ஏற்பட்ட அனுபவம் " இது அன்பின் ஆழம்..." கட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளோம்,மீண்டும் படித்து தெரிந்துகொள்ளவும்"


ஒரு சிறிய மேடை  அங்கே அமர்ந்து  பேசுகிறார்.எம்மைபோல் மற்றவர்கள் எல்லாம் அந்த சிறிய இடத்திலே அமர்ந்து சிவயோகியை, அவர் பேசும் வார்த்தை ,அவர் செய்கை இவைகளை கவனித்துக்கொண்டேஇருந்தோம்.

"...இங்குள்ள ஒரு பெரிய ஐயாவை பார்த்தேன்.அவர் வழக்கம் போல என்னிடம் கேட்டார்,இன்றைக்கு எத்தனை முட்டாள்களை பார்த்தாய் ,இன்னும் எத்தனை முட்டாள்களை பார்க்கப்போகிறாய் என்றார்..... என்று ஆரம்பிக்கும் போதே சூசமகாக எங்களை எல்லாம் பார்த்து தம் பேச்சை தொடர்கிறார் ......எல்லாரும் சுப நிகழ்ச்சிக்கு தான் முன்கூட்டியே பத்திரிக்கை அடிப்பர்.ஆனால் நானோ எனது தந்தையாரின், அவர் உயிர்உடன் இருக்கும் போதே, அவர் ஈமசடங்கு  எப்போது நடக்கும் என துல்லியமாக கணித்து, அதற்கு பத்திரிக்கை அடித்தேன்.....". சென்னையில் உள்ள ஒரு பல்கலைகழகத்திற்கு ஒரு விளக்கவுரை பேராசிரியாக ஒரு சில பாடங்களை எடுப்பதாகவும்,அதற்கு கிடைக்கும் சன்மானத்தை சிவகாரியத்திற்கு பயன்படுத்துவதாகவும்,ஒரு பிரபல இயக்குனர்   இவரை சந்தித்து ,எதை வைத்து படம் எடுக்க சாமி என கேட்க ,  நான் கடவுள் நான் கடவுள் (சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை) வைத்து படம் எடு என்று  சொன்னதாகவும் .(இயக்குனர்  அவர்கள்  எடுத்த படம் , அதில் வரும் அந்த சிவயோகியின் ,நடை,உயரம்,தாடி,நீண்டமுடி, எல்லாம் இந்த மகானை கிட்டதட்ட ஒத்துள்ளது.ஆனால்  இந்த மகான் மெல்லிய தேகம் ,கருணை நிறைந்த கண்கள் ,மிக சாதுவான தோற்றம்,) .அரசியல் பெரும் தலைவர் ஒருவர் இவரை பத்தொன்பதாவது சித்தன் என உரைத்தது என இது போன்ற  நிறைய சொன்னார்.

இவை எல்லாம் physical interatcion தானே.இந்த ஸ்தூல உடம்பால் ,இந்த மனதை வைத்துகொண்டு கேட்டது.ஆனால் எமக்கும் இந்த சிவயோகிக்கும் ஏற்பட்ட அனுபவம்  முற்றிலும் வேறுபட்டது இது போன்ற physical அனுபவம் அல்ல.இது ஒரு வேறொரு உலகம்.சத்திய உலகம்,உண்மை மட்டுமே மிளிரும் உலகம்,இது போல உலகம் இன்னும் இருக்கிறதா !?இவை எல்லாம் சாத்தியமா ...?!  இந்த மகான் கையை அசைத்து தட்டினால் எப்படி அருகில் இருப்பவரின் சூட்சும தேகம் பயணம் செய்யஆரம்பிக்கிறது...?இவை உண்மை தானா ...? என பல வினாக்கள் எழும்.இவை உண்மை எனில் இதில் திணித்துவைக்கப்பட்டுள்ள,இந்த அலை இதழ் வாசிக்கும் உள்ளங்களை தம் மனஅதிர்வுநிலையை கண்டிப்பாக குறைக்கும் என்பதும் உண்மை ,சிவ பயணத்தில் இப்படி ஒரு கண்ணோட்டமா ? என ஆழ்ந்து சிந்தனை செல்லும் என்பதும் உண்மை. கண்டிப்பாக ஒரு சிறு மாற்றம் உணரமுடியும்.


சதுரகிரியில் யாம் சந்தித்த அந்த இளம் சாது,சிவயோகி  (அகத்தியரிடம் அடிக்கடி பேசும் சீடர்) எம்மை  ஒரு சிறிய சிவ ஆலயத்திற்கு அழைத்து செல்கிறார்.ஒரு சிறிய சன்னதி அங்கே ஒரு அழகான சிவலிங்கம் ,மிகவும் சிறியது .அந்த சன்னதிக்கு வெளியில் இந்த இளம் சாது இருக்கிறார்.அவருக்கு அருகிலே ,பக்கத்தில் ஒரு நல்ல இளமையான மனிதர்,மிகவும் ஒரு தேஜஸ்வுடன் ,அருள்ஒளி நிறைந்த முகம் ,கருமையான தாடி, தூய ஒளி வீசும் வெண்ணிற வேஷ்டி அணிந்து  தெய்வசக்தியும் ,கருணையே வடிவான கண்களும்,இறைஅருள் நிறைந்த அன்பால் அனைத்தையும் ஈர்த்துகொண்டேஇருக்கிறார்.வேதங்கள் யாவற்றையும் அதன் நுனிமுதல் அடி வரை பயின்று ,கற்பதால் அதற்கே உரித்தான ஒரு தோரணையும் ஆனால் எந்த கர்வமும் அற்று ,வேதத்தின் சாரமாக ,அன்புள்ளம் கொண்ட மகாமனிதராக ,சதா சர்வகாலமும் என்றும்  ஈசனே தம் நினைவாக ,இருக்கிறார்கள் இந்த பெரியவர்.இவர் யார் ? எப்படி உடலில் இந்த அளவுக்கு ஒரு தேஜஸ் ? இவர் அணிந்திருக்கும் இந்த வெண்ணிற உடையே எம்மை தூக்கிவெளியே எறிகிறதே !?.இந்த வெண்மை எம்மை பார்த்து ,"இங்கு நிற்கும் அளவுக்கு உமக்கு  தகுதி உள்ளதா ?" என கேட்பது போல ஒரு பிரம்மை வருகிறதே..?! யாராக இருக்கும் என எம்மால் கணிக்க முடியவில்லை.சாதுவாகவும் தென்படுகிறார்,அதே சமயம் சர்வவல்லமை நிறைந்து அன்பும் கருணையும் நிறைந்த மாமனிதராகவும் தென்படுகிறார்.


சிவயோகி எம்மை அந்த வேதமனிதரை நோக்கி வணங்க சொல்கிறார் .யாமும் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்தோம் .ஏன் எதற்கு என்ற கேள்விகளெல்லாம்  இப்பொழுது எழவில்லை. ஏனென்றால் சதுரகிரி சாதுவுடன் (சிவயோகியுடன்) எமக்கு மிக நிறைந்த அனுபவம் ஏற்கனவே இருக்கிறது ("அகத்தியம்  இது அன்பின் ஆழம் "..படிக்கவும்). எமக்கும் இந்த பெரியவருக்கும் ஒரு ஈர்ப்பு அலைகள் இருப்பதை உணர்கிறோம்.  ஏதோ ஒரு இனம் புரியா ஈர்ப்பு அலைகள்.அன்பினால்  உண்டான ஒருவித தெய்வீகம் எமக்கும்  அவருக்கும் அல்லது அவருடன் அவர் பார்க்கும் யாவருக்குமே இது பொருந்தும்.இவர் பார்த்தால் எந்த ஒரு உயிருக்கும் அன்பு அலைகள் துள்ளி எழுந்துவந்து அணைத்துக்கொள்ளும்.அந்த அளவுக்கு இறைசக்தி நிறைந்த ஒரு மகான் அவர். இப்படி இருப்பவரின் கண்களின் கருணையை எதிர்கொள்ள முடியுமா ?  சொல்ல வார்த்தை இல்லை,எம் கண்கள் அவர் தம் கருணை பார்த்து ,அன்பின் வெளிப்பாடாகிய கண்ணீரை மல்கிறது.

எனவே எம்மை அழைத்துசென்ற சிவயோகி எது சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருந்தது எம் மனம். எம் மீது மிகுந்த அக்கறை கொண்டு, எனக்காக அவர் செய்த செயல்களுக்கெல்லாம் எம்மால் எப்போதும் ஈடு இணை செய்ய முடியாது ..!!எனவே அவர்சொல்படி அந்த இளமையான வேத மனிதரின்  முன் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம் .பிறகு எழுந்து வணங்கினோம் .பிறகு யாம் சிவயோகியின் அடுத்த கட்டளைக்காக அவரை பார்த்தோம்

அப்போது யாம்  நமஸ்காரம் செய்த அந்த வேதமனிதர்சொல்கிறார், "உனது மூன்று கர்ம வினை பதிவுகள் அழிக்கப்பட்டன.."உடம்பெல்லாம் எமக்கு சிலிர்க்கிறது.இருகரம் கூப்பி தாமாகவே வணங்குகிறோம் அந்த வேத மனிதரை.


பிறகு அங்கிருந்து அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து செல்லுகிறார்.அதுவும் ஒரு சிவாலயம் .இது கொஞ்சம் பெரிய கோவில் முன்பு பார்த்ததை விட.அங்கு உள்ள அனைவருமே வெண்ணிற வேஷ்டி மற்றும் சட்டையுடன் அமர்ந்து சிவ மந்திரம் சொல்லி சிவ பூஜையில் லயித்து உள்ளனர். அனைவருமே நல்ல தேஜஸ்வுடன் உள்ளனர்.பிறகு அந்த சிவ யோகி இவர்களுடன் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்.அவர் அங்கு உள்ளவருடன் நிறைய வேலைகள் செய்கிறார் என்பது தெரிகிறது .அவர் அருகில் ஒரு இடம் காலியாக உள்ளது .ஆனால் யாமோ வேறொரு இடத்தில நிற்கிறோம் .உடனே அவர்  எம்மை நோக்கி கையை அசைத்து "ங்கு வந்து அமர்...  "என்று சொல்லுகிறார்.உடனே யாம் சென்று அவர் அருகே அமர்கிறோம். அவர் அருகில் அமர்ந்ததால் ,அனைவரும் பார்க்கின்றனர் .ஒருசிலர் எம்மருகே வந்து நீங்களும் இந்த சிவ பூஜையில் முன்னரே வந்துவிட்டீர்களா ? என்கிறார்கள் .

ஒருசிலர் எனது நாடி பார்த்து,எமது மூச்சு ஓட்டத்தினை பார்த்து  .."ஒ பிங்கலை நாடி தான் ஓடுகிறது ..நல்லதே ..!"சிவ பூஜைக்கு உகந்த நாடி  ..சரியான நேரம் .. என்கிறார்கள் .


அது ஒரு சிவ ராத்திரி போல, விடிந்தால் சிவனின் ஒரு மிக பெரிய விழா இருப்பது போல தெரிகிறது .அனைவரும் அந்த நிகழ்வுக்காக மந்திரம்சொல்லி காத்துக்கொண்டிருகின்றனர்.எங்கெங்கும்சிவம் ..சிவமயம் ..சிவனின் நாம மந்திரம்.....வேதமந்திரங்களின் கணீர்கணீரென்ற ஒலி ,அந்தசிவமண்டபம் முழுவதும் நிரம்பிவழிகிறது.உடலில், மனதில்,உயிரில், சூட்சும தேகத்தில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் சுரீரென்று ஒலிக்கிறது. அடிக்கடி எம்மை சிக்கலில் மாட்டவைத்து ,தம் வினை தீர்க்கும்  பதிவுகள் எங்கே என கேட்கும் அளவிற்கு , கூனி குறுகி கேட்பாறற்று ,தாக்கமற்று துரும்பாய் துவண்டே போய்விட்டென எமது கர்மவினை பதிவுகள் .இங்கே சிவம், சிவ ஒளி ,சிவ நாமம் ,சிவ மந்திரம்,சிவ அதிர்வு,சிவ தரிசனம்,எல்லாம் சிவமே அனைத்தும் சிவமே !!..சிவனின் வேத மந்திரம்,முழங்க முழங்க ,அதிர்வு அலைகளின் அடர்த்தி (density) மெருகேறி மெருகேறி,சிவத்தையே நேரில் கொண்டுவருவது போல்,சொர்க்கலோகம் போல் ,என்றும் ஆனந்தம் தரும் அன்பு அலைகள் சூழ்ந்த உலகம் போல் ஜோதியாய் ஒளிர்கிறது.வேத மந்திர சிவ நாம ஒளி ,இங்கே சதா சர்வ காலமும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது..!! எவர் இங்கு நுழைந்தாலும் அவர் தம் சூட்சும உடல் இங்கே புடம்போடப்படுகிறது.ஆக எந்த மந்திரமும் இன்றி,எந்த செயலும் இன்றி,இங்கே ஆன்மா தூய்மை பெறுகிறது,ஒளி பெறுகிறது.சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்யும் இடம். சிவயோகியின்  அருளால் கிடைத்த இந்த சூட்சும தேக பயணம் ,பயணத்தில் கிடைத்த அனுபம்  ,ஒருமுறை இங்கு சென்றுவந்தது  ,எம்மை முற்றிலும் அமைதிபெற செய்துவிட்டது ,மேலும் இப்பயணம் மீண்டும் தொடரும் என அந்த இளம் சாது சிவ யோகி, உரைத்த வார்த்தைகளும் ,எம்முள் மீண்டும் மீண்டும் ஒரு தெவிட்டாத ஆனந்தத்தை அள்ளி அள்ளி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

மூன்று கர்ம வினை பதிவுகள் அழிக்கப்பட்டன ...என்று சொன்னாரே ஒரு வேத மனிதர்... அவர்  இன்று  வரை  எமக்கு வைக்கும் சோதனைகளில் எல்லாம்,தோற்றுக்கொண்டேயிருக்கிறோம்...
யாம் கற்ற அறிவு ,எமது  விழிப்புநிலை எல்லாம் பயனற்று போய்விடுகின்றன இவர் முன்  ....தோற்றுகொண்டேஇருக்கிறோம்,  பலமுறை ..!!
அன்புள்ளம் கொண்ட  ஆத்மாக்களுக்கு என்றும் கருணை மழை பொழியும்  வேதத்தின்சாரமே..!!.எம்வேந்தனே...!!! ..ஞானத்தின்வடிவமே ..!!.தவஞானியே !!தவபுதல்வனே !!மகாமுனிவனே ...மகாஞானியே ..!! ஈர்த்தெம்மை ஆட்கொண்ட  எந்தை பெருமானே !! நின்பொற்பாதம் பட்ட மண்ணின் திருவடிகளை கூட தொட அருகதைஅற்றவன் யாம்....!! யாம் செய்தபிழைபொருத்து எம்மை மன்னியுங்கள் இறைவனே !! எம் தந்தையே
என்றும் உமது தரிசனம் எம்முள் காணவழிவகைசெய்யுங்கள் இறைவனே !!!


மீண்டும்  அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திப்போம்.!!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!



Comments

  1. உன்னதமான பகிர்தல் ஐயா , சிவம் வாழி சித்தர்கள் வாழி பதம் வாழி நீவிர் வாழ்வாங்கு வாழ்ந்து நீங்கா சிவயோகம் பெற கருணையே வடிவான அருட்பெருஞ்ஜோதியான மகா பைரவ பெருமானின் திருவடி சரணடைந்து வேண்டுகிறேன்..
    அடியேன் பிறப்பிடம் சதுரகிரி அருகே தான்... சான்றோர் தம் நட்பு தா என்று வேண்டிக் கொண்டேன் பைரவரிடம்... உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்